Tuesday, June 19, 2012

கோவையில் தண்ணீர் பஞ்சமா?? - சும்மா விளையாடாதீங்க..

இடம் : சரவணம்பட்டி அம்மன் கோயில் அருகில்.

வீட்டில் இருந்து ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டு இருந்தேன். ஒரு பணக்கார பங்களா அருகே வந்தவுடன், அதன் வாசலில் வீட்டின் உள்ளிருந்து ஆற்றைப் போலப் பெருக்கெடுத்து ஓடி சாக்கடையில் குடிநீர் கலப்பதைப் பார்த்தேன். உள்ளே எட்டிப் பார்த்தேன். பாதாளத் தொட்டி நிரம்பி நீர் வெளியே வழிந்து கொண்டு இருந்தது. வீட்டின் கேட்டிற்கும் வீட்டுக் கதவுக்கும் இடையில் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கும் போல .. கத்தினால் கூட கேட்காது. உரக்கக் கத்தினேன்.

 "அண்ணா .. யாராவது இருக்கீங்களா...??? "

தொலைகாட்சி சப்தம் குறைய ஆரம்பித்து ஒரு வயதான அம்மா மெல்ல வெளியே வந்தார்.

"தண்ணி வழிஞ்சு போகுதுங்க..."

"சரிங்க தம்பி.."

அவர் மெல்ல நடந்து பைப்பை போட்டு வேறொரு சின்டெக்ஸ் டாங்குக்கு தண்ணியை மாற்றும்வரை நின்று பார்த்து விட்டு நகர்ந்தேன்.. அதற்குள் எப்படியும் மூன்று குடம் தண்ணீராவது வீணாகி இருக்கும். (நான் வாராததற்கு முன்பு எவ்வளவு போய் இருக்குமோ..) .

அதையடுத்து ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்பேன்.. இதே போன்று இன்னொரு வீடு.. அங்கேயும் கூப்பிட்டு சொன்னேன். அடுத்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. வெளிவாசலில் இருந்து நீண்டு கொண்டு போனது ஒரு ரப்பர் குழாய். அந்தக் குழாயில் போகும் நீரை விட விரயமாயிருந்த தண்ணீர் அதிகமாக இருந்தது. மழை பெய்த இடம் போலக் காட்சி அளித்தது.
 

அதைத் தாண்டி கொஞ்ச தூரம் தள்ளி நடக்கையில் அருவி கொட்டுவது போன்று சட சடவென்று சத்தம்.. மோட்டார் போட்டு தண்ணீரை மேலே ஏற்றிக் கொண்டு இருந்தனர் போலும்.. மேல்நிலைத் தொட்டி நிரம்பியதைக் கூட அந்த வீட்டார் கவனிக்கவில்லை. அமைதி இழந்து நான் கேட்டைத் திறந்து உள்ளேயே போய் விட்டேன். கதவை இரண்டு முறை பலமாகத் தட்டினேன்.. திறப்பார் இல்லை. வெளியில் இருந்த நாலைந்து சுவிட்ச் களைத்தட்டி விட்டேன்.. ஏதோ ஒன்றின் மூலம் மோட்டார் நின்றது .

ஒரு வழியாக ஹோட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்புகையில் பார்த்தால் வழி நெடுக புதிது புதிதாக நீரோட்டங்கள்.. அவ்வளவும் குடிநீர்... வீட்டில் இருந்து வெளியேறும் பைப்புகளில் இருந்து தண்ணீர் சாக்கடைகளில் கொட்டும் சத்தம் காதைக் கிழித்தது.



இப்ப சொல்லுங்க சார்.. கோவையில் தண்ணீர் பஞ்சமா... விளையாடாதீங்க..

 கீழே காண்பவற்றை யோசிப்போம்.

 1 . தேவைக்கு அதிகமாக மாநகராட்சி தண்ணீரைத் திறந்து விடுவதால் தான் சேமிப்பு அளவைத் தாண்டியதும் மீதி நீர் விரையமாவாதை மக்கள் கண்டு கொள்வதில்லையா..??

