Saturday, November 12, 2011

காஞ்சனாவில் பிடித்த பாடல்..

வணக்கம் நண்பர்களே..

சமீப காலமாக வருகின்ற பல படங்களின் பாடல் வரிகள் முக்கியத்துவம் பெறுவதும் இல்லை, அவற்றைப் பெரும்பாலானோர் கவனிப்பதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் காஞ்சனா (முனி-2) படத்தில் வந்துள்ள "வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா" என்கின்ற பாடல் வரிகளும் இசையும், அதன் காட்சி அமைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்ரீராம், MLR.கார்த்திகேயன் மற்றும் மாலதி ஆகியோர் குரல் கொடுக்க, கவிஞர் விவேகா, வெறி கொண்டு பழிவாங்க அலையும் ஒரு பேய்க்காக எழுதிய பாடல் இதோ..

------------------------------
கொடியவனின் கதையை முடிக்க
கொறவளையை தேடி கடிக்க
நாறு நாறா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவப் போல நசுக்கி எறிய
புழிஞ்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எறிய
துள்ள வெச்சு உசுர எடுக்க
சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே....

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறிய போறா..
கதற கதற கதற உந்தன் கத முடிக்க போறா..
யே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா டா.....

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களைப் பார்த்தாலே எவனும் மெரள
அகால வேளையில் வேட்டைக்கு வராளே
அதிரி புதிரி ஆச்சு..
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராட்சஷி
எதிரினில் வந்தாச்சே..
கொம்பேறி மூக்கணும் கோதுமை நாகனும்
கண்ணாடி விரிய(ன்) குட்டியும்
சாரைப்பாம்பும் சுருட்டை பாம்பும்
வெள்ளிக்கோல் வரைய நாகமும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசும் சாம்பல் தண்ணி பாம்பும்
குழி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீருதே..

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
கருவறுப்பேன் நான்...

ஹவ்வ ஹவ்வ ஹவ்வ ஹவ்வ..
ஹோ ஹோ ஹோ ஹோ...

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நற நறங்குது
குதர்ற நேரம் வந்தாச்சே..
வானமும் பூமியும் நடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உருமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே...
சித்திரை வெய்யிலும் கலங்கி போகும்
செவப்போ இவ கண்ண பாத்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பாத்து
குதிர நதிகள் ஓட ஓட
உடலை இவ கிழிக்கப்போறா..
உதவ வேணாம் பயங்கரத்த காட்டப் போறா...

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டியா மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

எடுத்த சபதம் முடிக்கும் வரையில் இமையில் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மழையும் பறக்கும் குருதி நதியில் பூமி சிவக்கும்
அத்தனை எலும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் விரும்பும்
மோதிய கோடரி முனைகள் உடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் சிதறும்
கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவும் காணா வதைகள் நடக்கும்....
-------------------------------------------
இந்தப் பாடலின் காணொளி:
www.youtube.com/watch?v=bb4_uvZVc04

சாமக்கோடங்கி

Sunday, October 30, 2011

இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

இது இராமாம்பாளையம் பள்ளியைப் பற்றிய முந்தைய பதிவின் தொடர்ச்சி.


காலை வழிபாட்டு நேரத்தில் நிற்கும் மாணவர்கள்.

அவரவர் தனக்கென உள்ள இடத்தில் நிற்கிறார்கள். வராத குழந்தைகளின் இடம் காலியாக இருப்பதைக் கவனியுங்கள்.


கடவுள் வாழ்த்தை அடுத்து செய்தித் தாளை வாசிக்கும் மாணவன்


காலை வழிபாட்டிற்கான தனியான கையேடு


அவளுக்காக அன்று ஒதுக்கப்பட்டுள்ள வேலையைத் தானாகச் செய்யும் ரேவதி


கற்றுக் கொடுக்கும் திரு.ஃபிராங்க்ளின்


அடையாள அட்டையைப் பெருமையுடன் காண்பிக்கும் மாணவன்.
அவன் கண்ணில் தெரியும் சந்தோஷம் அவர்கள் பள்ளி எப்படிப் பட்டது என்பதைக் காட்டுகிறது.


குழந்தைகளின் கை வண்ணங்கள்


செய்முறை விளக்கக் கையேடு வைக்கப் பயன்படும் அலமாரி

நன்றி
சாமக்கோடங்கி

Saturday, October 29, 2011

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை

இவரைப் பற்றிப் பல்வேறு பத்திரிக்கைகளிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈரோடு கதிரின் கசியும் மௌனம் வலைப்பூவில் பிரசுரிக்கப்பட்ட ஒரு பதிவு எனக்கு ஒரு மின் மடலாக வந்திருந்தது. முதலில் மேலோட்டமாகப் படித்த நான் 'மேட்டுப்பாளையம்', 'அன்னூர் சாலை' போன்றவற்றைப் பார்த்ததும் சற்று உன்னிப்பாகப் படிக்க ஆரம்பித்தேன். அட இந்தப் பள்ளி என் வீட்டிலிருந்து இருபது நிமிட தொலைவில் தான் உள்ளது என்பதை அப்போது தான் அறிந்தேன். பதிவைப் படித்து முடித்ததும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் பார்த்தே தீர்வது என்று முடிவெடுத்தேன்.

உடன் பணிபுரியும் சமூக உணர்வுள்ள இரு நண்பர்களையும் மற்றும் புளியம்பட்டி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த கமலக்கண்ணன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பள்ளிக்குச் சென்றோம். வேறு வேலை காரணமாக இப்படிக்கு இளங்கோ இளங்கோவால் எங்களுடன் இணைய முடியவில்லை. வெளியே சாதாரண அரசுப்பள்ளிகளைப் போலத் தோற்றமளித்த அக்கடிதத்தின் உட்பகுதியின் ஒவ்வொரு அங்குலத்திலும் திரு.ஃபிராங்க்ளின் அவர்களின் உழைப்பு தெரிந்தது. மேற்படி அந்தப் பள்ளியின் பெருமைகளை ஈரோடு கதிர் மிகவும் விரிவாக எழுதி விட்டார். எனவே நான் கவனித்த சில விஷயங்களை மட்டும் இங்கே பகிர்கிறேன். எங்கு சென்றாலும் கேமராக் கண்களுடன் அலையும் என்னை, கேமராவைக் கொண்டு சென்ற போதும், எடுக்க மனமில்லாமல் கடைசி வரை வாய்பிளந்து வேடிக்கை பார்க்க வைத்த பெருமை திரு.ஃப்ராங்க்ளின் அவர்களையே சேரும்.

கடலின் சில துளிகள்:

-அழகழகாக ஒழுங்காய் வெளியே விடப்பட்டிருந்த குழந்தைகளின் காலணிகளை வருணித்தாலே அது ஒரு தனிக்கவிதை. குழந்தைகளின் ஒழுங்கு உள்ளே நுழையும்போதே தெரிந்தது.

-திரு.ஃபிராங்க்ளின் மற்றும் திருமதி.சரஸ்வதி, எளிமையின் உச்சங்கள்.

-திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் எங்கள் பள்ளியில் எனக்கு சீனியர் என்று தெரிந்தபோது பெருமிதத்தின் உச்சிக்கே சென்றேன்.

-வகுப்பறை உலகத்தரம். வருணிக்க வார்த்தைகள் இல்லை. எழுந்து வர மனமே இல்லை.
இவ்வளவு அழகான படிக்கும் சூழ்நிலை பெற்ற குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.

-பிரார்த்தனை நேரம் ஆரம்பித்ததும் நாங்களும் அவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டோம். குழந்தைகள் அழகாகவும் வரிசையாகவும் நின்றிருந்தனர். வலமிருந்து இடமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நின்றிருந்தனர். சில குழந்தைகளுக்கு இடையே மற்றும் இடைவெளிகள் காணப்பட்டன. அப்போது தாமதமாக ஒரு சிறுமியை அதன் தாய் வந்து விட்டுச் சென்றார். அந்தச் சிறுமி, சரியாக இந்த இடைவெளிகளில் ஒன்றில் வந்து நின்று கொண்டார். அப்போது தான் புரிந்தது, யார் வந்தாலும் வரா விட்டாலும் ஒரு குழந்தையின் பிரார்த்தனைக்கு நிற்கும் இடம் முன்னமே முடிவு செய்யப் பட்டு, பின்பற்றப் படுகிறது என்று. கடவுள் வாழ்த்து முடிந்ததும், ஒரு சிறுமி வந்து ஒரு குரளை ஒப்பித்தார். பின்பு அடுத்தடுத்து ஒவ்வொரு வகுப்பிலிருந்தும், தலா ஒவ்வொரு குழந்தை வந்து தங்களுக்கான குறளை ஒப்பித்தனர். அவர்கள் ஒப்பிக்கத் திணறுகையில், நண்பர்கள் எடுத்துக் கொடுத்த விதம் அவர்களின் குழு முயற்ச்சிக்கு ஒரு சான்று.

-'குறள்' பேச்சு முடிந்ததும், "சார் அடுத்து நீங்க கதை சொல்லணும்" என்று திரு.ஃபிராங்க்ளினை பார்த்து அனைவரும் சொன்னதும், "பிறர்க்கின்னா முற்பகல்" குறளை ஒரு அழகான சிறு கதையில் மழலைச் செல்வங்களுக்குப் புரியும் வகையில் சொல்லி எங்களை எல்லாம் புல்லரிக்க வைத்தார், அவ்வப்போது குழந்தைகளையும் கதையுடன் ஒன்றிப் பேச வைத்தார்.

"அதனால் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது" என்று முடித்தவுடனே, ஒரு மாணவன் தானாக வந்து அங்கிருந்த செய்தித் தாளை எடுத்துத் தலைப்புச் செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான். இடையில் அவன் பிழையாகப் படித்த போது திருமதி.சரஸ்வதி கனிவாக அதைத் திருத்தினார்.மாணவர்களிடம் எதுவும் சொல்லாமலேயே மாணவர்கள்,அவர்களாகவே ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்படுத்திய விதம், இந்த ஆசிரியர் நல்ல தலைவர்களை, செயல்வீரர்களை உருவாக்குவார் என்ற நம்பிக்கையை அளித்தது.

-உலகத்தரம் வாய்ந்த அந்தப் படிக்கும் அறை எப்படிச் சாத்தியமானது? எவ்வளவு செலவானது?எப்படிக் கிடைத்தது? என்ற எனது நேரடிக் கேள்விகளுக்கு, திரு.ஃபிராங்க்ளின் அவர்கள் கூறிய பதில் அப்படியே இங்கே: "இதைச் செய்ய அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. முதல் படியை நான் எடுத்து வைத்தேன். பிறகு ஊர்ப்பொது மக்களைச் சந்தித்துப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை வந்ததும், அவர்களிடம் இருந்து பணம் திரட்டி (சுமார் இரண்டரை இலட்சம் செலவில்) இந்த உள்கட்டமைப்பை உருவாக்கினோம். மொத்தப் பணத்தையும் நன்கொடையாகப் பெற்றோ அல்லது நம் கையில் இருந்து கொடுத்தோ செய்தல் சரியாகாது. ஏனெனில் ஊர்ப்போதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான் இந்தப் பள்ளியையும், இந்த கட்டமைப்பையும் நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். நான் சிறிது காலத்தில் மாற்றல் ஆகிச் சென்று விடும் பட்சத்தில், அடுத்து வருபவருக்கு, இந்தப் பள்ளி இவ்வாறாக உருவாக்கப் பட்டதற்கான நோக்கமும், இதனைப் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் புரியாமல் போகலாம், அந்நிலையில் ஊர்ப்போதுமக்கள் கட்டாயம் இதனைப் பாதுகாப்பார்கள். எனவே தான் ஊர்ப்பங்களிப்பு எங்களுக்கு முக்கியமாகப் பட்டது".

-சர்வ சிக்ஸ அபியான் (SSA)திட்டத்தின் கீழ் பாடநூல்களும், செயல்முறை அட்டைகளும் வழங்கப்பட்டு இருந்தன. அந்த அட்டைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து குழந்தைகள் அவர்களுக்கான அட்டைகளை எடுத்த விதம் அழகு. "குழந்தைகள் அட்டைகளை அப்படியே போட்டு விடும் பட்சத்தில், அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம், அதைக் குழந்தைகளே ஒழுங்காகச் செய்கையில் அது மிக எளிதாகிறது, நீங்களே கவனியுங்கள் அவர்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்று" என்று திருமதி.சரஸ்வதி சொல்ல, நான் ஒரு சிறுவனை அழைத்து, அவன் கையில் இருந்த அட்டையை அதன் அலமாரியில் வைக்கச் சொன்னேன்.

அவன் அலமாரி அருகே சென்று,முதலில் அந்த அட்டை இருந்த அடுக்கை சரிபார்த்தான். பிறகு அங்கு இருந்த ஒரு அட்டைக்கட்டை எடுத்து வந்து மேசையில் வைத்து, கட்டை அவிழ்த்தான். எங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தான் 1,2,....6,_,8. அங்கே நிறுத்தினான். அவனது 7ஆம் எண் அட்டையை அங்கே செருகி, மீண்டும் அழகாக அதைக் கட்டி எடுத்த இடத்திலேயே வைத்தான். அந்த மாணவன் இரண்டாம் வகுப்பே படிக்கிறான். இதற்கு மேல் என்ன சொல்ல.

