Sunday, October 30, 2011

இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

இது இராமாம்பாளையம் பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி.


காலை வழிபாட்டு நேரத்தில் நிற்கும் மாணவர்கள்.

அவரவர் தனக்கென உள்ள இடத்தில் நிற்கிறார்கள். வராத குழந்தைகளின் இடம் காலியாக இருப்பதைக் கவனியுங்கள்.


கடவுள் வாழ்த்தை அடுத்து செய்தித் தாளை வாசிக்கும் மாணவன்


காலை வழிபாட்டிற்கான தனியான கையேடு


அவளுக்காக அன்று ஒதுக்கப்பட்டுள்ள வேலையைத் தானாகச் செய்யும் ரேவதி


கற்றுக் கொடுக்கும் திரு.ஃபிராங்க்ளின்


அடையாள அட்டையைப் பெருமையுடன் காண்பிக்கும் மாணவன்.
அவன் கண்ணில் தெரியும் சந்தோஷம் அவர்கள் பள்ளி எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.


குழந்தைகளின் கை வண்ணங்கள்


செய்முறை விளக்கக் கையேடு வைக்கப் பயன்படும் அலமாரி

நன்றி
சாமக்கோடங்கி

Saturday, October 29, 2011

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை

இவரைப் பற்றிப் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈரோடு கதிரின் கசியும் மௌனம் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவு எனக்கு ஒரு மின் மடலாக வந்திருந்தது. முதலில் மேலோட்டமாகப் படித்த நான் 'மேட்டுப்பாளையம்', 'அன்னூர் சாலை' போன்றவற்றைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தேன். அட இந்தப் பள்ளி என் வீட்டிலிருந்து இருபது நிமிட தொலைவில் தான் உள்ளது என்பதை அப்போது தான் அறிந்தேன். பதிவைப் படித்து முடித்ததும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் பார்த்தே தீர்வது என்று முடிவெடுத்தேன்.

உடன் பணிபுரியும் சமூக உணர்வுள்ள இரு நண்பர்களையும் மற்றும் புளியம்பட்டி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்குச் சென்றோம். வேறு வேலை காரணமாக இப்படிக்கு இளங்கோ இளங்கோவால் எங்களுடன் இணைய முடியவில்லை. வெளியே சாதாரண அரசுப்பள்ளிகளைப் போலத் தோற்றமளித்த அக்கடிதத்தின் உட்பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களின் உழைப்பு தெரிந்தது. மேற்படி அந்தப் பள்ளியின் பெருமைகளை ஈரோடு கதிர் மிகவும் விரிவாக எழுதி விட்டார். எனவே நான் கவனித்த சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன். எங்கு சென்றாலும் கேமராக் கண்களுடன் அலையும் என்னை, கேமராவைக் கொண்டு சென்ற போதும், எடுக்க மனமில்லாமல் கடைசி வரை வாய்பிளந்து வேடிக்கை பார்க்க வைத்த பெருமை திரு.ஃப்ராங்க்ளின் அவர்களையே சேரும்.

கடலின் சில துளிகள்:

-அழகழகாக ஒழுங்காய் வெளியே விடப்பட்டிருந்த குழந்தைகளின் காலணிகளை வருணித்தாலே அது ஒரு தனிக்கவிதை. குழந்தைகளின் ஒழுங்கு உள்ளே நுழையும்போதே தெரிந்தது.

-திரு.ஃபிராங்க்ளின் மற்றும் திருமதி.சரஸ்வதி, எளிமையின் உச்சங்கள்.

-திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் எங்கள் பள்ளியில் எனக்கு சீனியர் என்று தெரிந்தபோது பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன்.