2 . குடிசையில் மற்றும் சிறு வீடுகளில் வாழ்பவர்கள் கூடக் குடங்கள் வைத்து தண்ணீரை அழகாக வீடுகளுக்குள் கொண்டு செல்கின்றனர். பணக்கார வீடுகளில் பைப் போட்டு அழகாக வீட்டின் பாதாளத் தொட்டிக்கே தண்ணீர் கிடைக்கும் வழிவகைகள் இருந்தும் கூட ஒரு நிமிடம் நின்று தண்ணீர் வீணாவதைக் கவனிக்ககூட நேரம் கிட்டாதா...??

3 . தண்ணீர் திறந்து விட்ட பிறகு ஒரு அரைமணிநேரமோ அல்லது ஒரு மணி நேரமோ கழித்து மாநகர குடிநீர் வழங்கல் துறை ஒரு சிறிய ரோந்து செய்து, தண்ணீர் வீணாக்குவோரைக் கண்டு பிடித்து உடனடி அபராதம் விதிக்க முடியாதா..?? (என்னைக் கேட்டால் இவர்களை எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டலாம் ).

நாம் படிப்பது வெறும் ஏட்டளவில் தானா...?? அவரவர் வீடுகளில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் பொதுப்பணி பேசி என்ன பயன்..? இதனைப் படிப்பவர் அனைவரும் முதலில் அவரவர் வீடுகளில் தண்ணீர் முறையாகச் சேமித்து வைத்துப் பயன் படுத்தப் படுகிறதா என்பதை உறுதிப் படுத்துவோம்.

மாநகராட்சியையோ, அரசையோ இதில் கடிந்து பயன் இல்லை. புற்றீசல் போலப் பல்கிப் பெருகி விட்ட மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டையும் வந்து ஒழுங்கு செய்வது சாத்தியமற்றது. இதை எல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு ஏற்ற அரசு தான் இருக்கிறதோ என்றே தோன்றுகிறது.

நான் நடந்து இரண்டே தெருக்களில்.. அப்போது கோவையில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீடுகளிலும் எத்தனை தண்ணீர் இதே போன்று வீணாகிறதோ..??? அங்கே மட்டும் ஒழுங்காகவா இருக்கப் போகின்றது.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

இன்னும் கொஞ்ச நாளில் சிறுவாணியிலும் கட்டி விடுவார்கள் அணையை. அப்புறம் பார்க்கிறேன்.. எப்படி இவர்கள் இந்த வீணாக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று.

நன்றி..
சாமக்கோடங்கி 

Tuesday, May 1, 2012

அரசாமை

அன்பு நண்பர்களே.. வணக்கம்.

என்னுடைய ஒரு சிறு போர் அடிக்கும் அனுபவத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.

எனது இன்டர்நெட் மோடம் பழுதாகி விட்டதால் புதியதாக ஒரு மோடம் வாங்கி இருந்தேன். அதை கான்பிகர் செய்ய மேட்டுப்பாளையம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு சனிக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் கொண்டு சென்றேன்.

முதல் அறையில் யாரும் இல்லை. நிறைய நோட்டுக்கட்டுகள் மேசை மீது விரவி இருந்தன. மற்றும் பல பொருட்கள் மேலேயே போடப்பட்டு இருந்தன. இளநிலைப் பொறியாளர்(JTO-Junior Telecom Officer)அறையிலும் ஈ காக்கை இல்லை. கணினி லாக் செய்யப் படாமல் இயங்கிக் கொண்டு இருந்தது. ஏகப்பட்ட லான்ட்லைன் தொலைபேசிகள், மோடம்கள் கைக்கு எட்டும் தொலைவில் அனாதைகளாகக் கிடந்தன. அடுத்து ஒரு மிகப்பெரிய ஹால். அதிலே பழைய காகிதக் கட்டுகள் அலமாரியில் அடுக்கப் பட்டு இருந்தன. அங்கே நாலைந்து பழைய மேசைகள் போடப்பட்டு அதிலே நான்கைந்து கிழம் கட்டைகள் படுத்துக் கொண்டு இருந்தனர் (மதிய ஓய்வாம்)அறைகள் முழுக்க மின்விசிறிகள் மிக வேகமாக சுழன்று கொண்டு இருந்தன.