-"சார், பாத்ரூம் எங்க இருக்கு?" நான் கேட்க, ஒரு சிறுவனை ஆசிரியர் என்னுடன் அனுப்பினார். முதலில் அந்த சிறுவன் கழிப்பறை செல்வதற்காக தனியே வைக்கப்பட்டு இருந்த ஒரு காலணியை அணிந்து கொண்டான். பிறகு கழிப்பறையின் முகப்புக் கதவைத் திறந்து விட்டான். கழிப்பறையின் தூய்மையைப் பார்வையிட்டு திரும்பி வெளியே வந்ததும், வெளியில் நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவன், சரியாக வந்து அதன் கதவை மூடித் தாழிட்டான்.

-ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தை அழகாகப் படித்துக் கொண்டிருக்கையில், Hi, what is your name, what is your father's name, how are you..போன்ற கேள்விகளுக்கு அழகாக சிரித்த முகத்துடன் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு நண்பர் "How did you celebrate deepavali?" என்று கேட்க, குழந்தைகள் விழிக்க, உடனே நான் "ஏம்ப்பா இவ்வளவு கஷ்டமான கேள்விகளுக்கு எப்படி அவர்கள் பதில் சொல்வார்கள் என்று சொல்ல உடனே ஆசிரியர் வந்தார்.

இல்லை இல்லை அவர்கள் சொல்வார்கள், கேள்வியைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் என்றார். பின்னர், மாணவர்களிடம் திரும்பி,

ஆசிரியர்:how நா என்ன..
மாணவர்கள்: எப்படி
ஆ: celebrate நா
மா: கொண்டாடறது..
ஆ: அப்ப மொத்தமா சொன்னா..
மா: தீபாவளியை எப்படி கொண்டாடினோம்.
ஆ: ஆ... இப்ப பதில் சொல்லுங்க..
மா: "சந்தோஷமா." "நல்லா"...
ஆ: அவங்க இங்கிலீஷ் ல கேட்டாங்க இல்ல, அப்ப இங்க்லீஷ்ல பதில் சொல்லுங்க பாப்போம்..
மாணவர்கள் விழிக்க..அடுத்த மேசையில் உக்காந்திருந்த ஒரு அழகுச் சிறுமி "ஹேப்பியா" என்று சொல்ல எங்களிடம் இருந்து பலத்த கைத்தட்டல்.

யப்பா தமிழக அரசு கனவான்களே.. அந்த நல்லாசிரியர் விருத தயவு செஞ்சு இவருக்குக் குடுங்கப்பா....

சார், கோவையின் தற்போதைய கலெக்டர் யாரு சார்..?
நான்: தெரியலப்பா..
எம்.கருணாகரன் சார்...
சரிப்பா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பெயர் சொல்லுங்க.
டாக்டர், செல்வி, ஜே.ஜெயலலிதா.
அப்படியா, இந்தியாவின் பிரதம மந்திரி பெயர் சொல்லுங்க.
பிரதீபா பாட்டில்.. டேய்.. இல்லடா தப்பு தப்பு.. சார் டாக்டர்.மன்மோகன் சிங்.
சரிப்பா, கோவையின் தற்போதைய மேயர் பெயர் சொல்லுங்கப்பா..(எனக்கும் தெரியல).
தெரியல சார்.
ஏம்ப்பா கொஞ்ச நேரம் முன்னாடி பேப்பர்ல வாசிச்சிங்க இல்ல.. போய் பாத்துட்டு வாங்க.
இரண்டே நிமிடத்தில், ஓடிப்போய் திரும்பி வந்த சிறுவன் சொன்னான், "திரு.எஸ்.எம்.வேலுசாமி". நாங்கள் மாணவர்களிடம் இருந்த சமயம் முழுக்க கேள்விகளாலும் பதில்களாலும் வெளுத்துக் கட்டினார்கள். உண்மையைச் சொன்னாள் அவர்களிடம் கேளிவிகள் கேட்கவே பயமாக இருந்தது.

-வகுப்பறையில் அடிக்கும் குச்சிகள் இல்லை. மாணவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்து கொண்டே இருந்தனர். யார் யார் அந்த நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது முன்பே திட்டமிட்டு வகுக்கப் பட்டிருந்தது. Everything is systematic..!!! காலைப் பிரார்தனைக்குக் கூட யார் யார் என்ன என்ன செய்தார்கள் என்பதற்குத் தனியாக ஒரு கையேடு வைத்து பராமரிக்கப் பட்டு இருந்தது, அதையும் அந்த மழலைச் செல்வங்களே அவர்களின் அழகுக் கையெழுத்தில் எழுதி இருந்தது மிக அருமை. ஆசிரியருக்கு இதற்காக ஒரு தனி "பலே".

-குழுவாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது, மதிய உணவு செய்யும் ஒரு அம்மாவையும் அழைத்து வந்து குழந்தைகளுடன் நிற்க வைத்து "நாங்கள் ஒரு குடும்பம்" என்பதைச் சொல்லாமல் சொன்ன திரு.ஃபிராங்க்ளினின் கண்களில் பெருமிதமும், இளைய சமுதாயத்திற்கான எதிர்காலக் கனவுகளும் மின்னியது. பிரிய மனமில்லாமல் அங்கிருந்து விடை பெறுகையில் "Rejoice Always" என்று சொல்லி மாணவர்கள் எங்களை வாழ்த்தி வழியனுப்பினர்.


இரண்டரை லட்சம் மிக எளிது, ஆனால் திரு.ஃபிராங்க்ளின் அவர்களைப் போன்றவர்களை உருவாக்குவதே இப்போதைய கடமை. இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை வலுவாக்கும் இவரது முயற்சிக்கு உரிய உதவிகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தோம். அதில் முதல் பணி இவரது பணிகளைச் சரியாக விளம்பரப்படுத்தி மற்றவர்களையும் சென்றடையச் செய்வதே. சமூக உணர்வாளர்கள் இதனால் ஒன்று கூடிச் செயல்பட முடியும்.

உடன் வந்த நண்பர் நிறைய புகைப்படங்கள் எடுத்தார். தன்னுடைய வலைப்பூவில் அவற்றைப் பகிர்வார் என்று நினைக்கிறேன். அவை முழுக்க நான் கண்டவை, அந்தக் குழந்தைகளின் சந்தோஷமும் எதிர்காலமும்.

திரு. ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...
franklinmtp@gmail.com, pupsramampalayam@gmail.com 99424 72672

இவரை அறிய உதவிய திரு.ஈரோடு கதிருக்கு மறுபடியும் என் நன்றிகள்.

கொஞ்சம் புகைப்படங்களை இதற்கு அடுத்த பதிவில் இணைத்துள்ளேன். பதிவின் நீளம் கருதி இங்கே அவற்றை இணைக்கவில்லை.

நன்றி
சாமக்கோடங்கி

Thursday, October 27, 2011

ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு

"இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம்" என்று நம்ம ஊரில் பழமொழி சொல்லுவார்கள். அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் நமது நாட்டின் வளங்கள் பல அழிந்து போயின. ஆனால் இன்று நான் பேச வந்தது மனிதர்களைப் பற்றி அல்ல. நமது நாட்டில் பரவி, பல்வேறு விதமான தீங்குகளை இழைக்கும் ஒரு தாவரத்தைப் பற்றி. இதனை லாண்டனா கமரா (Lantana Camara) என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். படத்தைப் பார்த்துத் தமிழில் இதற்கு ஏதாவது பெயருள்ளதா என்று யாராவது சொல்லுங்கள்.

மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த லாண்டனா, உலகிலேயே மிகக் கொடிய தாவரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.உலகெங்கிலும் பலலட்சம் ஹெக்டேர்களில் பரவிக் காணப்படும் புதர் வகையைச் சேர்ந்த இத்தாவரம் அந்தந்த நாடுகளில் விளையும் தாவரங்களுக்கு மிகப்பெரும் அபாயங்களை விளைவிக்கிறது.
காப்பி,அரிசி,தேயிலை,கரும்பு,பருத்தி மற்றும் தென்னை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இவை விவசாயத்தில் பெரும்பங்கு வகிப்பவை.

கிபி.1807 ல் கொல்கத்தா தாவரவியல் பூங்காவிற்கு ஆராய்ச்சிக்க்காகக் கொண்டுவரப்பட்ட இத்தாவரம் அங்கிருந்து தப்பித்து மிகக்குறுகிய காலத்தில், இமைய மலையில் இருந்து குமரி வரை தனது ராஜாங்கத்தைத் தானே அமைத்துக் கொண்டது. அழகான கொத்து மலர்கள் மூலமாகவும், சிறுகொத்தாக இருக்கும் கருமை நிறப் பழங்களின் மூலமாகவும், பறவைகள், மற்றும் விளங்கினன்களைக் கவர்ந்து அவற்றின் மூலமாக விதைகளை மற்ற இடங்களுக்கு இவைகள் பரப்புகின்றன.

லாண்டனாவால் பாதிப்பு என்று எப்படிக் கூறுகிறோம்..??

ஒன்று: இது பரவும் விதம் மற்றும் வேகம். மண்வளம் குறைவாக உள்ள பகுதிகளிலும் மிக இலகுவுகாக வேர்களைப் பரப்பும் இவை, அப்பகுதி வாழ் தாவர்களுடன் மிக எளிதாகப் போட்டியிட்டு வீழ்த்தி விடுகின்றன.

இரண்டு: காடுகளின் அமைப்பையே மாற்றும் அபாயம். அதாவது, ஓரிடத்தில் பிறந்து வளரும் பூர்வீகத் தாவரங்களால் அந்த இடத்தின் மண்வளம், நிலத்தடி நீர்வளம், இயற்கை அமைப்பு, பறவைகள், விலங்குகள் போன்றவை மாறாமல் சமநிலையுடன் பாதுகாக்கப் படுகின்றன. இந்த வகை ஊடுருவுத் தாவரங்களால் அந்த சமநிலை பாதிப்படைகிறது.

மூன்று: லாண்டனா வளரும் காட்டுப் பகுதிகளின் நிலமானது மழைக்காலங்களில் நீரை உறிஞ்சி நலத்தடிக்குள் அனுப்பும் பண்பை இழந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இதனால் மண்ணின் பசைத்தன்மை போய், மண்சரிவு ஏற்பட ஏதுவாகிறது.

நீலகிரி மலைப்பகுதிகளில் கூட மண்சரிவு அடிக்கடி ஏற்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்திற்கு மலை ரயிலில் பயணிக்கையில் வழிநெடுகும் லாண்டனாக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன.என்னுடைய புகைப்படக் கருவியில் அடக்க முடியாத அளவுக்கு. விசாரிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுதும் இதன் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளதாம். நமது சொந்த மண்ணிற்கு இந்தச் செடியினால் ஏற்படும் அபாயம் தெரியாமல் குழந்தைகளும் பெரியவர்களும் கைகளை நீட்டி, அந்த விஷச் செடியினைப் பறித்து விளையாடினர்.

இது எப்படிப் பிழைக்கிறது? மிகக் கடினமான பாறை இடுக்களிலும், தண்ணீர் அதிகமாகக் கிடைக்காத பகுதிகளிலும் கூட எளிதில் வளரக்கூடிய அமைப்பு கொண்ட இத்தாவரத்தின் விதைகள் காட்டுதீயாலும் பாதிக்கப் படுவதில்லை. எனவே, காட்டுத் தீ வந்த பிறகு, மற்ற செடிகளின் விதைகள் அந்தப் பகுதிக்குள் விழுவதற்குள், இவைகள் புதர்களாக வளர்ந்து அந்த இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. தண்ணீர் கிடைக்கையில் அதனை உறிஞ்சி தண்டுப் பகுதியில் சேமித்து வைத்துக் கொண்டு, பாலைவன ஒட்டகம் போல, வெகு நாள் செழிப்போடு இருக்கிறது. இதனால் தான் மற்ற செடிகள் வாடிக் கருகிக் கிடைக்கும்போதும், இந்த லாண்டனாப் புதர்கள் செழிப்போடு இருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியை எப்படிக் கட்டுப் படுத்தலாம்..??

மிக எளிய வழி மனித ஆக்கிரமிப்பு. அதாவது மனிதன் இந்த லாண்டனாவைப் பெரிய அளவில் உபயோகப் படுத்தினால் தானாக இவை குறைந்து விடும்.
அழிப்பது ஒன்றும் நமக்குப் பெரிய வேலை இல்லை. தற்போது இந்த லாண்டனா விறகாகவும் கூடை நெய்யவும் மற்றும் சிலவகை மருந்து தயாரிக்கவும் பயன்படுகின்றன. சிலவகை ரசாயனம் கலந்தால் இதன் தண்டுகளைக் காகிதம் தயாரிக்க உபயோகப் படுத்தலாம். இதனைப் பெரிய அளவில் செய்ய முனைந்தால் இவை அழிக்கப்படவோ, இவற்றின் ஆக்கிரமிப்பு குறைக்கப்படவோ அல்லது மேலும் விரவாமல் கட்டுப்படுத்தபடவோ வாய்ப்புகள் உள்ளன.

மற்றபடி ரசாயனகள் மூலமோ , புல்டோசர் எந்திரங்களின் மூலமோ, கைகளால் வெட்டுவதன் மூலமோ, தீயிட்டுக் கொளுத்துவதன் மூலமோ சிறு சிறு நிலப்பகுதி மக்கள் அங்கே படர்ந்துள்ள லாண்டனாவைக் கட்டுப் படுத்தலாம்.
சிலவகைப் பூச்சிகளைப் பரப்புவதன் மூலம் கூட இச்செடியின் இனவிருத்தியைக் குறைக்க முடியுமாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், மக்களிடம் விழிப்புணர்ச்சி வர வேண்டும் என்பதே..!! நான் மேற்கூரியதைப் போல மக்களுக்கு இதனைப் பற்றித் தெரியாததால், ரயில் பாதை நெடுகும் பரவியிருந்த இந்த 'அழகான' தாவரத்தை மட்டுமே ரசித்துக் கொண்டே வந்தனர். இந்தச் செடிகள் வருவதற்கு முன்னர், அங்கே எவ்விதமான தாவரங்கள் இருந்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. இதை விடக் கொடுமை, இந்தத் தாவரம் செடிகள் விற்கும் நர்சரிகளில் அழகுப் பொருளாக விற்பனைக்கு உள்ளன. மக்களும் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு,சிவப்பு என்று விதம் விதமாகக் கொத்துக் கொத்தாகப் பூக்கும் இச்செடியை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.

என் நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஒரு கடையில் விசாரித்து விட்டுப் பிறகு அவர்களிடம் இதன் தீமைகளைப் பற்றிக் கூறி, இதை விற்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் கடைக்காரர் எப்படி பதில் கூறியிருப்பார் என்று நமக்கு எல்லோருக்குமே தெரியும்..


நன்றி..
சாமக்கோடங்கி

Wednesday, October 5, 2011

வாழ்க்கை எனும் ஓடம்..

ஒரு சிறு குழந்தை ஒரு சிறிய பொம்மையை எடுத்து விளையாடுகிறது.. சிறிது நாட்கள் கழித்து இன்னொரு புதிய விளையாட்டுப் பொருள் கிடைக்கையில், இந்தப் பழைய பொம்மையை விட்டு விட்டு அதனைக் கையில் எடுத்துக் கொள்கிறது. வாழ்க்கையின் தத்துவம் இங்கே துவங்குகிறது..

பாசம், கண்ணீர், சண்டை, குதூகலம், நண்பர்கள், துரோகம், காதல், தொழில், லாபம், நட்டம், துன்பம், இன்பம், தனிமை, உளைச்சல் என்று பலவகைக் கூறுகளால் நமது வாழ்க்கை கட்டப் பட்டுள்ளது. இவைகளில் பலவற்றை அவ்வளவு சாமான்யமாக உதறித் தள்ள முடியாது.

ஆனால் எவை எவை எந்தெந்த நேரத்தில் கிடைக்கிறதோ, அதைப் பொருத்து ஒருவன் அதிர்ஷ்டசாலியாகவோ அல்லது ஏமாளியாகவோ ஆகிறான்.

சிறுவயதில் கிடைத்த நண்பர்களுடன் விளையாடுகிறோம்.. அப்புறம் பெற்றோருடன் திரைப்படங்கள் செல்கிறோம்.. வெளியே வரும்போது நாமும் ஒரு ஹீரோவைப் போலவே உணர்கிறோம்.. கெட்டவைகளை உடனே களையும் ஒரு பாராக்ரமம் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்குகிறோம்..வாழ்க்கை ஓடுகிறது.. பள்ளிக் காலம்.. மறக்க முடியாத நினைவுகள்.. நல்ல நண்பர்கள்.. கெட்ட நண்பர்கள்..அப்படி ஓடுகிறது வாழ்க்கை.

பள்ளி முடிந்து கல்லூரி.. சிலருக்கு பல மலரும் நினைவுகள் இங்கு தான் பதியம் போடப்படுகின்றன.. பலருக்கு பள்ளிக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் சொல்ல முடியாதவாறு கல்லூரிக் காலமும் முடிகிறது..

இதற்கிடையே கிடைத்த நட்பு வட்டங்களுக்கு ஏற்றவாறு மனம் ஓடுகிறது. நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் கிடைத்தால் அவர்களோடு நாமும் சேர்ந்து பார்த்து விமர்சனம் செய்கிறோம். பாட்டு ஆட்டங்களுடன் சுற்றும் நண்பர்களோடு சேர்கையில் நாமும் இறங்கி ஒரு கை பார்த்து விடுகிறோம்.. நல்ல கதைகளைப் படிக்கும் நண்பர்களோடு சேர்கையில் நமக்கும் புத்தகங்கள் கைமாறுகின்றன.

அரட்டை நண்பர்களுடன் சேர்கையில் அரட்டையில் லயிக்கிறோம்.. அப்புறம், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்தின் உந்துதளாலும், நமது உள்மன உந்துதலாலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்..

ஆனால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்தவர்கள், இந்த வாழ்க்கை ஓடத்தின் ஒரு சிறுபகுதியை மட்டுமே துடுப்பின்றிக் கடக்கின்றனர் என்றே தோன்றுகிறது. மீதத்தைத் துடுப்புப் போட்டுத் தங்களுக்கு ஏற்றவாறு திசைமாற்றி ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர். ஓட்டியும் வென்று விடுகின்றனர்.

இத்தனை காலத்திலும் நாம் இத்தனை விஷயத்தைக் கடந்து வருகிறோம்.. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் ஒரு விஷயத்தின் மீது நமக்கு உந்துதல் இல்லை என்றால் அது நமக்கான களம் இல்லை என்பதே பொருள் என்று நான் நினைக்கிறேன். நமக்கான களம் எங்கோ ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. அதைத் தேடிப்போகாதவர்கள் ஓடம் போகும் பாதையிலேயே வாழ்க்கையைப் பயணித்து விடுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போகும் பாதை இனிதாய் அமையும். சிலருக்கு அமையாது.

ஆனால் தமக்கான களம் எங்கோ இருப்பதை உணர்பவர்கள், அல்லது தமக்கான காலத்தை அமைத்துக் கொள்பவர்கள், சாதாரண மக்களை விட மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கும். நமது இலக்கை நோக்கிச் செல்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதுவும் சொந்த பந்தங்கள், ஆசாபாசங்களால் கட்டுண்டு இருப்பவர்களால், அவ்வளவு எளிதாக அதைக் கடந்து சாதனைப் பாதையைத் தொட்டு விட முடியாது.

ஆனால் என்னைப் பொருத்தவரை தனக்கென ஒரு பாதையை வகுப்பவர்கள்.. எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் வியப்பதில்லை.. அதனுள் இருக்கும் விஷயங்களைப் பொறுமையாக ஆராய்ந்து கற்கிறார்கள் என்றே நினைக்கிறேன்... வியப்பவர்கள் கடைசி வரை வியந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..


விதி விலக்குகளும் இதற்கு உண்டு..

சாமக்கோடங்கி

Tuesday, June 7, 2011

டாக்டருக்குப் படிப்பவர்களே..

"உங்க அப்பாவுக்கு இதயத்துக்குப் போகிற ரத்தக் குழாயில அடைப்பு இருக்கு..!! ஆஞ்சியோகிராம் பண்ணனும் 12000 ரூபாய் வரை செலவாகும்..பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க..!!" பெரிய டாக்டர் சொன்னார்..

நட்ட நாடு இரவில் அவசர அவசரமாக உயிர் நண்பர்கள் பணத்தைப் புரட்டினார்கள்.. உள்ளே அப்பா நெஞ்சு வழியில் துடித்துக் கொண்டு இருந்தார்..

"டாக்டர்... பணம் ரெடி..உடனடியா ஆஞ்சியோ பண்ணுங்க.." டியூட்டி டாக்டரிடம் சொன்னேன்..பெரிய டாக்டர் அங்கே இல்லை.

ரசீது போன்ற ஒரு தாளில் ஒரு தொகையை எழுதி கீழே பணம் செலுத்தும் இடத்தில் செலுத்தி ரசீது பெற்று வரும்படிக் கூறினார் அவர்.. சிறிய வயது.. புதிதாக டாக்டராக இணைந்துள்ளார் என்று நினைக்கிறேன்..

அதில் தொகை Rs.15000 என்று எழுதப் பட்டிருந்தது.. சிலபேர் அவசரத்திலும் பாசத்திலும் துடித்துக் கொண்டு இருப்போர் என்ன ஏது என்று ஆராயாமல் உடனே கட்டி விடுவர்..

"டாக்டர் 12000 ரூபாய் வரை தான் ஆகும்னு சொன்னார்.. நீங்க பதினைந்தாயிரம் போட்டு இருக்கீங்களே.."

ஒருவேளை Rs.15000 தான் உண்மையான தொகையாக இருக்குமோ என்று கேட்டேன்..

உடனே அந்தத் தாளை வாங்கி அதைத் திருத்தி Rs.12000 என்று எழுதிக் கொடுத்தார்.. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்.." ஃபரூக் டாக்டர் போட்டா கம்மியா தான் பில் சொல்லுவார் மற்றவர்கள் பதினைந்தாயிரம் தான் போடுவார்கள்"...

வந்தது பாருங்கள் கோவம்.. "On what basis you are charging Rs.12000 for this operation..? Show me the documents now.. I want to see the documents.." கொஞ்சம் சத்தமான குரலில் கத்த ஆரம்பித்தேன்..

"டாக்டர் 12000 'வரை' தான் ஆகும் என்று சொன்னார்.. நான் ஒரு வேளை டாக்டர் எங்கிட்ட 10000 வரை தான் ஆகும்னு சொல்லி இருந்தா அதை அடிச்சு எழுதி குடுத்து இருப்பீங்களா...?? I want to see your chief doctor now..!!! "

"நீங்க எதா இருந்தாலும் டாக்டர் வந்ததுக்கு அப்புறம் பேசிக்குங்க.. பேஷண்டுக்கு உடனடியா இத பண்ணியாகணும்.. பணம் கட்டினால் தான் பண்ண முடியும்.."

சொல்லி விட்டு விருட்டென்று உள்ளே போய் விட்டார்..

ரமணா படத்தில் வரும் அந்த மருத்துவமனை காட்சி போலவே இருந்தது அவர்களது நடவடிக்கை..

------------------------------

+2 வில் முதல் மதிப்பெண்கள் பெரும் பெரும்பாலான மாணவச் செல்வங்கள் சொல்வது " நான் படித்து டாக்டர் ஆக வேண்டும்" என்பதே.. அதனோடு இதையும் சேர்த்து மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. டாக்டர் ஆனால் போதாது..நீங்கள் பணம் சம்பாரிக்க வேண்டும் என்றால் மனசாட்சியை அடகு வைத்து, நீங்கள் பணியாற்றப் போகும் மருத்துவமனைக்கு லாபம் சேர்க்க இது போன்ற கோக்கு மாக்கு வேலைகளையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்..

நன்கு மதிப்பெண்கள் எடுக்காதவர்கள் கூட வேறு சில நல்ல வேளைகளில் மனசாட்சிக்கு கட்டுப் பட்டு நேர்மையாகப் பணி புரிகிறார்கள்.. ஆனால் அனேக மக்கள் உயிர் காக்கும் தெய்வமாக மதிக்கப் பெரும் மகத்தான மருத்துவர் பணிக்காக கஷ்டப்பட்டு படித்து, கடைசியில் இப்படிக் காசுக்காக கேவலமாகப் பணிபுரிவது எவ்வளவு கொடுமை..


பாவம் அந்தப் பெண் என்ன செய்வார்..?? லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து டாக்டருக்குப் படித்து விட்டார்.. மருத்துவமனையிலும் பணிக்குச் சேர்ந்து விட்டார்.. இனி அவரது "திறமையை" காட்டினால் தானே முன்னுக்கு வர முடியும்..

நல்ல வேலையாக எனது தந்தையை இந்தப் பணம் தின்னி மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனைக்கு அரை நாளில் மாற்றி விட்டேன்.. அதற்குள் எங்களது பாதி சேமிப்பு கரைந்து விட்டது..!!!

நேரமின்மை காரணமாக அதிகம் எழுத முடியவில்லை..

மருத்துவமனையில் நடந்த கூத்துகள் அத்துனையும் பெயர் விவரங்களுடன் அடுத்த பதிவில்..

நன்றி..
சாமக்கோடங்கி

Sunday, April 17, 2011

சுற்றுலா... பகுதி 3 - பரளிக்காடு.

வணக்கம் நண்பர்களே.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அவ்வப்போது கணினி மூலம் பார்த்து வருகிறேன். அதில் ஓவர் இடைவெளிகளில் ஒரே ஒரு விளம்பரம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. அதுதான் கேரளா சுற்றுலாத்துறையின் அழகான வண்ண விளம்பரம். மிகவும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் வெள்ளைக் காரர்களும் உள்ளூர் வாசிகளும் தங்கள் பயணத் திட்டத்தில் கண்டிப்பாக கேரளாவை இணைத்து இருப்பார்கள். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம் இடம் பெறுகிறதா என்று தெரியவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இயற்கை வனப்பும், நீர்வளமும், அழகான கடற்கரையும், ஏரிப்பகுதிகள் நிறைந்த பகுதிகளும், பலவிதமான பாரம்பரியக் கலைகள் என்று கேரளா உண்மையிலேயே அழகான மாநிலம் தான். ஆனால் நமது மாநிலமும் அதற்கு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. அது சரியான முறையில் மக்களைச் சென்றடைகிறதா என்பது தான் எனது கேள்வி.

தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையை அரசு மேம்படுத்த வேண்டும். இருக்கும் சில புராதான கலைப் பொக்கிஷங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதே நமது ஆசை. இந்தப் பதிவில், எனக்கு ரொம்ப காலம் தெரியாமலேயே இருந்த கோவை மேட்டுப்பாளையத்தின் மிக அருகில் அமைந்திருக்கும் ஒரு அழகான சுற்றுலாத் தலத்தைப் பற்றிப் பார்ப்போம்.