-வகுப்பறை உலகத்தரம். வருணிக்க வார்த்தைகள் இல்லை. எழுந்து வர மனமே இல்லை.
இவ்வளவு அழகான படிக்கும் சூழ்நிலை பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

-பிரார்த்தனை நேரம் ஆரம்பித்ததும் நாங்களும் அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டோம். குழந்தைகள் அழகாகவும் வரிசையாகவும் நின்றிருந்தனர். வலமிருந்து இடமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நின்றிருந்தனர். சில குழந்தைகளுக்கு இடையே மற்றும் இடைவெளிகள் காணப்பட்டன. அப்போது தாமதமாக ஒரு சிறுமியை அதன் தாய் வந்து விட்டுச் சென்றார். அந்தச் சிறுமி, சரியாக இந்த இடைவெளிகளில் ஒன்றில் வந்து நின்று கொண்டார். அப்போது தான் புரிந்தது, யார் வந்தாலும் வரா விட்டாலும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைக்கு நிற்கும் இடம் முன்னமே முடிவு செய்யப் பட்டு, பின்பற்றப் படுகிறது என்று. கடவுள் வாழ்த்து முடிந்ததும், ஒரு சிறுமி வந்து ஒரு குரளை ஒப்பித்தார். பின்பு அடுத்தடுத்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், தலா ஒவ்வொரு குழந்தை வந்து தங்களுக்கான குறளை ஒப்பித்தனர். அவர்கள் ஒப்பிக்கத் திணறுகையில், நண்பர்கள் எடுத்துக் கொடுத்த விதம் அவர்களின் குழு முயற்ச்சிக்கு ஒரு சான்று.

-'குறள்' பேச்சு முடிந்ததும், "சார் அடுத்து நீங்க கதை சொல்லணும்" என்று திரு.ஃபிராங்க்ளினை பார்த்து அனைவரும் சொன்னதும், "பிறர்க்கின்னா முற்பகல்" குறளை ஒரு அழகான சிறு கதையில் மழலைச் செல்வங்களுக்குப் புரியும் வகையில் சொல்லி எங்களை எல்லாம் புல்லரிக்க வைத்தார், அவ்வப்போது குழந்தைகளையும் கதையுடன் ஒன்றிப் பேச வைத்தார்.

"அதனால் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது" என்று முடித்தவுடனே, ஒரு மாணவன் தானாக வந்து அங்கிருந்த செய்தித் தாளை எடுத்துத் தலைப்புச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான். இடையில் அவன் பிழையாகப் படித்த போது திருமதி.சரஸ்வதி கனிவாக அதைத் திருத்தினார்.மாணவர்களிடம் எதுவும் சொல்லாமலேயே மாணவர்கள்,அவர்களாகவே ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்படுத்திய விதம், இந்த ஆசிரியர் நல்ல தலைவர்களை, செயல்வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை அளித்தது.

-உலகத்தரம் வாய்ந்த அந்தப் படிக்கும் அறை எப்படிச் சாத்தியமானது? எவ்வளவு செலவானது?எப்படிக் கிடைத்தது? என்ற எனது நேரடிக் கேள்விகளுக்கு, திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் கூறிய பதில் அப்படியே இங்கே: "இதைச் செய்ய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. முதல் படியை நான் எடுத்து வைத்தேன். பிறகு ஊர்ப்பொது மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும், அவர்களிடம் இருந்து பணம் திரட்டி (சுமார் இரண்டரை இலட்சம் செலவில்) இந்த உள்கட்டமைப்பை உருவாக்கினோம். மொத்தப் பணத்தையும் நன்கொடையாகப் பெற்றோ அல்லது நம் கையில் இருந்து கொடுத்தோ செய்தல் சரியாகாது. ஏனெனில் ஊர்ப்போதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான் இந்தப் பள்ளியையும், இந்த கட்டமைப்பையும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். நான் சிறிது காலத்தில் மாற்றல் ஆகிச் சென்று விடும் பட்சத்தில், அடுத்து வருபவருக்கு, இந்தப் பள்ளி இவ்வாறாக உருவாக்கப் பட்டதற்கான நோக்கமும், இதனைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் புரியாமல் போகலாம், அந்நிலையில் ஊர்ப்போதுமக்கள் கட்டாயம் இதனைப் பாதுகாப்பார்கள். எனவே தான் ஊர்ப்பங்களிப்பு எங்களுக்கு முக்கியமாகப் பட்டது".