JTO வைப் பாக்க வேண்டும் என்று சொன்னேன். இப்போதான் அவர் வெளியே போனார், அவர் அறையில் காத்து இருங்கள் என்றும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும் ஒருவர் சொல்லி விட்டு மறுபடியும் அனந்த சயனத்தில் ஆழ்ந்தார்.

அவர் அறையில் காத்துக்கொண்டு இருந்தேன். கால்மணி நேரம், அரை மணி நேரம் கழிந்தது. பக்கத்து அறையில் படுத்துக் கொண்டு இருந்தவரில் ஒருவர் மெதுவாக ஜேடிஒ அறையைக் கடந்து இன்னொரு அறைக்குப் போனார். ஆமை கூட அவ்வளவு வேகமாக நடந்து இருக்காது.(அந்த அறைக்குப் போனவர், அங்கேயும் மேசையில் படுத்துக் கொண்டார் என்பது அப்புறம் தான் தெரிந்தது). அடுத்து நான் இருந்த அறைக்கு தூங்கிக் கொண்டு இருந்தவர்களில் இன்னொருவர் வந்து அமர்ந்தார். மின்விசிறியை மிக வேகமாக ஓட விட்டார். ஒன்றிரண்டு நோட்டுகள்,ஒரு தொலைபேசி தவிர அந்த மேசையில் ஒன்றுமே இல்லை. வெகுநேரம் சும்மாவே உக்காந்து கொண்டு இருந்தார். நானாவது மொபைலில் இன்றைய செய்திகளைப் புரட்டிக் கொண்டு இருந்தேன். பிறகு தொலைபேசியை எடுத்து ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தார். தான் இந்த மாதம் பணி-ஒய்வு பெறப்போவதாகவும் அதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டு இருப்பதாகவும் கட்டாயம் வந்து விடுமாறும் கூறினார். கிட்டத்தட்ட அரைமணிநேரம் இதே போல பலருக்கும் போன் செய்து இதையே அளந்து கொண்டு இருந்தார். பிறகு பத்து நிமிடம் மறுபடியும் சுவரையும், மேசையையும் என்னையும் திரும்பித் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார் (சும்மா இருப்பவர்களுக்கு மூளை டீபால்டாக இதைச் செய்யச் சொல்லும் போல.. ). பிறகு மெதுவாக எழுந்து அந்தத் 'தூங்கும்' அறைக்கே சென்று விட்டார். அங்கு ஆல்ரெடி இருந்தவர்கள் இன்னும் வெளியே வரவே இல்லை.

--
கொஞ்ச நேரம் கழித்து,
JTO சரசரவென உள்ளே வந்தார். முப்பதிலிருந்து முப்பைந்து வயது மதிக்கத் தக்க இளைஞர். அவருக்கு வலது கை கொஞ்சம் சிறியது. சமீபத்தில் தான் ஒரு பழைய JTO பணி ஓய்வு பெற, இவர் அந்தப் பதவிக்கு வந்திருந்தார். கொஞ்சம் சுறுப்பான இளைஞர். இதற்கு முன்பு நான் கொடுத்த கம்ப்ளைண்டுகளை சரியாகப் பார்த்துச் சரி செய்து கொடுத்திருக்கிறார்.(இந்த ஒரு முகத்துக்காகத் தான் இவ்வளவு நேரம் அங்கே பொறுத்து இருந்தேன்... ம்ம்ம்). உள்ளே வந்ததும் முதல் வேலையாக "வாங்க சார்.. மன்னிச்சிகுங்க.. வெளிவேலைய முடிச்சுக் கொடுக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு.. பாதியில விட்டுட்டு வர முடியல. என்ன பிரச்சினை..?"