(படங்களின் மீது கிளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்)

மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகு

கோவை மேட்டுப்பாளையத்தின் அருகே இருக்கும் காரமடை பேரூராட்சியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு. மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னுமொரு வரப்பிரசாதம். அந்த சாலை இன்னும் தொடர்ந்து கேரளாவிற்கும் செல்கிறது, ஊட்டியின் ஒரு பகுதியையும் கூட இணைப்பதாக செய்தி. இந்தப் பகுதிக்குச் செல்ல வனத்துறையினரின் அனுமதியை முன்னமே பெற வேண்டும். பரளிக்காட்டுக்கு மிக அருகே பவானி ஆற்றின் பில்லூர் ஆணை ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

அதிகம் அறியப்படாத பகுதி என்பதால் பிழைத்தது. அடுக்குமாடி லாட்ஜுகள், கூட்ட நெரிசல்கள், குப்பைக்கூளங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான காட்டுப் பகுதியாகவே உள்ளது. பார்ப்பதற்கு அதிகம் ஒன்றும் இல்லை என்றாலும் உங்கள் ஒருநாள் அழகான விடுமுறைக்கு இந்த அமைதியான பகுதி உத்திரவாதம் அளிக்கும்.

முப்பது பேர் கொண்ட எங்கள் டிபார்ட்மென்டில் சுற்றுலா செல்ல முடிவெடுத்த போது பயணத் தூரம் குறைவாக இருக்க வேண்டும் என்று தேட ஆரம்பித்த போதுதான் இந்தப் பகுதியைப் பற்றி அறிந்து கொண்டோம். நானும் எனது நண்பனும் இந்த இடத்தை ஒருமுறை பார்த்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று ஒரு நாள் பணிமுடிந்து மாலை கிளம்பினோம். காரமடை தாண்டி 25 கிலோமீட்டர் தொலைவிற்கு வந்ததும் இருட்டத் தொடங்கி இருந்தது. வனப்பகுதி எல்லைச் சோதனைச் சாவடியில் காவலர் எங்களை வழிமறித்தார். வனச்சரகரிடம் முன்னமே பேசியிருந்ததாகச் சொன்னோம்.

சோதனைச் சாவடி.. இரண்டு சோதனைச்சாவடிகள் உண்டு.

"தம்பி இது என்ன சும்மா ஊருக்குள்ள போகர மாதிரியாப்பா..? ஆறுமணிக்கு பொழுது சாஞ்சு சாவகாசமா வர்றீங்க..? யானைங்க சுத்துற காடுப்பா..காரு லாரின்னாக்கூட உடலாம். டூவீலர் வெச்சுக்கிட்டு ரெண்டு பேரு.. நடுவால யானைங்க வந்துச்சுன்னா ஒன்னும் பண்ண முடியாது.. காப்பாத்த ஆளுங்களும் இல்லை.. திரும்பிப் போயிடுங்க தம்பி.. காலைல வெளிச்சமா வாங்க.." என்று பயமுறுத்தி விட்டார். "சார் நாங்க சுத்திப் பாக்க வரலை. இந்த இடம் சரியாக இருக்குமான்னு பத்து நிமிஷம் பாத்துட்டு போயிடறதாத் தான் ரேஞ்சர் கிட்ட சொல்லி இருக்கோம்" னு சொன்னேன். "அரை மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுங்கப்பா.. எங்கயும் வண்டிய நிறுத்தாதீங்க.." மறுபடியும் பயமுறுத்தினார்.

"பிரகாசு எதுக்கு ரிஸ்க்கு.. வாய்யா போயிடலாம்.. யானை கீனைன்னு வேற பயமுறுத்துராறு"-அல்ரெடி நண்பன் ஆட்டம் கண்டிருந்தான்.
"வாடா மச்சி.. இருட்டுறதுக்குள்ள திரும்பிடலாம்.. நான் இருக்கிறேன்.. நன்பேண்டா..."

கொஞ்ச தூரம் தான் போயிருப்போம், பாதை மலையின் மீது ஏற ஆரம்பித்து வளைந்து வளைந்து சென்றது. மலைப்பாதையில் ஓட்டுவது அலாதியான சுகம் என்றாலும் இதில் ரோடு கொஞ்சம் அகலம் குறைவு. அங்கங்கே கடமுட. எங்க ரெண்டு போரையும் வைத்துக் கொண்டு என்னுடைய 100CCவண்டி திணறிக்கொண்டே ஏறியது. காட்டுப்பூச்சிகளின் இரைச்சல் வேறு பயமுறுத்தியது. வழியில் பெரிதாகக் கிடந்த யானைச் சாணியைப் பார்த்ததும் ரெண்டு பேருக்கும் கிலி பற்றிக் கொண்டது. இடையில் ஆடு மாடு நாய் கோழி ஆகியவற்றுடன் கூடிய பத்துப் பனிரெண்டு வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தைக் கடந்தோம். ஏதாவது பிரச்சினை என்றால் இங்கே தான் வர வேண்டும் என்று குறித்துக் கொண்டோம்.

ரேஞ்சரைச் சந்தித்ததும், அவரும் இதையே தான் கேட்டார். "என்ன தம்பி இவ்ளோ பொழுது சாஞ்சு வந்திருக்கீங்க. சீக்கிரம் போய் பாத்துட்டு வாங்க" என்று அனுப்பினார். அவரைத் தாண்டி ஐந்து கிலோமீட்டரில் அந்த நீர்ப்பிடிப்புப் பகுதி எங்களை அழகாக வரவேற்றது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு சரியான இடம் என்று தோன்றியது. பரிசல் பயணம் மற்றும் கூடி மதிய உணவு மற்றும் விளையாட்டுகளுக்கு ஏதுவான இடம்.

"பாத்தாச்சு இல்ல.. வா போகலாம்.." - நண்பன்.

திரும்பி வரும்போது இன்னும் திரில். இறக்கமான வளைவுகளில் பத்தடிக்கு மேல் ரோடு தெரியவில்லை. எதிரே யானைக் கூட்டங்கள் நின்னுட்டு இருந்தா வண்டியைத் திருப்பக் கூட முடியாது. உயிரைக் கையில புடிச்சிட்டு சோதனைச் சாவடியை அடைந்த போது.. "தப்பிச்சுட்டீங்களா.." என்று கேட்பது போல இருந்தது அந்தக் காவலாளியின் பார்வை. ஒரே சலாமை வைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தோம்.

பாதுகாப்புடன் கூடிய பரிசல் பயணம்

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி, திரில் பரிசல் பயணம் எல்லாமே அழகு. ஆங்காங்கே கரையோரங்களில் இறக்கி விடப் படுவீர்கள் கொஞ்ச நேரம் இயற்கையை ரசிக்கலாம். பரிசலில் சுற்றியவாறே மலைகளின் அழகைக் காணலாம். மேலே மலை மக்களின் குடியிருப்புகளையும் பார்க்கலாம். திரும்பி வரும் வழியில் ஆற்றில் குளிக்க ஒரு அழகான இடம் உள்ளது. நண்பர்கள் பலருக்கும் ஒரு மணி நேரம் ஆகியும் அந்த ஆற்றை விட்டு வெளியே வர மனசில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணாடி போன்ற தெளிவான சுத்தமான ஆனால் உறைய வைக்கும் பரளியாற்று நீர் உங்கள் உடலைக் குளுமைப் படுத்தும்.

பரிசலில் இருந்த படியே பில்லூர் அணையைப் பார்க்கலாம்

மலைமக்கள் வாழும் பகுதி

கண்ணாடி போன்ற தெளிவான நீர்ப்பிடிப்புப் பகுதி

பரிசலை ஓட்டியவர் கூறினார் அங்கே முதலில் எல்லாம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனராம். இப்போது அடிக்கடி சந்தைக்காக கீழே இறங்கி வர வேண்டியிருப்பதால் அவர்களின் கலாச்சாரம் அப்படியே மாறி தாலி கட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம்.


மதிய உணவு.. மீன் மற்றும் சிக்கனும் கிடைக்கும்.

மதிய உணவு தான் இங்கே ஒரு ஸ்பெஷல். ரேஞ்சரிடம் சொல்லி விட்டால் அவரே சைவ மற்றும் அசைவ மெனுவை உங்களுக்கு அளிப்பார். நீங்கள் வேண்டியதைச் சொல்லி விட்டால் அங்கே உள்ள கிராமப் புற மக்கள் மூலம் தயாரித்துக் கொடுப்பார். நீங்கள் செலுத்தும் முன்னூறு(இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை)ரூபாயில், பரிசல் பயணம் மற்றும் இந்த மதிய உணவு மற்றும் காலையில் தேநீர் போன்றவை அடங்கும். இதில் ஒரு பங்கு மலைவாழ் மக்கள் நலனுக்காக அரசால் உபயோகப் படுத்தப் படுவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
யானைகள் இங்கே தண்ணீர் குடிக்க வருமாம்

யானைகள் சுற்றும் காட்டுப் பகுதி ஆனாலும் நீலகிரிக்குச் செல்லக்கூடிய குறைவான பேருந்துப் போக்குவரத்து உள்ளது. பெரிய வண்டிகளில் வந்தால் பயம் இல்லை, யானைகள் இருந்தால் அப்படியே வண்டியை அணைத்து நிறுத்தி விட்டால் அவைகள் தானாகப்போய் விடும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். முடிந்தால் வந்து பாருங்கள். அப்படியே உங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிறு சிறு சுற்றுலாத் தளங்களையும் அறிமுகப் படுத்துங்கள். அனைவரும் பயனடைவோம்.

நன்றி
சாமக்கோடங்கி

Monday, April 11, 2011

நாளைக்கு சோத்துக்கு..?

அடுப்பங்கரையில் புகை மூக்கில் ஏற இருமிக்கொண்டே நெருப்பை ஊதி விட்டுக்கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான் செல்வம்.

அம்மா அம்மா..வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள் னு புக்குல போட்டிருக்கே.. வருமைன்னா என்னம்மா..??

தெரியலடா கண்ணா...(எப்படி சொல்வதென்று தான் தெரியவில்லை)

வயிறு பசிக்குதும்மா படிக்கவே முடியல..

இருடா கண்ணு சாதம் வடிச்சவொடனே தர்றேன்.

அம்மா இது எதுக்கும்மா மண்ணெண்ண வெளக்கு.. எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது.. மூக்கு எரியுது.. காலைல எந்திரிச்சா மூக்குல எல்லாம் கரி ஒட்டி இருக்கு.. இந்த பல்பு எரியவே எரியாதா..

கரண்டு இல்லடா கண்ணு..(கரண்டு பில்லு கட்டவும் காசு இல்லடா..)

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

அதா உங்கப்பா வர்றாரு அவருகிட்டையே கேளு..

"எவண்டா இது.. கதவ இவ்ளோ சின்னதா வெச்சது... ஹிக்.. ஓ.. ஜன்னலா.. எவ்ளோ ஏத்தனாலும் நம்ம ஊட்ட கரீக்டா கண்டு புச்சுடுவேன்.. நா யாரு.."

அப்பா அப்பா.. வேகமாக ஓடி வந்தவன் வாடை அதிகமா அடிக்கவே ரெண்டடி தள்ளி நின்றான்..

வாடா என் சிங்கக்குட்டி.. என்னாப்பா படிக்கிறியா.. நீ படிச்சு என்ன சாதிக்கப் போறே..??
ஏந் தலைவன்.. இந்த ஊரு எம்எல்ஏ எலெக்ஷன்ல நிக்கிறவரு.. என்னா பச்சிருக்காரு..? ஆறாப்பு.. ஆனா பெரிய படிப்பு படிச்சவன் எல்லாம் வேலைக்கு மனு குடுத்து கியூவுல நிக்கிறான் நாய் மாறி.. இதெல்லாம் உனக்கு சொன்னா எங்க புரியப்போகுது.. உனக்கு பீஸ் கட்டியே ஏன் சொத்தெல்லாம் போகப்போகுது.

"ம் க்ம்.. ஒழுங்கா சம்பாரிசிட்டு வர துப்பில்லை.. கச்சி கச்சின்னு நாயாட்டம் அலஞ்சு வீடே உருக்குலஞ்சு போச்சு.. எங்க இருக்கு சொத்து.. அழிக்கறக்கு..? அதான் எல்லாம் குடிச்சே அழிச்சாச்சு.."

"ஏய் என்னாடி அங்க தனியா கத்திக்கிட்டு இருக்கே.."

"அப்பா வருமைன்னா என்னப்பா...?"

"நாம எல்லாம் வருமைல தான் இருக்கோம் ராசா.."

"ஓ ராசா எல்லாம் வருமைல தான் இருப்பாங்களா.."

"..."

"தலைவர்கள்னா யாருப்பா.."

"அப்டி கேளு ராசா.. இப்போ அப்பாவுக்கு ஒழுங்கா ஜோலி இல்ல. எலக்ஷன் டைம் ஆச்சா.. நம்ம எம்எல்ஏ பாரு.. கொடி கட்ட கூப்ட்டாறு.. ஒரே நாளு.. முன்னூறு ரூபா.. ஒரு நாள் சோத்துக்கு வழி பண்ணீட்டாறு.. அவரு தான் தலைவரு..!!"

"நீ கெடுத்ததும் இல்லாம குடிச்சிட்டு வந்து ஏன் இப்படி பையனையும் கெடுக்கற...முந்தா நேத்து ராத்திரி போனது இப்பதான் வீடு கண்ணுக்கு தெரிஞ்சுதா..??"