-சர்வ சிக்ஸ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் பாடநூல்களும், செயல்முறை அட்டைகளும் வழங்கப்பட்டு இருந்தன. அந்த அட்டைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் அவர்களுக்கான அட்டைகளை எடுத்த விதம் அழகு. "குழந்தைகள் அட்டைகளை அப்படியே போட்டு விடும் பட்சத்தில், அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம், அதைக் குழந்தைகளே ஒழுங்காகச் செய்கையில் அது மிக எளிதாகிறது, நீங்களே கவனியுங்கள் அவர்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்று" என்று திருமதி.சரஸ்வதி சொல்ல, நான் ஒரு சிறுவனை அழைத்து, அவன் கையில் இருந்த அட்டையை அதன் அலமாரியில் வைக்கச் சொன்னேன்.

அவன் அலமாரி அருகே சென்று,முதலில் அந்த அட்டை இருந்த அடுக்கை சரிபார்த்தான். பிறகு அங்கு இருந்த ஒரு அட்டைக்கட்டை எடுத்து வந்து மேசையில் வைத்து, கட்டை அவிழ்த்தான். எங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தான் 1,2,....6,_,8. அங்கே நிறுத்தினான். அவனது 7ஆம் எண் அட்டையை அங்கே செருகி, மீண்டும் அழகாக அதைக் கட்டி எடுத்த இடத்திலேயே வைத்தான். அந்த மாணவன் இரண்டாம் வகுப்பே படிக்கிறான். இதற்கு மேல் என்ன சொல்ல.

-"சார், பாத்ரூம் எங்க இருக்கு?" நான் கேட்க, ஒரு சிறுவனை ஆசிரியர் என்னுடன் அனுப்பினார். முதலில் அந்த சிறுவன் கழிப்பறை செல்வதற்காக தனியே வைக்கப்பட்டு இருந்த ஒரு காலணியை அணிந்து கொண்டான். பிறகு கழிப்பறையின் முகப்புக் கதவைத் திறந்து விட்டான். கழிப்பறையின் தூய்மையைப் பார்வையிட்டு திரும்பி வெளியே வந்ததும், வெளியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவன், சரியாக வந்து அதன் கதவை மூடித் தாழிட்டான்.

-ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை அழகாகப் படித்துக் கொண்டிருக்கையில், Hi, what is your name, what is your father's name, how are you..போன்ற கேள்விகளுக்கு அழகாக சிரித்த முகத்துடன் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு நண்பர் "How did you celebrate deepavali?" என்று கேட்க, குழந்தைகள் விழிக்க, உடனே நான் "ஏம்ப்பா இவ்வளவு கஷ்டமான கேள்விகளுக்கு எப்படி அவர்கள் பதில் சொல்வார்கள் என்று சொல்ல உடனே ஆசிரியர் வந்தார்.

இல்லை இல்லை அவர்கள் சொல்வார்கள், கேள்வியைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்றார். பின்னர், மாணவர்களிடம் திரும்பி,

ஆசிரியர்:how நா என்ன..
மாணவர்கள்: எப்படி
ஆ: celebrate நா
மா: கொண்டாடறது..
ஆ: அப்ப மொத்தமா சொன்னா..
மா: தீபாவளியை எப்படி கொண்டாடினோம்.
ஆ: ஆ... இப்ப பதில் சொல்லுங்க..
மா: "சந்தோஷமா." "நல்லா"...
ஆ: அவங்க இங்கிலீஷ் ல கேட்டாங்க இல்ல, அப்ப இங்க்லீஷ்ல பதில் சொல்லுங்க பாப்போம்..
மாணவர்கள் விழிக்க..அடுத்த மேசையில் உக்காந்திருந்த ஒரு அழகுச் சிறுமி "ஹேப்பியா" என்று சொல்ல எங்களிடம் இருந்து பலத்த கைத்தட்டல்.

யப்பா தமிழக அரசு கனவான்களே.. அந்த நல்லாசிரியர் விருத தயவு செஞ்சு இவருக்குக் குடுங்கப்பா....