"சார்.. புது மோடம்.. கண்பிகர் பண்ணனும்.."

"ரெண்டு நிமிஷம்.. இப்படி உக்காருங்க.."

ரெண்டே நிமிஷம்.. கான்பிகரேஷன் முடித்துக் கொடுத்தார்.. வலது கை சற்று ஊனமாக இருப்பினும், கீ போர்டை லாவமாக கையாண்டார்.வீட்டிற்குப் போய் கனெக்ட் செய்தால் இணையம் உடனே கிடைக்கும் என்று சொன்னார். நான் கேட்டதற்காக மொபைல் நம்பரும் கொடுத்தார். இன்முகத்துடன் விடை கொடுத்து அனுப்பினார். வெளியே வரும்போது பார்த்தேன்.. அந்த 'தூங்கும்' அறையிலும், மற்றும் இன்னொரு அறையிலும் இருந்த யாரையும் இப்போது காண வில்லை.

இது போன்ற அனுபவங்கள் நம்மில் பல பேருக்கு இருக்கலாம். நிற்க நேரம் இல்லாமல் காலில் இறக்கை கட்டிக் கொண்டு ஓடி ஆடி வேலை செய்யும் மக்கள் ஒரு புறம். அது போன்ற பொதுமக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அலுவலர்கள் ஒரு புறம். இப்படி இருந்தால் அரசு நிறுவனங்கள் எப்படி லாபம் ஈட்ட முடியும்..? எப்படி தனியார் நிறுவனங்களுடன் போட்டி இட முடியும்..?? (எதற்காக போட்டி இட வேண்டும் என்ற கேள்வியும் இருக்கலாம்). அரசு நிறுவனங்கள் பல ஏன் நஷ்டக் கணக்கைக் காட்டிக் கொண்டு இருக்கின்றன என்று இப்போது புரிகிறது.

புதிதாக வந்துள்ள அந்த அதிகாரியைப் போல நிறைய இளரத்தங்கள் இன்னும் நிறைய தேவைப் படுகின்றன. கொஞ்ச வருடங்களுக்கு முன் நான் பார்த்த எஸ்பிஐ வங்கிக்கும் இப்போது நான் பார்க்கும் வங்கிக்கும் நிறைய வித்தியாசங்கள்.. அத்தனைக்கும் காரணம் சில இளரத்தங்கள்.
இந்த முதியவர்கள் இளமைக்காலங்களில் இங்கே பணிக்கு வந்திருக்கலாம். அரசு நிறுவனம் என்பதால் அனைத்துச் சலுகைகளும் மற்றும் பணி நிரந்தரமும் இவர்களுக்கு அந்த மதப்பைக் கொடுத்திருக்கலாம். வேலை குறைவாக இடங்களில் அதிகப் பணியிடங்கள் நிரப்பப் பட்டு இருக்கலாம். இந்த முதிய வயதில் அவர்களை உடனே வெளியே அனுப்பச் சொல்லவில்லை. ஆனால் இதற்கு மாற்று என்ன என்று ஆராய வேண்டும். இப்படி மேசை மீது தினமும் தூங்குபவர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிற வரையில் நாடும் தூங்கிக் கொண்டு இருக்கும்.

ஆமை வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் அரசு நிறுவனங்களைக் காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரிப்பணம் பொதுவாக வருவதால் எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம். அனால் ஒவ்வொரு அரசு நிறுவனங்களிலும் பணிசுமையைக் கணக்கிட்டு சில மறுசீரமைப்பு பணிகளை உடனே முடுக்கி விட வேண்டும்.இதெல்லாம் நடக்கிற காரியமா..?? ஏதோ எனது ஆதங்கம். அரசு ஆமையை உடனே முயலாக மாற்ற முடியாது. ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக நகரலாம்.