"ஏய்.. என்னாடி தப்பா சொல்லீட்டேன்..? நேத்து ஒரு வேல.. மூனாந்தெருவுல இருக்குற அத்துன வீட்டுல இருக்குறவங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்யணும்.. ஓட்டுக்கு ஆயிரம் ரூவா... இந்தக் காலத்துல எவன் தருவான் சொந்தக் காசில இருந்து ஆயிரம் ரூவா...?? எந்தலைவரு கொடைவள்ளல்.. டே மாரி..காலைல அஞ்சர மணிக்கு மாரியம்மன் கோயில் கிட்ட 108 சத்தமில்லாம வரும்.. பணத்த எறக்கிக்க.. அந்த முட்டு சந்துல இருக்குறானே கணேசன், அவனும் அவன் கூட்டாளிகளும் வெட்டிப்பசங்க.. வீணா தேசியம் பேசிட்டு திரியறவிங்க.. அவங்க கண்ணுக்கு மட்டும் படாம எல்லா வீட்டுலையும் கதவு வழியா உள்ள போட்டுடு.. எலக்ஷன் முடிஞ்சவுடனே லம்பா ஒரு அமவுண்ட் தர்றேன்னாரு..

நல்லதா கூட மறச்சு மறச்சு செய்ய வேண்டி இருக்குது பாரு..காலம் கெட்டுப்போச்சு..

வெடியக்கால பணத்த குடுத்திட்டு இருந்தா எந்த எட்டப்பனோ போலீசுல போட்டுக் கொடுத்திட்டான்.. கொஞ்சம் இல்ல.. முடிசிருப்பாணுக... உன் தாலி தப்பிச்சிது.. மூஞ்சிய மூடி இருந்ததால அவனுகளுக்கு அடையாளம் தெரியல.."

"அடப்படுபாவி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.. இதுல அவனுகள நீ எட்டப்பன்னு சொல்ற.. கடவுளே..இரு இரு.. பாத்துகிட்டே இரு.. உன் தலைவன் குடுப்பான் பாரு.."

"என்னாடி தரல..?? எல்லா வீட்டுக்கும் ஒரு டிவிதானடி குடுத்தாங்க.. நமக்கு மட்டும் எப்படிடி ரெண்டு டிவி வந்துச்சு..??அதுல ஒண்ண வித்து தாண்டி வட்டிகாரன் கடன அடச்சேன்.. ஒர்ருவா அரிசி ஒரு மூட்ட நமக்கு சும்மா தந்திருக்காரு.. வேற யாருக்காவது தந்தாரா.. டாஸ்மாக்குல சரக்கு என்ன வெல விக்குது.. கட்சிக்காரங்க கஷ்டப் படுறாங்கன்னு எங்களுக்கு ஓசியிலேயே குடுக்கறாரு.. வேற யாரு குடுப்பா...? மரியாதிக்கு பேசுறத நிறுத்திட்டு சோத்த போடுற.. நாளைக்கு வந்து தலைவருக்கு ஓட்ட போடுற.. மத்தவங்கள மாதிரி இல்ல... நமக்கு ஸ்பெஷலு.. ஐயாயிரம் ரூபா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.. ரெண்டு பேத்துக்கும் சேத்தி.. மூணு நாலு மாசம் மாங்கு மாங்குன்னு ஒழச்சாலும் கெடைக்காது தெரிஞ்சுக்க.."

"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."
"வறுமையை ஒழிக்க நமது தலைவர்கள் அயராது போராடினார்கள்."

செல்வம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தான்..
--------

மக்களே.. இது போன்ற 'மாரி'கள் தான் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் என்பது நமக்கே நன்றாகத் தெரியும். இப்போது தமிழ்நாட்டின் கிராமங்களில் என்ன பேச்சு தெரியுமா..?

"பக்கத்துத் தெருவுல ஓட்டுக்கு ஆயிரம் ரூவா குடுத்திருக்காங்க.. நமக்கு வெறும் ஐநூறு தானாக்கும்.. இருவே.. அந்த எம்எல்ஏ எவ்வளவு தருவார்னு தெரியலே."

"மாப்ள ஓட்டுக்கு இருநூத்து அம்பது ரூபா தாரமுன்னு சொன்னாங்க. எரநூறு ரூபா தான் குடுத்தாங்க.. . தேர்தல் சமயத்துல தண்ணி பிரியாணி செலவுக்கு வேண்டி தலைக்கு அம்பது ரூபா மட்டும் இப்பவே புடிச்சிக்கிறதா சொன்னாங்க.. அது சரி.. எவன் அம்பது ரூபாய்க்கு தண்ணியும், பிரியாணியும் குடுப்பான்.."

நல்ல மக்கள்.. மக்களுக்கு ஏற்ற அரசு.. வாழ்க ஜனநாயகம்..

சாமக்கோடங்கி

Saturday, April 9, 2011

கொதி நிலை - பாகம் 5

வணக்கம் நண்பர்களே..

கொதிநிலை என்ற ஒன்று ஒவ்வொருவருக்குள்ளும் உண்மையாக வர வேண்டும், அது தேர்தலிலிலும் வெடிக்க வேண்டும்,அதற்குப் பிறகும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

நமது நாட்டின் அவல நிலையைப் பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்தத் தொடரின் நோக்கமே, பிரச்சினைகளையும் கூறிப் பின் அதற்கான தீர்வுகளையும் நுட்பமாக அலசுவதே..

ஆக இன்னும் பிரச்சினைகளையும் அடுக்கிக் கொண்டே போனால், நான் உண்மையில் சொல்ல வந்ததே மறந்து விடவும் வாய்ப்புள்ளது. அது இந்தப் பகுதியில் இருந்து தொடங்குகிறது. நமது நாட்டில் தற்போது நடக்கும் விஷயங்களைச் சற்று அலசிப் பார்ப்போம்.

'மாமூலாக' நடந்து கொண்டிருந்த லஞ்ச ஊழல் போட்டியில் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு போக, சட்டென்று அதில் ஏதோ ஒன்று வெளிச்சத்திற்கு வர அனைவரும் உஷாராகி விட்டனர். வெளிநாட்டுக் காரர்கள் இந்தியாவைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். திடீரென ஊழலுக்கேதிரான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும் என அன்னா ஹசாரே புறப்பட அவருடன் பலபேர் கைகோர்த்தனர். நேரில் கூடியவர்கள் தான் பாராட்டப் பட வேண்டியவர்கள்.. மக்கள் சக்தியை அரசுக்குக் காண்பிக்க உதவியது.நோக்கம் நிறைவேறுமா என்பது வேறு விஷயம். ஆனால் இணையத்தில் என்னவென்றே தெரியாமல் பலநூறு பின்தொடர்பவர்கள். என்ன பயன்..?(எப்படியும் அவர் கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியதில்லை.. இருந்த இடத்தில் ஒரு பொத்தான் தானே.. எளிதில் அமுக்கி விடலாம்).

தேர்தல் ஆணையம் சற்று கறாராக நடந்து கொள்வது மனதிற்குக் கொஞ்சம் ஆறுதல்(இதிலும் ஏதேனும் அரசியல் பின்னணி உண்டோ என்னவோ ஆண்டவனே..). அதைப் பொறுக்காமல் சின்னக் குழந்தையின் கையிலிருந்த குச்சி முட்டையைப் பிடுங்கினால் போல அழும் முதலமைச்சர். இப்படிக் கெடுபிடிகளைத் தாண்டியும் மக்களுக்குத் தேர்தல் 'அன்பளிப்பைக்' கொடுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பலே கில்லாடிகள்.

இதிலிருந்து நான் கவனித்த சில விஷயங்கள்.

படித்த அதிக வருமானம் ஈட்டும் இளைஞர்கள் இந்தியாவில் பெருகி வருகிறார்கள். அவர்களை இணைக்கும் பாலமாக பேஸ்புக் போன்ற இணையதளங்கள் செயல்படுகின்றன. ஆனால் இவர்களால் என்ன பயன் விளையப் போகிறது..? இவர்களை ஒரு பொருட்டாகவே மத்திய மாநில அரசுகள் கருதவில்லை. அவர்கள் தங்களுடைய 'டார்கெட்'டில் தெளிவாக இருக்கிறார்கள். இலவசங்கள் ஆபத்தானவை என்று இந்த படித்த இளைஞர்களுக்குத் தெரிகிறது. எப்படி..? நிறைய படிக்கிறார்கள், மடல்கள் அனுப்புகிறார்கள், நண்பர்களுடன் ஜாலியாகப் பகிர்கிறார்கள். ஆனால் இது போன்ற பொதுவெளி ஊடகங்களுடன் தொடர்பில்லாத மக்கள் தான் இந்தியாவில் அதிகம் நண்பர்களே.. எனவே தான் இந்தத் தேர்தலிலும் இலவசங்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். இணைய இளைஞர்கள் அவர்களின் டார்கெட்டிலேயே இல்லை..

சரி சராசரி மனிதனுக்கு ஒரு செய்தி எப்படி சென்றடைகிறது..? ஊடகங்கள்..?? அவை எப்படிச் செய்தியைத் திரித்துச் சொல்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். பல இடங்களில் வருடக் கணக்காகத் தொடரும் போராட்டங்களை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை, வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை, ஆனால் திடீரென ஏதாவது ஒன்று தானாக வெளிச்சத்திற்கு வந்து விட்டால், தங்களது பத்திரிக்கை விற்பனைக்காக அதை ஊதிப் பெரிதாக்குகின்றன. ஊடகங்களில் பெரும்பாலானவை கட்சிகளின் கையில்.. என்ன செய்ய முடியும்..?? நாள்தோறும் தொகா களில் இடம்பெறும் எதிரணியினர் பற்றிய அவதூறு செய்திகள், வீடியோக்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது.. ஆனால் நம்பினால் நம்புங்கள், அந்த செய்திகளை நம்புவோர் நமது நாட்டில் பலர் இருக்கிறார்கள். அவர்களைத் தான் இந்த அரசியலாளர்கள் குறி வைக்கிறார்கள். நாமெல்லாம் வெத்து வேட்டுகள்.. அதாவது சிறுபான்மையினர்.

சரி. படித்த இளைஞன் என்ன செய்கிறான்..? அவனுக்கு இது தவறென்று தெரிகிறது. உடனே பேஸ்புக்கில் ஒரு மறுப்பு எழுதுகிறான். யாராவது அனுப்பியதை மற்றவர்களுடன் பரிமாறுகிறான்.. இதனால் நடப்பது என்ன..? அதே செய்தி அந்த மக்களுக்குள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கோழிகள் போட்ட முட்டைகள் பண்ணையிலே இருந்தால் யாருக்கு லாபம்..? கடைத்தெருவிற்கு வர வேண்டுமே..?? அதை யார் செய்வது..? இன்று இந்த சமூக பொதுவெளி ஊடகங்களில் ஆர்ப்பரிக்கும் நண்பர்களில் எத்துனை பேர் தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இருக்கிறோம் சொல்லுங்கள். ஒரு நாள் விடுப்பு எடுத்து விட்டு வரச் சொன்னாள் வருவீர்களா.??

போராட்டத்தின் சாராம்சம் தியாகம், நீதி, நேர்மை.. அது நமக்குள் இருக்கிறதா என்று முதலில் சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்வோம். தனது ஒரு நாள் ஊதியத்தை இழக்க யாரும் தயாரில்லை, தனது தாய் தந்தையர், சுற்றத்தார் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயார் இல்லை, எங்கோ ஒருவர் தவறு செய்கிறார், யாரோ ஒருவர் கஷ்டம் அனுபவிக்கிறார், அதை நாம் யாரோ ஒருவருடன் பகிர்ந்து கொள்கிறோம், அது முடிந்தவுடன் எக்கேடோ கேட்டுப் போகிறோம். உண்மையச் சொல்லப் போனால் நமது கூரையில் தீ வைக்கப் பட்டால் தான் நெருப்பு என்றால் என்ன என்று புரியவரும்.. அது நமது இளைஞர்களில் பலருக்குப் புரியவில்லை. நான் எல்லோரையும் சொல்லவில்லை.

அப்போ என்னதான் செய்யலாம்..? கொள்கை வேண்டும். கொள்கை கட்டாயம் வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சிறு கொள்கையாவது இருக்க வேண்டும். மாற்றங்கள் நம்முள் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே எப்போதும் என்னுடைய கருத்து. நமது நாட்டில் நல்ல குடிமக்கள் இருக்கிறார்கள், ஆனால் வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லை என்று ஆதங்கப் படுபவர்கள் பலபேர்.. ஆனால் இப்போதைய தேவை நாம் திருந்துவதே.

உனக்கு அவசரம் என்றால் காசு கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகிறாய்.. உனக்கு அவசரம் என்றால் போலீசுக்கு காசு கொடுத்து உரிமம் இல்லாமல் தப்பிக்கிறாய்.. அப்போதெல்லாம் அது தவறேனத் தோன்றவில்லை. இப்போது மட்டும் பொங்குகிறாய்.. இது போலி வேஷம்.. நாட்டில் நாமும் ஒரு அங்கம். நாட்டில் ஊழல் உள்ளதென்றால் உனக்குள்ளும் ஊழல் உள்ளதென்றே அர்த்தம். ஏதோ வெளியில் நடப்பதெல்லாம் அநியாயம் என்றும் நமக்குள்ளே நாமெல்லாம் மகாத்மா என்றும் நினைத்துக் கொண்டால், சமுதாயத்தைப் பற்றி நமது நாட்டைப் பற்றி இன்னும் சரியாகப் புரிதல் இல்லை என்றே அர்த்தம். அதை முதலில் புரிந்து கொள்வோம். மாற்றத்திற்கு இதுவே முதல் படி.

அடுத்த பகுதியில் குழந்தைப் புருவத்தில் இருந்து என்னன்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதைக் கலந்தாய்வோம்..