சார், கோவையின் தற்போதைய கலெக்டர் யாரு சார்..?
நான்: தெரியலப்பா..
எம்.கருணாகரன் சார்...
சரிப்பா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் சொல்லுங்க.
டாக்டர், செல்வி, ஜே.ஜெயலலிதா.
அப்படியா, இந்தியாவின் பிரதம மந்திரி பெயர் சொல்லுங்க.
பிரதீபா பாட்டில்.. டேய்.. இல்லடா தப்பு தப்பு.. சார் டாக்டர்.மன்மோகன் சிங்.
சரிப்பா, கோவையின் தற்போதைய மேயர் பெயர் சொல்லுங்கப்பா..(எனக்கும் தெரியல).
தெரியல சார்.
ஏம்ப்பா கொஞ்ச நேரம் முன்னாடி பேப்பர்ல வாசிச்சிங்க இல்ல.. போய் பாத்துட்டு வாங்க.
இரண்டே நிமிடத்தில், ஓடிப்போய் திரும்பி வந்த சிறுவன் சொன்னான், "திரு.எஸ்.எம்.வேலுசாமி". நாங்கள் மாணவர்களிடம் இருந்த சமயம் முழுக்க கேள்விகளாலும் பதில்களாலும் வெளுத்துக் கட்டினார்கள். உண்மையைச் சொன்னாள் அவர்களிடம் கேளிவிகள் கேட்கவே பயமாக இருந்தது.

-வகுப்பறையில் அடிக்கும் குச்சிகள் இல்லை. மாணவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்து கொண்டே இருந்தனர். யார் யார் அந்த நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டு வகுக்கப் பட்டிருந்தது. Everything is systematic..!!! காலைப் பிரார்தனைக்குக் கூட யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதற்குத் தனியாக ஒரு கையேடு வைத்து பராமரிக்கப் பட்டு இருந்தது, அதையும் அந்த மழலைச் செல்வங்களே அவர்களின் அழகுக் கையெழுத்தில் எழுதி இருந்தது மிக அருமை. ஆசிரியருக்கு இதற்காக ஒரு தனி "பலே".

-குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது, மதிய உணவு செய்யும் ஒரு அம்மாவையும் அழைத்து வந்து குழந்தைகளுடன் நிற்க வைத்து "நாங்கள் ஒரு குடும்பம்" என்பதைச் சொல்லாமல் சொன்ன திரு.ஃபிராங்க்ளினின் கண்களில் பெருமிதமும், இளைய சமுதாயத்திற்கான எதிர்காலக் கனவுகளும் மின்னியது. பிரிய மனமில்லாமல் அங்கிருந்து விடை பெறுகையில் "Rejoice Always" என்று சொல்லி மாணவர்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பினர்.


இரண்டரை லட்சம் மிக எளிது, ஆனால் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் போன்றவர்களை உருவாக்குவதே இப்போதைய கடமை. இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை வலுவாக்கும் இவரது முயற்சிக்கு உரிய உதவிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். அதில் முதல் பணி இவரது பணிகளைச் சரியாக விளம்பரப்படுத்தி மற்றவர்களையும் சென்றடையச் செய்வதே. சமூக உணர்வாளர்கள் இதனால் ஒன்று கூடிச் செயல்பட முடியும்.

உடன் வந்த நண்பர் நிறைய புகைப்படங்கள் எடுத்தார். தன்னுடைய வலைப்பூவில் அவற்றைப் பகிர்வார் என்று நினைக்கிறேன். அவை முழுக்க நான் கண்டவை, அந்தக் குழந்தைகளின் சந்தோஷமும் எதிர்காலமும்.

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672

இவரை அறிய உதவிய திரு.ஈரோடு கதிருக்கு மறுபடியும் என் நன்றிகள்.

கொஞ்சம் புகைப்படங்களை இதற்கு அடுத்த பதிவில் இணைத்துள்ளேன். பதிவின் நீளம் கருதி இங்கே அவற்றை இணைக்கவில்லை.

நன்றி
சாமக்கோடங்கி

Thursday, October 27, 2011

ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு

"இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்" என்று நம்ம ஊரில் பழமொழி சொல்லுவார்கள். அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் நமது நாட்டின் வளங்கள் பல அழிந்து போயின. ஆனால் இன்று நான் பேச வந்தது மனிதர்களைப் பற்றி அல்ல. நமது நாட்டில் பரவி, பல்வேறு விதமான தீங்குகளை இழைக்கும் ஒரு தாவரத்தைப் பற்றி. இதனை லாண்டனா கமரா (Lantana Camara) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். படத்தைப் பார்த்துத் தமிழில் இதற்கு ஏதாவது பெயருள்ளதா என்று யாராவது சொல்லுங்கள்.

மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த லாண்டனா, உலகிலேயே மிகக் கொடிய தாவரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.உலகெங்கிலும் பலலட்சம் ஹெக்டேர்களில் பரவிக் காணப்படும் புதர் வகையைச் சேர்ந்த இத்தாவரம் அந்தந்த நாடுகளில் விளையும் தாவரங்களுக்கு மிகப்பெரும் அபாயங்களை விளைவிக்கிறது.
காப்பி,அரிசி,தேயிலை,கரும்பு,பருத்தி மற்றும் தென்னை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இவை விவசாயத்தில் பெரும்பங்கு வகிப்பவை.

கிபி.1807 ல் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்கு ஆராய்ச்சிக்க்காகக் கொண்டுவரப்பட்ட இத்தாவரம் அங்கிருந்து தப்பித்து மிகக்குறுகிய காலத்தில், இமைய மலையில் இருந்து குமரி வரை தனது ராஜாங்கத்தைத் தானே அமைத்துக் கொண்டது. அழகான கொத்து மலர்கள் மூலமாகவும், சிறுகொத்தாக இருக்கும் கருமை நிறப் பழங்களின் மூலமாகவும், பறவைகள், மற்றும் விளங்கினன்களைக் கவர்ந்து அவற்றின் மூலமாக விதைகளை மற்ற இடங்களுக்கு இவைகள் பரப்புகின்றன.

லாண்டனாவால் பாதிப்பு என்று எப்படிக் கூறுகிறோம்..??

ஒன்று: இது பரவும் விதம் மற்றும் வேகம். மண்வளம் குறைவாக உள்ள பகுதிகளிலும் மிக இலகுவுகாக வேர்களைப் பரப்பும் இவை, அப்பகுதி வாழ் தாவர்களுடன் மிக எளிதாகப் போட்டியிட்டு வீழ்த்தி விடுகின்றன.

இரண்டு: காடுகளின் அமைப்பையே மாற்றும் அபாயம். அதாவது, ஓரிடத்தில் பிறந்து வளரும் பூர்வீகத் தாவரங்களால் அந்த இடத்தின் மண்வளம், நிலத்தடி நீர்வளம், இயற்கை அமைப்பு, பறவைகள், விலங்குகள் போன்றவை மாறாமல் சமநிலையுடன் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகை ஊடுருவுத் தாவரங்களால் அந்த சமநிலை பாதிப்படைகிறது.

மூன்று: லாண்டனா வளரும் காட்டுப் பகுதிகளின் நிலமானது மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி நலத்தடிக்குள் அனுப்பும் பண்பை இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இதனால் மண்ணின் பசைத்தன்மை போய், மண்சரிவு ஏற்பட ஏதுவாகிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் கூட மண்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயிலில் பயணிக்கையில் வழிநெடுகும் லாண்டனாக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.என்னுடைய புகைப்படக் கருவியில் அடக்க முடியாத அளவுக்கு. விசாரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுதும் இதன் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளதாம். நமது சொந்த மண்ணிற்கு இந்தச் செடியினால் ஏற்படும் அபாயம் தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கைகளை நீட்டி, அந்த விஷச் செடியினைப் பறித்து விளையாடினர்.

இது எப்படிப் பிழைக்கிறது? மிகக் கடினமான பாறை இடுக்களிலும், தண்ணீர் அதிகமாகக் கிடைக்காத பகுதிகளிலும் கூட எளிதில் வளரக்கூடிய அமைப்பு கொண்ட இத்தாவரத்தின் விதைகள் காட்டுதீயாலும் பாதிக்கப் படுவதில்லை. எனவே, காட்டுத் தீ வந்த பிறகு, மற்ற செடிகளின் விதைகள் அந்தப் பகுதிக்குள் விழுவதற்குள், இவைகள் புதர்களாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. தண்ணீர் கிடைக்கையில் அதனை உறிஞ்சி தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக் கொண்டு, பாலைவன ஒட்டகம் போல, வெகு நாள் செழிப்போடு இருக்கிறது. இதனால் தான் மற்ற செடிகள் வாடிக் கருகிக் கிடைக்கும்போதும், இந்த லாண்டனாப் புதர்கள் செழிப்போடு இருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியை எப்படிக் கட்டுப் படுத்தலாம்..??