நன்றி.
சாமக்கோடங்கி

Saturday, February 25, 2012

மின்சாரம் - ஒரு கண்ணோட்டம்

அன்பு நண்பர்களே..

தமிழ்நாட்டில் வரலாறு காணாத மின் தட்டுப்பாடு. பெரும்பாலானோர் கூறும் கருத்துக்கள்:

"போன ஜெயலலிதா ஆட்சியில மின் தட்டுப்பாடு கம்மியா இருந்துச்சு.. ஏன், உபரி மின்சாரம் கூட இருந்ததாம்.. ஆனால்,அடுத்து வந்த கலைஞர் ஆட்சியில, இயங்கிக் கொண்டிருந்த எந்த மின் தயாரிப்பு நிலையங்களும் சரி வர பராமரிப்பு செய்யாததால்தான் தற்போது இந்த நிலைமை".

"கூடங்குளம் பிரச்னையை திசை திருப்பி, மக்களுக்கு மின்தட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கவே அரசு இப்படி செய்கிறது.."

"ஜெயாவின் நிர்வாகத் திறமை சரியில்லை"

நான் சூரிய ஒளி மின்சாரத் துறையில் பணிபுரிகிறேன். இந்தத் துறையில் பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து இருக்கிறேன்..

நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.. என்னைப் பொருத்தவரை கடந்த இருபது ஆண்டுகள் ஆட்சியில் மாறி மாறி இருந்த இரண்டு அரசுகளும் இதற்குப் பொறுப்பாகும். இந்தியாவின் மற்றும் தமிழ்நாட்டின் மக்கள் தொகை பெருகும் விகிதம் தெரியும், நாட்டின் முன்னேற்ற விகிதம் எவ்வளவு இருக்கும் என்று ஊகித்து இருப்பார்கள். வருடத்திற்கு எவ்வளவு மின் தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருக்கும். பராமரிக்காவிட்டால் எவ்வளவு இழப்பு என்றும் தெரிந்திருக்கும்.. இவ்வளவு தெரிந்திருந்தும், நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டாதது ஏன்..?? தொலைநோக்குத் திட்டத்தில் பணத்தை முடக்கினாலும், இந்த சனங்களுக்கு அது புரியாது. குறுகிய கால இடைவெளியில் கிடைக்கும் நன்மைகளையே நாம் விரும்புகிறோம், அதையும் இந்த அரசியல் வாதிகள் நன்கு அறிந்து வைத்து உள்ளனர். தேர்தல் அன்பளிப்புகள், இலவசங்கள், தேர்தலுக்கு முன்னால் போடப்படும் சாலைகள், இவை எல்லாம் நான் சொன்ன கருத்தையே ஆணித்தரமாய் பிரதிபலிக்கின்றன.

மற்றுமொரு முக்கிய விஷயம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டுக்குப் போதுமானதே. ஆனால் எப்படி இந்தப் பற்றாக்குறை..??

௧. ஓரிடத்தில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், வெகு தூரத்தில் இருக்கும் மற்றொரு இடத்திற்குக் கம்பிகள் மூலம் கடத்தப் படுகின்றன. இதனால் ஏற்படும் மின் இழப்பு மட்டும் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஓட்டைப் பானையில் மோர் சுமந்து செல்வதைப் போலத்தான். இது போக மின்னழுத்த மாற்றிகளில் (Step down and step up transformer stations)ஏற்படும் மின்னிழப்புகள், மற்றும் சரி வர பராமரிக்கப் படாத மின்னாலைகளில் ஏற்படும் இழப்புகள் மற்றும் இதர கசமுசா இழப்புகளையும் கருத்தில் கொண்டால், நாம் (உண்மையாக)தயாரிக்கும் மின்சாரத்தில் பாதி கூட பயனாளர்களைச் சென்றடைவதில்லை.