நன்றி..
சாமக்கோடங்கி

Saturday, March 26, 2011

பறவைக்கும் ஒரு கூடு..

துபாய் விமானத்தைப் பிடிக்க சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கையில் அருகில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்மணி இருந்தார். ஒருமணி நேரம் ஒன்றும் பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தவாறு இருந்தோம். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நுனி நாக்கு ஆங்கிலத்தில் என்னிடத்தில் பேச்சுக் கொடுத்தார்.. நல்ல சரளமான நடை.. நாங்கள் எங்கிருந்து வருகிறோம், எங்கே போகப் போகிறோம் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.. தான் இங்கிலாந்திலிருந்து ஒரு வாரம் சென்னை வந்ததாகவும் இப்போது திரும்பி செல்வதாகவும் சொன்னார். இங்கிலாந்தில் இருந்து வந்திருந்தாலும் முகத்தில் தமிழ்க்கலை தெரிந்தது..

பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்த ஒரு பெண்மணி, சோதனை வரிசையில் நின்று கொண்டிருந்த தன் மகனை அழைக்க விரும்பினார்.. அவரால் முடியாமல் போகவும் என் அருகில் இருந்த பெண்மணி "என்னம்மா, அவர் உங்க பையனா..?? கூப்பிடணுமா..? இருங்க.. (என்னிடம் திரும்பி) தம்பி இந்த பெட்டிய ஒரு நிமிஷம் பாத்துக்கங்க.. என்று சொல்லி எழுந்து போய், அந்தப் பையனைக் கூப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அருகில் அமர்ந்தார்..

"இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க.."

"ஆமா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தான் படிச்சேன்"

"அப்ப இந்த ஊரா...??"

"இல்லை.. இலங்கை.. ஆனா இங்கலாந்தில் தஞ்சம் புகுந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது..அங்க நிறைய பேர் தமிழ் பேசுறவங்க இருக்காங்க.."

"ஜெர்மனியில் கூட நிறைய இலங்கை மக்கள் இருக்காங்க.. அமெரிக்காவில் கூட அனேகம் பேர் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.. ஒரு வருஷம் வேறொரு நாடு போய் சமாளிக்கறதே பெரும்பாடாக இருக்கு.. எப்படி ஒரு நாட்டுல போய் வியாபாரம் பண்ணி, அங்கேயே நிரந்தரமாகி விடறது கஷ்டம் தானே.. ஆனால் இலங்கை மக்கள் எங்கு சென்றாலும் சூழ்நிலைக்கேற்றவாறு மாறி விடுகிறீர்கள்.."

"ஆமாம்..எங்களால் எங்கும் வாழ முடிகிறது.. இலங்கையைத் தவிர..."


சட்டென்று ஒரு நிமிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன்..

உள்ளிருந்து வந்த வார்த்தைகள்..புரையோடிப் போன ஆறா ரணங்களின் வார்த்தை வடிவம்..

இந்த வார்த்தையைச் சொல்லும்போது ஒரு புன்சிரிப்பு.. ஆனால் கண்ணில் கலக்கம் தெரிந்தது.. ஆயிரம் ஆயிரம் சோகக் கதையை ஒரு நொடியில் பரிமாறியது..

"வெளிநாடு போய் கஷ்டப் பட்டாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க திரும்பி உங்க ஊர் போகலாம்.. சொந்தம்னு சொல்லிக்க அங்க கொஞ்சம் பேர் இருப்பார்கள் தானே..?? அந்த நிம்மதி உங்களுக்கு எப்போதும் இருக்கும் தானே..??"

மேலும் மேலும் அவர் கேட்கின்ற கேள்விக்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..

"எங்க போய் உழைச்சாலும் தாய் நாட்டை மறந்திடாதீங்க.. துன்பம் வரும்போதும், ஆபத்துக் காலத்திலும் கை கொடுங்க..."

சொல்லி விட்டு அவரது விமான அறிவிப்பு வந்தவுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.. அவர் மட்டுமே நகர்ந்து சென்றார்.. அவரது வார்த்தைகள் மண்டையைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன..




















பல கேள்விகள் உள்ளிருந்து..

தமிழ் தெரிந்திருந்தும், முதலில் என்னிடத்தில் தமிழில் பேசாதது ஏன்..?? கடைசியாக அவர் சொன்ன தாய்நாடு நம்முடையதா..?? இல்லை அவருடைய தாய் நாட்டைச் சொன்னாரா..?? துன்ப காலத்தில் நாம் கை கொடுக்கவில்லை என்ற கசப்பு தான் அவரைத் தமிழ் பேச விடாமல் தடுத்ததா...?? தமிழ் பேசும் மக்கள் வாழும்பகுதியும் நமது தாய்நாடு என்ற ஒருங்கிணைந்த நோக்கோடு அவர் அதைச் சொன்னாரா..?? நாம் தான் பிரித்துப் பார்க்கிறோமா...??? வேரோடு ஒரு இனம் அழிக்கப் படும்போதும் கூட வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த அந்தக் கையாலாகத தனத்தை தான் அவர் சொன்னாரா..??

இப்ப எங்க இருந்தாலும், எப்பவாவது திரும்பி இந்தியா வந்து விடலாம் என்ற நம்பிக்கை, அங்கே நம் சொந்தங்கள் நம்மை வரவேற்க காத்திருப்பார்கள் என்ற மன நிம்மதி, வீடு நிலம், கார் இன்னும் பிற உள்ளன என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு நமக்கு இருக்கவே செய்கிறது..

அதனால் தான் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்ட ஒரு இனத்தின் வலி..?? அதை நம்மால் உணர முடியாமலே போய் விட்டதோ...?

தற்போது தேர்தல் அறிக்கையில், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரத்துக்காக தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று இடம் பெற்றிருப்பதைப் பார்த்ததும் மறுபடியும், தமிழனின் இன மான உணர்ச்சியை வெறும் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்தும் அரசியல் இழிநிலையை எண்ணி மனம் கொதிக்கிறது....

நாளை தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு இதே கதி நேர்ந்தாலும் நேர்ந்தாலும், மற்ற பகுதித் தமிழர்கள் இப்படி தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போமோ...? ஏனென்றால், மறத்தமிழனின் சூடு, சொரணை என்ற எதுவுமே தற்போதைய தமிழனிடம் இல்லை..

தற்போதைய நமது வாழ்க்கை முறை என்ன..?? தனக்காக சுயநலமாக உழைத்தல், குடும்பத்துக்காக சொத்து சேர்த்தல், டிவி சீரியல்களில் லயித்தல், கேளிக்கைகளில் காலம் தள்ளுதல், இடையிடையே, பண்டைய தமிழ் மூதாதையர்களின் பெருமைகளை மார்தட்டிப் பேசித் திரிதல், அரசியல் ஒரு சாக்கடை என்று தூர நின்று முகம் காட்டாமல் திட்டுதல், கடைசியில் ஏதோ வாழ்ந்தோம் மறைந்தோம் என்று போய்ச் சேருதல்(இதைச் செய்வதே பலரின் வாழ்நாள் சாதனையாக இருக்கிறது)..

ஒருவேளை இயற்கைப் பேரழிவு ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலாவது நமது இனம் ஒன்று கூடுமோ..??

நன்றி..
சாமக்கோடங்கி

Saturday, March 19, 2011

கொதி நிலை - பாகம் 4

கடந்த பாகங்களில் மற்ற நாடுகள் பற்றியும், நம் நாட்டின் அவல நிலை பற்றியும் பார்த்தோம். நமது நாடு எப்படி கொஞ்சம் கொஞ்சமாக செல்லரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மேலும் பார்ப்போம்.

எந்த ஒரு அரசாங்கமும் தங்கள் நாட்டின் மீதும், குடிமக்களின் மீதும் முழுக்கட்டுப் பாட்டைக் கொண்டிருக்காதவரையில் அந்த நாட்டின் வளர்ச்சி கேள்விக்குரியதே..

பத்து பதினைந்து வருடத்திற்கு முன்னமே நமது நாட்டின் ஜனத்தொகை இவ்வளவு கோடியை எட்டும் என்று அன்றைய ஆளும் வர்க்கத்தினருக்குத் தெரிந்திருக்காதா..?? இவ்வளவு மக்கள் பெருகினால், அவர்களுக்கு மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவை அதிகரிக்கும், அதை முன்வைத்து தொலை நோக்குத் திட்டங்களைத் தீட்டா விட்டால், பற்றாக் குறை ஏற்படும் என்று தெரியாதா..? தீட்டினார்கள்.. நாட்டுக்கு அல்ல, அவரவர்களுக்கு.. இன்று பல அம்பானிகளும், டாட்டாக்களும், மாறன்களும், மிட்டல்களும் மிகப் பெரும் 'தனி நபர்' கோடீஸ்வரர்களாகவும், அதன் மூலம் கிடைக்கும் லஞ்சப் பணத்தில் தாங்கள் குளிர் காயவும் திட்டம் தீட்டினார்கள்.. புள்ளி விவரங்களைத் தூக்கிக் குப்பையில் போட்டு விட்டனர்.. எதிர்காலம் கேள்விக் குறி.. இதுல என்னடான்னா, இந்தியாவில் தான் எதிர்காலம் இருக்கிறது என்று தம்பட்டம் வேறு.. வெளங்கிடும்...

இதோ இன்றைய நிலைமை.. எங்கு பார்த்தாலும் பரவலாக குறைந்து மூன்று மணி நேரம் "அறிவிக்கப் பட்ட" மின்வெட்டு, கிராமப் புறங்களில் இந்த மின்வெட்டு ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அதனால் இப்ப என்ன குடியா முழுகிப் போய்விட்டது..?? ஆம் என்று நாம் சொன்னாலும் குளிர்விக்கப் பட்ட பளிங்கு பங்களாக்களில் வசிக்கும் நமது தலைவர்களுக்கு அது தெரியப் போவது இல்லை.

யாராவது ஒரு தலைவர், 2020ல் நமது நாட்டுக்கு இவ்வளவு தேவை, நாம் இவ்வளவு பின் தங்கி இருக்கிறோம், இதனை நோக்கி நாம் உழைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களா..??(கலாம் அவர்களை தவிர்த்து..)

இங்கே ஜெர்மனியில் பாருங்கள்..

ஃபுகுஷிமாவில் ஏற்பட்டிருக்கும் அணு உலை விபத்தை அடுத்து தங்களின் அணு உலைகளை உடனடியாக, அவசரமாகப் பரிசீலனை செய்துள்ளது. மறுமலர்ச்சி செய்யப் பட இருந்த கொஞ்சம் பழைய அணு உலையை மூட ஆணைகள் உடனடியாகப் பிறப்பிக்கப் பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்களின் அணு உலைகளை ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எனப்படும் பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகி விட்டன. அணு உலைகளைத் தவிர்த்து எதிர்காலத்தில் கிரீன் எனேர்ஜி எனப்படும் சுற்றுப் புறச் சூழலை மாசு படுத்தாத ஆற்றல் உற்பத்தியை பெருக்க முனைப்போடு செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது..


நமது நாட்டில்..?? புதிதாக மட்டுமே பல இடங்களில் கிட்டத்தட்ட 30000 MW மின் உற்பத்தி அணு மின் உலைகள் கட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.. அணு உலைகள் என்றாலே ஆபத்து என்று சொல்லவில்லை.. ஆனால் தற்போது கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் அணு உலைகளால், நமது நாட்டின் பாதி மின்தேவையைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது என்கிற பட்சத்தில், இவ்வளவு கோடிகளைக் கொட்டி அணு உலைகளே தான் வேண்டும் என்று அரசு ஒற்றைக் காலில் நிற்பதில் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போய்ச் சேரும் வருமானம் மற்றும் அதில் இந்தியாவில் இருக்கும் அரசியல் தரகர்களுக்குக் கிடைக்கும் "லம்ப் அமௌன்ட்" இதையெல்லாம் நாமே சராசரியாக ஊகித்து விடலாம். ஆம் நண்பர்களே.. வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்யும் ஒருத்தர் கூட அரசியல் பெருச்சாளிகளைத் திருப்திப் படுத்தாமல், 'ஒரு பிடி மண்ணைக் கூட தாய் நாட்டில் இருந்து கொண்டு போக முடியாது'.

எனது நெருங்கிய நண்பர் கூறுகிறார், அவரது கிராமத்தில் தினமும் அதிக மின்வெட்டு இருந்த வேளையில் கூட மின் திருட்டு வெளிப்படையாகவே நடந்ததாம். நமது ஏ வா வேலு (திமுக)வுக்குச் சொந்தமான ஒரு ஆலையில் தான் இந்த மின்திருட்டு நடந்ததாம். எனது நண்பர் இதனைத் தெரிந்து கொண்டு, சில ஊர் இளைஞர்களுடன் காவல் நிலையத்தில் தகுந்த சாட்சியத்தோடு புகார் அளித்ததோடு அல்லாமல், கூடவே சென்று ஆலைக்கு சீல் வைத்து விட்டுத் திரும்பி இருக்கின்றனர்.அப்புறம் என்ன நடந்தது..? தெரிந்த கதை தானே..?? இரண்டே நாளில் பூட்டப் பட்ட கதவுகள் திறக்கப் பட்டு, மறுபடியும் அதே வேலை பழைய வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவசர அவசரமாக நாட்டின்(?!?!) நிலை கருதி, இந்த பூட்டு திறக்கும் ஆணையைப் பிறப்பித்தவர், மாண்புமிகு மின்வெட்டு வீராசாமி என்று சொல்கிறார் நண்பர். நாடே சுடுகாடாய் மாறினாலும் இவர்களுக்குக் கவலை இல்லை.. எவனாவது "இந்தியா ஒளிர்கிறது"ன்னு சொன்னா, மக்கா வாயிலேயே அடிக்கத் தோணுது.. எங்க ஒளிர உடுராணுக... இருக்கறதே ஒரே குண்டு பல்பு.. அதோட டங்ஸ்டனில் எட்டுகாலி கூடு கட்டுகிறது... அவ்வளவு நம்பிக்கை நமது மின்வாரியத்தின் மீது..!!!!