மிக எளிய வழி மனித ஆக்கிரமிப்பு. அதாவது மனிதன் இந்த லாண்டனாவைப் பெரிய அளவில் உபயோகப் படுத்தினால் தானாக இவை குறைந்து விடும்.
அழிப்பது ஒன்றும் நமக்குப் பெரிய வேலை இல்லை. தற்போது இந்த லாண்டனா விறகாகவும் கூடை நெய்யவும் மற்றும் சிலவகை மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சிலவகை ரசாயனம் கலந்தால் இதன் தண்டுகளைக் காகிதம் தயாரிக்க உபயோகப் படுத்தலாம். இதனைப் பெரிய அளவில் செய்ய முனைந்தால் இவை அழிக்கப்படவோ, இவற்றின் ஆக்கிரமிப்பு குறைக்கப்படவோ அல்லது மேலும் விரவாமல் கட்டுப்படுத்தபடவோ வாய்ப்புகள் உள்ளன.

மற்றபடி ரசாயனகள் மூலமோ , புல்டோசர் எந்திரங்களின் மூலமோ, கைகளால் வெட்டுவதன் மூலமோ, தீயிட்டுக் கொளுத்துவதன் மூலமோ சிறு சிறு நிலப்பகுதி மக்கள் அங்கே படர்ந்துள்ள லாண்டனாவைக் கட்டுப் படுத்தலாம்.
சிலவகைப் பூச்சிகளைப் பரப்புவதன் மூலம் கூட இச்செடியின் இனவிருத்தியைக் குறைக்க முடியுமாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும் என்பதே..!! நான் மேற்கூரியதைப் போல மக்களுக்கு இதனைப் பற்றித் தெரியாததால், ரயில் பாதை நெடுகும் பரவியிருந்த இந்த 'அழகான' தாவரத்தை மட்டுமே ரசித்துக் கொண்டே வந்தனர். இந்தச் செடிகள் வருவதற்கு முன்னர், அங்கே எவ்விதமான தாவரங்கள் இருந்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதை விடக் கொடுமை, இந்தத் தாவரம் செடிகள் விற்கும் நர்சரிகளில் அழகுப் பொருளாக விற்பனைக்கு உள்ளன. மக்களும் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு,சிவப்பு என்று விதம் விதமாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இச்செடியை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.

என் நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஒரு கடையில் விசாரித்து விட்டுப் பிறகு அவர்களிடம் இதன் தீமைகளைப் பற்றிக் கூறி, இதை விற்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் கடைக்காரர் எப்படி பதில் கூறியிருப்பார் என்று நமக்கு எல்லோருக்குமே தெரியும்..


நன்றி..
சாமக்கோடங்கி

Wednesday, October 5, 2011

வாழ்க்கை எனும் ஓடம்..

ஒரு சிறு குழந்தை ஒரு சிறிய பொம்மையை எடுத்து விளையாடுகிறது.. சிறிது நாட்கள் கழித்து இன்னொரு புதிய விளையாட்டுப் பொருள் கிடைக்கையில், இந்தப் பழைய பொம்மையை விட்டு விட்டு அதனைக் கையில் எடுத்துக் கொள்கிறது. வாழ்க்கையின் தத்துவம் இங்கே துவங்குகிறது..

பாசம், கண்ணீர், சண்டை, குதூகலம், நண்பர்கள், துரோகம், காதல், தொழில், லாபம், நட்டம், துன்பம், இன்பம், தனிமை, உளைச்சல் என்று பலவகைக் கூறுகளால் நமது வாழ்க்கை கட்டப் பட்டுள்ளது. இவைகளில் பலவற்றை அவ்வளவு சாமான்யமாக உதறித் தள்ள முடியாது.