௨. இந்தியாவில் மின் திருட்டு என்பது பல இடங்களில் அரசாங்கத்தின் துணையோடும், மற்றும் பல இடங்களில் கண்டு கொள்ளப் படாமலும் அரசியல்வாதிகளின் தலையீட்டோடும் அமோகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட, பல அரசியல் வாதிகள் மற்றும் பெரும்புள்ளிகளின் ஆலைகள் திருட்டு மின்சாரத்திலேயே ஓடுகின்றனவாம்.

௩. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு மூவாயிரம் தொலைத்தொடர்புக் கோபுரங்கள் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் அரசு தொலைதொடர்பு நிறுவனங்களால் நிறுவப் படுகின்றன. நாட்டில் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் தொலைதொடர்புப் பயனாளர்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால், அவர்கள் அனைவருக்கும் சேவை அளிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், இதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் இதற்குக் காரணம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் மூன்றிலிருந்து நான்கு கிலோவாட் மின் இணைப்பு தேவைப்படுகிறது. கொஞ்சம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். வெறும் மின் கோபுரத்திற்கு மட்டும் இவ்வளவு மின் தேவை என்றால், தமிழகத்தில் நாள் தோறும் எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனி வீடுகள் கட்டப் படுகின்றன.. அனைத்திற்கும் மின் இணைப்புத் தர வேண்டுமே கொஞ்சம் யோசியுங்கள்.. தலை சுற்றுகிறதா...???

௪. நம்மிடம் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை.

௫. மின்சாரம் என்றால் அது வெகு தொலைவில் இருந்து தயாரிக்கப்பட்டு எங்கிருந்தோ நமக்கு வந்து விடுகிறது. இதில் நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உள்ளது.

சரி.. மேற்கூறிய புகார்களுக்கு இனி நாம் என்னென்ன செய்யலாம்..

நாம் எப்போதும் கூறுவது போல, மாற்றங்கள் நம்முள் இருந்து தொடங்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதும், அலுவலகத்தில் பணிபுரியும்போதும் தேவையில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களை நிறுத்தும் பழக்கத்தை நமக்குள் ஏற்படுத்த வேண்டும். என் உடன் பணி புரியும் நண்பன், அலுவலக வளாகத்தில் என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வருவான்.. சட்டென்று உபயோகப்படாத அறைகளை எட்டிப் பார்த்து மின்விளக்குகளை அணைத்து விடுவான். வளாகத்திலும், தேவைக்கு அதிகமாக இயங்கும் மின் விளக்குகளை அணைத்துக் கொண்டே நடப்பான். நிறுவனம் தானே பணம் கட்டுகிறது நமக்கென்ன என்று அவன் போகவில்லை. மின்சாரம் நமது சொத்து. பல்லாயிரக்கான ரூபாய்கள் பணம், பலரது உழைப்பினால் அது உங்கள் கைக்கு வருகிறது என்ற எண்ணம் நமக்குள் வளர வேண்டும், அடுத்த சந்ததிகளுக்கும், இதன் தேவையைச் சொல்லிப் புரிய வைத்து வளர்த்த வேண்டும்.

கேப்டிவ் பவர் பிளாண்ட் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது ஓரிடத்தில் தயாரிக்கப் படும் மின்சாரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உபயோகப்படும் விதத்தில் மின் நிலையங்களை வடிவமைத்தல். அதாவது பெரிதாக ஒன்றை ஓரிடத்தில் கட்டி, மின்சாரத்தைக் கம்பிகள் மூலம் கடத்துவதற்குப் பதிலாக, சிறு சிறு மின் உற்பத்தி நிலையங்களை ஆங்காங்கே தேவைக்கேற்ப அமைத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுதல். இதன் மூலம் ட்ரான்ஸ்மிஷன் லோசெஸ் என்றழைக்கப்படும் நீண்டதூர கம்பிக்கடத்திகளினால் ஏற்படும் இழப்பைக் கணிசமாகக் குறைக்கலாம்.