கடந்த இருபது வருடங்களில் மின்சார உற்பத்தி எவ்வளவு பெருக்கப் பட்டிருக்கிறது என்று பார்த்தால் புரியும்.. நமது பாராளுமன்றத்தில் வழுக்குமண்டைகள் உக்காந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று..

இந்தியாவின் தற்பொழுதைய மின்தேவைக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை அணு உலைகள் அல்ல. தெரியுமா உங்களுக்கு..? நாட்டில் தயாரிக்கப் படும் மின்சாரத்தில் 35%ற்கும் மேலான மின்சாரம் தொலைக் கம்பிகளின் மூலம் இழக்கப் படுகிறது. அதாவது மின்சார உற்பத்தி செய்யப் படும் இடம் ஒரு எல்லையில், பயனாளி மற்றொரு எல்லையில். இதனைக் கடத்தப் பயன்படும் கம்பிகளின் கசிவுகளினால் ஏற்படும் மின்னிழப்பு, மற்றும் ஸ்டெப்-அப், மற்றும் ஸ்டெப் டவுன் எனப்படும் மின்னழுத்த மாற்ற முறைகளின் போது ஏற்படும் மின்னிழப்பு இவை எல்லாம் சேர்த்தால், அது நாம் தயாரிக்கும் மின்சாரத்தில் பாதியைக் குடித்து விடுகிறது. யாருக்கும் பயன்படாமல் காற்றில் கலக்கப் பட்டு விடுகிறது நண்பர்களே..

இதற்குத் தீர்வு Decentralisation எனப்படும் மையப் படுத்தப் படாத மின் தயாரிப்பு முறைகள். அதாவது ஒரு பகுதிக்குத் தேவையான மின்சாரத்தை அந்தப் பகுதியிலேயே தயாரிப்பது. இது சாத்தியமே.. நான் சோலார் துறையில் இருப்பதால் இதை என்னால் புள்ளி விவரங்களுடன் சொல்ல இயலும். என்ன கெரகமோ அந்தத் துறையிலும் நமது அரசியல் ஊதாரிகள் கைவைக்க ஆரம்பித்தாயிற்று.

சரி நண்பர்களே நமது நாட்டில் இந்தத் துறைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

நமது நாட்டின் பிரச்சினைகளை முதலில் விளக்கிப் பிறகு ஒவ்வொன்றாக எப்படிச் சரி செய்யலாம் என்று எழுதலாம் என்று நினைத்தால், பிரச்சினைகளே இன்னும் நிறைய பதிவுகள் போகும் போல..

பின்குறிப்பு: இந்தியாவில் 2020ற்குள் 20000MW மின்னுற்பத்தி செய்ய திட்டங்கள் தீட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் சொல்கையில், ஜெர்மன் நண்பர்கள் சொன்ன பதில், இங்கே உள்ள பல நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனம் மட்டுமே கடந்த ஒரே வருடத்தில் 7 GW மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்களைக் கட்டிக் கொடுத்து உள்ளனர். ஒரே வருடம் நண்பர்களே.. மறுபடியும் சொல்கிறேன் ஜெர்மனி தமிழ்நாட்டைப் போல இரண்டரை மடங்கு தான். எல்லாம் ஆட்சித் திறன் தான் காரணம்.. ஆட்சித் திறனா..?? அப்டீன்னா..??

சாமக்கோடங்கி

Thursday, March 10, 2011

கொதி நிலை - பாகம் 3

தினகரனில் வெளிவந்த செய்தி:
-----------------------------

இது எனக்கு தமிழமுதம் குழுமத்தில் வந்தது.. கொதிக்கும் கலனில் இதையும் போடலாம்.. இதற்கு என்னுடைய பதிலும் பின்பகுதியில் உள்ளது..


வெளிநாட்டு மோகம் போயே போச்சு...நாடு திரும்பும் இந்தியர்கள்
------------------------------------------------------------
http://www.dinakaran.com/specialdetail.aspx?id=30760&id1=22

அதென்ன இந்திய அமெரிக்கர், அமெரிக்க இந்தியர்? இரண்டு வகை இந்தியர்கள் உள்ளனர் அங்கே. ஒன்று, அமெரிக்காவில் பல தலைமுறையாகவே வாழ்ந்து வருவோரின் வாரிசுகள்; அவர்கள் முகத்தில், தோற்றத்தில் வேண்டுமானால் இந்திய களை கட்டும்; ஆனால், அவர்கள் முழுக்க முழுக்க அமெரிக்கர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பே செட்டில் ஆனவர்கள். சில ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்கள் இந்திய அமெரிக்கர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த இரண்டாமவரே இப்போது 25 லட்சம் பேர் வரை உள்ளனர்.

இதுபோல பிரிட்டனிலும் பல தலைமுறைகளுக்கு முன் சென்று செட்டில் ஆனவர்கள் பிரிட்டிஷ் இண்டியன்; சமீப ஆண்டுகளில் போய் செட்டில் ஆனவர்கள் இண்டியன் பிரிட்டிஷ். இவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும் என்று தகவல் சொல்கிறது.

இந்தியாவுக்கு போயிடலாம்!

சமீபகாலமாக வெளிநாட்டு மக்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு சுற்றுலா வருகின்றனர். வரலாற்று, கலாசார, பாரம்பரிய இடங்கள், கோவா போன்ற பீச்
பகுதிகள், மகாபலிபுரம் போன்ற மகத்தான இடங்களைப் பார்க்கிறவர்கள், நமது வாழ்க்கை முறையையும் பார்த்து வியந்து போகின்றனர். காலை எழுந்ததும் காபி, டீ குடிப்பது முதல் இரவு படுப்பது வரை இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், விழாக்கள், சடங்குகள், சமுதாய அமைப்புகள் எல்லாம் வெளிநாட்டவரை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்று விடுகிறது. இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர். இப்போது பல தலைமுறைகளுக்கு முன் போய் செட்டில் ஆன அமெரிக்க இந்தியர், பிரிட்டிஷ் இந்தியர்களுக்கும் அதே நினைப்பு வந்து விட்டது. கடந்த இரண்டாண்டுகளில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வீடு வாங்கிக் குடியேறியவர்களில் இவர்களின் எண்ணிக்கையும் அடங்கும் என்றால் வியப்பில்லை.

வேலைக்கு இங்கே வர்றாங்க!

மாநகராட்சி பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பட்டம் முடித்து, வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று பலரும் அலையும் நிலையில், அமெரிக்க இந்தியர்கள் பலரும் இப்போது தங்கள் பிள்ளைகளுக்கு இந்தியாவில் வேலை கிடைத்தால் போதும்; இங்கே அளவு அதிக சம்பளம் அங்கும் கிடைக்கிறதே என்று நினைக்கின்றனர். இந்தியாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களில் இவர்கள் கணிசமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களூரு தெருக்களில் இவர்களை பார்க்கலாம். இந்தியோ, தமிழோ சரிவர வராவிட்டாலும், பல தலைமுறைக்கு முன் இவர்கள் மூதாதையர் இந்த மொழி பேசியவர்கள்தான். தடுக்கியாவது பேசி பழகி வருகின்றனர்.

அமெரிக்காவில், அமெரிக்கனாக பிறந்த அமெரிக்க இந்தியர் நிலை மட்டுமல்ல... பத்து, இருபது ஆண்டுக்கு முன் போய் செட்டில் ஆன இந்திய குடும்பத்தினருக்கும்கூட இதே நினைப்புதான்! சம்பாதித்தது போதும் என்று அவர்களில் பலரும் சென்னை, பெங்களூரு என்று நகரங்களிலும், மதுரையை தாண்டிய கிராமங்களிலும் வீடு, நிலங்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். இவர்கள் திரும்பி வர காரணம் வேறு; இனியும் தங்கள் பிள்ளைகள் அமெரிக்காவில், பிரிட்டனில் வளர்ந்தால், அவர்களின் பழக்கவழக்கம்தான் வரும்; அப்புறம் சந்ததியே மாறி விடும் என்ற பயம்தான் காரணம்.

ஐயோடா, இங்கேயுமா பர்கர்

கிழக்கு கடற்கரை சாலையில் போய்ப் பார்த்தால் சில அமெரிக்க, பிரிட்டிஷ் முகங்களை பார்க்கலாம். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியர்கள். இங்கே வீடு வாங்கி குடியேறி இருப்பர். இவர்கள் தேடித் தேடி கீரை, காய்கறி என்று வாங்கி சாப்பிடுகின்றனர். பீட்ஸா, பர்கர் பக்கமே போக மாட்டார்கள். ‘‘அங்கேதான் பர்கர், பீட்ஸா என்று பிரிட்ஜ், மைக்ரோ ஓவன் சமாசாரங்களை சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது. இங்கே பார்த்தால் இவற்றை நம்மாட்கள் கொண்டாடுகின்றனர்; ஒரு தமாஷ் தெரியுமா? அமெரிக்கர்கள் கூட, காலையில் கேரட் போன்ற காய்கறிகளைத்தான் பச்சையாக சாப்பிடுகின்றனர்’’ என்கிறார் அவர்களில் ஒருவர்.

ஃபாரின் கனவு தேவைதான்; ஆனால் நாம் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் உறுதி என்று இவர்கள் சொல்லித்தான் நமக்குத் தெரிய வேண்டியிருக்கிறது.
-----------------------

சாமக்கோடங்கியின் பதில்:


//இந்தியா என்றாலே முகத்தை சுளித்தவர்கள், இப்போது மலைத்துப்போய் நிற்கின்றனர். செயற்கையான மேற்கத்திய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை அவர்கள் உணர்கின்றனர்.//

சத்தியமாக செம காமெடியாக இருக்கிறது..

மலைத்துப் போகும் அளவுக்கு இங்கே ஒன்றும் இல்லை..எழுதியவர் நல்லா பூ சுத்தி இருக்கிறார்.. இந்தியா முன்னேற வேண்டும் என்றால் இந்த சுய தம்பட்டம் அடிப்பதை முதலில் நிறுத்தி விட்டு இந்தியா உண்மையாக ஒரு உன்னத நிலையை எட்ட சிறு உழைப்பையாவது செலுத்த வேண்டும்..

மலைத்துப் போக ஒன்று இருக்கிறது.. சமீபத்தில் நடந்த பலகோடிகோடி ஊழல்.. உலகமே திரும்பிப் பார்க்கும் ஊழல்.

மேற்கத்திய வாழ்க்கை செயற்கையான வாழ்க்கை என்று யார் சொன்னது..? ஒரு கலாச்சாரத்தில் பிறந்து வளரும் யாரும் செயற்கையாக வளர வாய்ப்பில்லை.. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவுபவன் தான், அங்கே இருக்கும் விஷயங்களைப் படிக்க முடியாமல் செயற்கைத் தனமாக வாழ நேரிடும். வெளிநாட்டுக் காரன் ஸ்பூனில் சாப்பிடுவதைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று நீங்கள் சொன்னால், அவன் கையில் உணவருந்த கஷ்டப் படுவதைப் பார்த்து நான் என்ன சொல்வது..? கையில் உணவருந்தும் நம்மைப் பார்த்து இது செயற்கை வாழ்க்கை என்று அவன் சொன்னால் ஒத்துக் கொள்வீரா..?? அவரவரது சுற்றுப் புற சூழ்நிலையைப் பொறுத்தே அவனது வாழ்க்கை முறை அமையும். இதில் செயற்கை எங்கே வந்தது..

மேற்கத்திய பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் எதிர்கால சந்ததிக்குப் பாதுகாப்பானதாக இல்லையா..?? சுத்த பேத்தல்..

இந்தியாவில் தான் இப்போது பாதுகாப்பு குறைந்து வருகிறது.. நாட்டைப் பற்றியும், நாட்டு மக்களைப் பற்றியும், கவலைப் படாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கொள்ளைக் கூட்டங்கள், கோடிகளுக்காக எதனையும் விற்கும் அரசியலாளர்கள், அதிகார வர்க்கங்கள், மாபியா கும்பல்கள் இவர்களை நம்பி நாம் எப்படி பாதுகாப்பாக இருப்பது..?? எவனோ தூக்கிப் போடும் எலும்புத் துண்டுகளுக்காக நமது ராணுவ ரகசியங்கள்(?!?!?!) வெளியில் விற்கப் பட்டிருக்காது என்று என்ன நிச்சயம்..?? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. நாம் உபயோகிக்கும் ராணுவ உபகரணங்கள் பாதுகாப்பானவை தானா அல்லது அதனை வாங்குவதிலும் ஊழல் நடந்து தரக்குறைவான பழைய ஆயுதங்களைத் தான் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.. எப்படி பாதுகாப்பு உள்ளது என்று தெரியவில்லை..