ஆனால் எவை எவை எந்தெந்த நேரத்தில் கிடைக்கிறதோ, அதைப் பொருத்து ஒருவன் அதிர்ஷ்டசாலியாகவோ அல்லது ஏமாளியாகவோ ஆகிறான்.

சிறுவயதில் கிடைத்த நண்பர்களுடன் விளையாடுகிறோம்.. அப்புறம் பெற்றோருடன் திரைப்படங்கள் செல்கிறோம்.. வெளியே வரும்போது நாமும் ஒரு ஹீரோவைப் போலவே உணர்கிறோம்.. கெட்டவைகளை உடனே களையும் ஒரு பாராக்ரமம் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்குகிறோம்..வாழ்க்கை ஓடுகிறது.. பள்ளிக் காலம்.. மறக்க முடியாத நினைவுகள்.. நல்ல நண்பர்கள்.. கெட்ட நண்பர்கள்..அப்படி ஓடுகிறது வாழ்க்கை.

பள்ளி முடிந்து கல்லூரி.. சிலருக்கு பல மலரும் நினைவுகள் இங்கு தான் பதியம் போடப்படுகின்றன.. பலருக்கு பள்ளிக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் சொல்ல முடியாதவாறு கல்லூரிக் காலமும் முடிகிறது..

இதற்கிடையே கிடைத்த நட்பு வட்டங்களுக்கு ஏற்றவாறு மனம் ஓடுகிறது. நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் கிடைத்தால் அவர்களோடு நாமும் சேர்ந்து பார்த்து விமர்சனம் செய்கிறோம். பாட்டு ஆட்டங்களுடன் சுற்றும் நண்பர்களோடு சேர்கையில் நாமும் இறங்கி ஒரு கை பார்த்து விடுகிறோம்.. நல்ல கதைகளைப் படிக்கும் நண்பர்களோடு சேர்கையில் நமக்கும் புத்தகங்கள் கைமாறுகின்றன.

அரட்டை நண்பர்களுடன் சேர்கையில் அரட்டையில் லயிக்கிறோம்.. அப்புறம், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்தின் உந்துதளாலும், நமது உள்மன உந்துதலாலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்..

ஆனால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்தவர்கள், இந்த வாழ்க்கை ஓடத்தின் ஒரு சிறுபகுதியை மட்டுமே துடுப்பின்றிக் கடக்கின்றனர் என்றே தோன்றுகிறது. மீதத்தைத் துடுப்புப் போட்டுத் தங்களுக்கு ஏற்றவாறு திசைமாற்றி ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர். ஓட்டியும் வென்று விடுகின்றனர்.

இத்தனை காலத்திலும் நாம் இத்தனை விஷயத்தைக் கடந்து வருகிறோம்.. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் ஒரு விஷயத்தின் மீது நமக்கு உந்துதல் இல்லை என்றால் அது நமக்கான களம் இல்லை என்பதே பொருள் என்று நான் நினைக்கிறேன். நமக்கான களம் எங்கோ ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. அதைத் தேடிப்போகாதவர்கள் ஓடம் போகும் பாதையிலேயே வாழ்க்கையைப் பயணித்து விடுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போகும் பாதை இனிதாய் அமையும். சிலருக்கு அமையாது.

ஆனால் தமக்கான களம் எங்கோ இருப்பதை உணர்பவர்கள், அல்லது தமக்கான காலத்தை அமைத்துக் கொள்பவர்கள், சாதாரண மக்களை விட மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கும். நமது இலக்கை நோக்கிச் செல்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதுவும் சொந்த பந்தங்கள், ஆசாபாசங்களால் கட்டுண்டு இருப்பவர்களால், அவ்வளவு எளிதாக அதைக் கடந்து சாதனைப் பாதையைத் தொட்டு விட முடியாது.

ஆனால் என்னைப் பொருத்தவரை தனக்கென ஒரு பாதையை வகுப்பவர்கள்.. எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் வியப்பதில்லை.. அதனுள் இருக்கும் விஷயங்களைப் பொறுமையாக ஆராய்ந்து கற்கிறார்கள் என்றே நினைக்கிறேன்... வியப்பவர்கள் கடைசி வரை வியந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..


விதி விலக்குகளும் இதற்கு உண்டு..

சாமக்கோடங்கி