மின் திருட்டை ஒழிக்க அரசு தான் ஏதேனும் செய்ய வேண்டும்.

தொலைதொடர்பு கோபுரங்கள் அனைத்தும் டீசல் ஜெனரேட்டர்கள் பொருத்தப் பட்டு உள்ளன. மின் இணைப்பு இல்லாத நேரத்திலும் அது இயங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப் பட்டது. மின் இணைப்பே இல்லாத பல ஊர்களிலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் முழு நேர டீசல் ஜெனரேட்டர்களால் மின் உற்பத்தி செய்து இயக்கப் படுகின்றன. இதில் கொடுமை என்னவென்றால் பலகோடிகளில் புழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த டீசலுக்கு அரசிடம் இருந்து மானியம் பெறுவது தான். இவர்களுக்கு எதற்கு மானியம்..?? (ஏண்டா நாட்டுல எவ்வளவு பிரச்சினை இருக்கு.. இவங்க என்ன பொழைக்க வழியில்லாம நடுத்தெருவுல நிக்கிறாங்களா...??? ) இன்னும் கொடுமை என்னவென்றால் இவ்வாறு மானியத்துடன் வழங்கப்படும் டீசலை முறைகேடாக (தெரிந்த விஷயம் தானே..) பலர் உபயோகிக்கிறார்கள்.. பகல் கொள்ளை போல.. எப்படி ரேஷனில் ஊற்றப் படும் மானிய மண்ணெண்ணெய் வெளியில் விற்கப் படுகிறதோ, அதே போலத்தான். இது சின்ன விஷயம் இல்ல.. இந்த முறைகேடுகளால் பலகோடிகள்(கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் மேல்) வருடத்திற்கு இழப்பு ஏற்படுகிறதாம்.. நம்ப முடிகிறதா..?? தொலைத்தொடர்பு கொபுரங்களுக்குத் தேவையான மின்சாரத்தில் பாதியை ஹைப்ரிட் (சோலார் மற்றும் காற்றாலை) முறையில் தானே தயாரித்துக் கொள்ள வேண்டும் , என்பது போன்ற சட்டங்கள் இயற்றப் பட்டும் சரிவர நடைமுறையில் இல்லை.இவை சரிவர நடைமுறைப் படுத்தப் பட வேண்டும்.

மின்சாரம் என்பது வெறும் நிலக்கரியிலும், நீரிலும், கதிரியக்க முறையிலும் மட்டும் பெறக்கூடிய விஷயமல்ல. நாம் தினந்தோறும் வெளியேற்றும் வீட்டுக் கழிவுகளில் இருந்து கொஓது மின்சாரம் தயாரிக்க முடியும். ஆதிஷா வினோ அவர்கள் சமீபத்தில் கழிவுகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரை எழுதி இருந்தார். இது போன்ற கழிவுகளைச் சரியான முறையில் உபயோகித்தால் அதன் மூலம், நமக்குத் தேவையான அளவு மின்சாரத்தை நாமே தயாரிக்க முடியும். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், கழிவுகள் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் பல கிராமங்களின் மின் தேவையை தன்னிறைவு அடையச் செய்து காட்டி இருக்கிறார்கள். பல்வேறு கிராமங்களில் இவை செயல்படுத்தப் படுகின்றன. கிராமங்களை விட அதிகமான பொருளை உபயோகிப்பவர்கள் நகர மக்கள்.. நம்மால் செய்ய முடியாதா....???

அளவுக்கு அதிகமாக உபயோகித்தல், ஆடம்பரத்திற்காக உபயோகித்தல், வீணாக்குதல் போன்றவற்றைக் குறைக்க விழிப்புணர்வு தேவை.

இப்போதைய தேவைக்கு புதிதாக மின்னாலைகள் தேவை இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பாதுகாப்பு தரும் மின்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நல்ல குடிமக்களாகத் திகழ வேண்டும்.

நன்றி..
சாமக்கோடங்கி