ஜெர்மனி வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக பனியிலேயே அலைகிறேன்..கூட இருக்கும் நண்பர் ஆறு வருடங்களாய் இருக்கிறார்.. சளி காய்ச்சல் என்று ஒன்றும் அவருக்கு வரவில்லை.. எங்கும் சுத்தமான காற்று, சாலை விதிகளை மதிக்கும் மக்கள், சுத்தம் சுகாதாரத்தை தினம் பேணும் அரசு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் தனது கைக்குள் வைத்துக் கண்காணிக்கும் அதிகாரிகள், எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்களை வளர்க்கும் கல்விக் கூடங்கள்.. இவ்வளவு ஏன் ...நீங்கள் கடையில் வாங்கும் ஒவ்வொரு சிறு பொருளிலும் கூட அரசின் தரக்கட்டுப்பாடு சரிபார்க்கப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது.. நமது நாட்டில் அரசின் ரேசன் கடைகளில் தான் தரக்குறைவே.. பிறகு அரசு எந்த லட்சணத்தில் இருக்கும் என்று சொல்ல வேண்டுமா..??

வீடு காட்டும்போதே, அதனுடைய வரைபடமானது அந்தப் பகுதி அரசு அலுவலகத்திற்குக் கொடுக்கப் படுவது மட்டுமல்லாமல், தீயனைப்ப்பு மற்றும் காவல் துறைக்கும் அது பதிவு செய்யப் படுகிறது, மற்றும் உங்கள் வீடானது எப்போதும் அவர்களின் தொடர்பிலேயே இருக்கிறது. அவசர விபத்து அது இது என்று ஏதாவது நேர்ந்து விட்டால், உடனுக்குடன் வந்து காப்பாற்றுகிறார்கள்.. இது நகரம் கிராமம், மூலை முடுக்கில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பொருந்தும்..

நமது நாட்டில் கும்பகோணத்தில் பிஞ்சுக் குழந்தைகள் படித்த ஒரு பள்ளிக் கூடம் எறிந்ததே நியாபகம் இருக்கிறதா..?? அந்த அலை அடித்து உடனே ஓய்ந்து விட்டது.. இன்னும் முழுப் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா..??

வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு ஒரு காரணம் இருக்கலாம்.. இது பணக்காரர்களுக்கான சொர்க்க பூமியாக மாறுகிறது..

எத்தனை லட்சங்களானாலும், அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல், சமாளிக்கலாம். மாட்டிக் கொண்டால், எவனையும் பணத்தைக் கொண்டே அடித்து வீழ்த்தலாம். இன்றே முதலீடு செய்து நாளை லாபம் சம்பாரிக்கும் எந்தத் தொழிலையும், தாராளமாகச் செய்யலாம். அமேரிக்கா மாறி நாட்டுலையே இருந்தா வரி கட்டியே சாகணும்.. சொத்து முழுக்க அழிஞ்சிடும்.,. காப்பாத்தனுமே..

நீங்கள் சொல்லும் அந்த வெளிநாட்டில் இருந்து திரும்பும் மக்களில் மிகக் குறைவான பேர்களே கிராமங்களை நோக்கிச் செல்கின்றனர்..(உறவுக்காரர்கள யாராவது இருக்கலாம் ).. மீதி எல்லாம், ஈசிஆர், கோவா, ஊட்டி போன்ற இடங்களில் ஈஸ்டேட்டுகளுடன் செட்டில் ஆகி விடுகின்றனர்..

மறுபடியும் சொல்கிறேன்.. இந்தியா பணக்காரர்களுக்கான நாடாக என்றோ மாறி விட்டது. ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி, எங்கே அவர்கள் வளர்ந்து படிப்பறிவு முழுமையாகப் பெற்று விட்டால், ஒட்டு வங்கிக்குப் பாதகம் வந்து விடுமோ என்ற உன்னத நோக்கோடு, 'நிம்மதியான' பாதுகாப்பான வாழ்க்கையை ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் எட்டாக் கனியாகவே வைத்திருக்கும் அரசியில்வாதிகள் இருக்கும்வரை இந்தியா முகம் சுளித்துப் பார்க்கக் கூடிய நாடாகவே இருக்கும்.நேற்று ஆயிரம் ரூபாய் சம்பாரிப்பவன் இன்று பத்தாயிரம் ரூபாய் சம்பாரிக்கிரார்ன். ஆனால் அன்று ஐநூறு ரூபாய்க்கு மாத பட்ஜெட் போட்டு விடலாம், இன்று ஏழாயிரம் தேவைப் படுகிறது.. ஆக அவன் முன்னேற வில்லை, இன்னும் அந்த கோட்டைத் தாண்டாமலேயே நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கிறான் என்பது விளங்குகிறது.

போலியான மெடிக்கல் பில்லை கூட காட்டி வரிசெமிப்பு செய்து ஏமாற்ற மாட்டேன் என்று உண்மையான வரியைச் செலுத்தி நான் இந்தியன் சொல்லிக் கொண்டு திரியும் என்னைப் போன்றவர்கள் தினம் தினம் நாமம் போடப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று இந்த நாட்டுக்கே தெரியும்.

புகழ் பேசுவதை தயவு செய்து நிறுத்துங்கள். பழம்பெருமை பேசாதீர்கள். அது முதுகெலும்பு இருந்த நம் முன்னோர்களால் உருவாக்கப் பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பும், வாழ்வாதாரமும் ஏழை எளியவர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு, சத்தியமாக இல்லை. பசி பட்டினியோடும், தீராக் கடன்களோடும், சுற்றும் நமது நாட்டின் பெரும்பான்மைப் பகுதி அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்தியாவின் செயற்கையான பகுதியைப் பார்த்து இயற்கை என்று ஏமாந்து இருக்கிறார்கள்...

--
நன்றி:சாந்தி,செல்வன் மற்றும் தமிழமுதம் குழுமம்.
--
நன்றி
சாமக்கோடங்கி.

Saturday, March 5, 2011

கொதி நிலை - பாகம் 2

வணக்கம் நண்பர்களே..

மாற்றப் பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன, அவற்றில் எவை எவை எல்லாம் நாம் நினைத்தால் முடியும் என்பதை பிற்பகுதிகளில் பார்க்கலாம். இப்போதைக்கு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுகிறேன். ஏனெனில், கொதிநிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

நண்பர்களிடம் நடந்த உரையாடல்கள் / சேகரித்த செய்திகள்:

"ஆப்பிரிக்கா தான் ஊழலில் திளைக்கும் நாடு, கை நிறைய காசு கொடுத்தால், நாட்டையே காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள், கூறு போட்டு விற்று விடுவார்கள். இந்தியர்கள் சாதாரணமாக ஒரு வாரம் செய்யும் வேலையை அவர்கள் மாதக் கணக்கில் இழுத்தடிப்பார்கள்"

"நாமே(இந்தியர்களே ), ஆப்பிரிக்காவைப் பற்றி இவ்வளவு மோசமாக என்னும்போது, ஜப்பான், சீனா, பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைப் பற்றி எவ்வளவு கேவலப் பார்வை கொண்டிருக்கும்.."

----

"சீனா வில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம் அமைக்கப் பட்டதே, அதற்கு டன் கணக்கில் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது இந்தியாவில் இருந்து தான்..."

"நல்லது தானே, ஏற்றுமதி மூலம் நல்ல அன்னியச் செலாவணி கிடைக்குமே.. இந்தியக் கருவூலத்தில் கொஞ்சம் பணம் நிறையுமே.."

"மண்ணாங்கட்டி, நாட்டின் தேவையை கணக்கில் கொள்ளாமல், ஏற்றுமதிக்கான அளவை மீறி சீனாவுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்தது தான் உள்நாட்டில் ஸ்டீல் விலை ஏறக் காரணம். ஆனால் சீன அரசோ, இந்திய அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு கள கச்சிதமாக இந்தக் காரியத்தைச் செய்து முடித்திருக்கிறது. சுரண்டப் பட்டது இந்தியாவின் வளம். நிறைந்ததோ, அரசியல்வாதிகளின் கருவூலம். சோனியாவும், மன்மோகன்சிங்கும், நாட்டை கூறு போட்டு விற்றாயிற்று"

"ஆனால் சீனா ஏன் இப்படி செய்யணும்..? அவர்களிடத்தில் தான் கனிம வளங்கள் இருக்கின்றனவே.."?

"அங்கே தான் நிற்கிறது சீன அரசின் ராசதந்திரமும், நாட்டுப் பற்றும். தங்களிடத்தில் இருக்கும் வளங்கள் ரிசர்வ் எனப்படும் வருங்காலத்தின் சேமிப்புக்கானவை.அதுவுமில்லாமல், மற்றொரு நாட்டில் இருந்து கிடைக்கும் வளங்கள் நாட்டுக்கான இன்னொரு சேமிப்பு, சுரண்டப் பட்ட நாட்டுக்கு இது ஒரு பின்னடைவு. அந்த வளங்களைப் பெற நாம் இப்போது எங்கே போவது..?அமெரிக்காவிலிருந்து ஆயிரம் கம்ப்யூட்டர்களை இந்தியாவுக்கு லக்கேஜ் பேக்கில் கொண்டு வர அனுமதி வழங்கியதைப் போல இனித்திருக்கும் சீனாவிற்கு. நம்ம அரசியல்வாதிகளுக்கு தான் நாடு எப்படிப் போனாலும் கவலை இல்லையே.. சீனா இந்தியாவவை ஆக்கிரமிக்க போர் தொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, இது தான் ராசதந்திரத்தின் அடுத்தடுத்த படிகள்.. தெளிவாக இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்"

-----

"மன்மோகன்சிங் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்..?"

"குடும்ப அரசியலுக்கு கூடி உழைக்கிறார்.. அரும்பாடு படுகிறார்.. நேரு காலத்தில் இருந்தே நடந்திருக்கிறது தவறு. நமது பள்ளிப் புத்தகங்களில் மூடி மறைக்கப் பட்டு, நெஞ்சில் ரோஜாப்பூவோடு சித்தரித்து விட்டார்கள். வல்லபாய்படேல் வளர்ந்திருந்தால், நாடு ஓரளவுக்கு உருப்பட்டிருக்கும். தொழில்மயமாக்கலை(Industrialisation) கையில் எடுத்திருந்தால், அமேரிக்கா போல நாமும் விமானத்தில் பறந்து கொண்டே நெல் விதைத்து இருந்திருக்கலாம். அதை விடுத்து விவசாயத்தை மேம்படுத்துகிறேன் என்று வந்த வாய்ப்பைக் கோட்டை விட்டார் நேரு. இன்னும் ஏழை விவசாயிகள் எங்கோ ஒருபுறம் பட்டினியில் செத்துக் கொண்டு தான் இருக்கிறான்..படேலின் வளர்ச்சியைத் தடுத்ததும் இவரே என்றும் ஒரு செய்தி உண்டு. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை(சீன எல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) இழக்கக் காரணமும் இவரது வலிமையில்லாத அரசே.
படேல் இருந்திருந்தால் சூட் அட் சைட் போட்டு, விஷயத்தை என்றைக்கோ முடித்திருப்பார், இப்போது நாட்டின் எழுபது சத நிதியை ராணுவத்துக்குச் செலவிட்டிருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது.

அடுத்து இந்திரா காந்தி.. எமெர்ஜென்சியைப் புகழ்ந்து பேசும் நபர்கள் இன்னும் உண்டு. அனால் அதன் பின்புலம் பலருக்கும் தெரியவில்லை. போய் இந்திய வரலாற்றைத் தெளிவாகப் புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். ஊழலில் அடுத்த ட்ரெண்ட் இவர் காலத்தில் தான் உருவாகி இருக்கிறது என்று நன்றாகப் புரியும். ஆட்சிக் கட்டிலில் நீடிக்க அவர் செய்த அட்டூழியங்களும் அம்பலமாகும். வரலாறு என்றால் நமது பள்ளி வரலாற்று புத்தகங்களை அல்ல நண்பா..

அடுத்து சோனியா காந்தி.. மாபியாக் கும்பல்களை வளர விட்டு, அதிகப் படியான அரசுப் பணம் தனியார் கைகளுக்கும், அரசியல்வாதிகள் கஜானாக்களுக்கும் சேர பெரும்பாடு படுபவர். நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப் படாமல், ஊழலை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பவர். பொதுமக்கள் வாழ்வாதாரங்களைக் கெடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற விட்டு, அம்பானி போன்ற பணக்காரர்களைக் கொழுக்கச் செய்து, விலை நிர்ணயத்தையும் அவர்கள் கைக்கே தூக்கிக் கொடுத்து இருப்பவர்."

"பெட்ரோல் விலையையா சொல்றீங்க..?"

"ஆமாம்ப்பா, அரசு நினைத்தால் வரிகளைக் குறைத்து முப்பது ரூபாய்க்குக் குறைவாக பெட்ரோல் விற்பனை செய்ய முடியும். ஆனால் அதனால் பல தனியாருக்கு நஷ்டம். அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் பங்கும் போய் விடும். அவர்களுக்கென்ன, அரசு பணத்தில், அரசு காரில், அரசு பெட்ரோலில் சுற்றுபவர்கள். நம் பாடு தான் திண்டாட்டம்.."

இன்னும் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன. நம் மக்களிடமும் தவறுகள் மண்டிக் கிடக்கின்றன.

சரி நண்பர்களே,.. பதிவு நீளமாகி விட்டதால் பாகம் மூன்றில் அந்நிய முதலீடுகள் பற்றியும், மற்றும் முறைகேடுகள், தமிழ்நாட்டின் அவலங்களைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆனால் ஒன்று எழுதும்போதே எனக்கு இருதயத்துடிப்பு உச்சத்திற்குப் போவதையும், கண்கள் சிவப்பாவதையும் உணர முடிகிறது. பாகம் மூன்றில், கொதிநிலையின் அடுத்த பகுதிக்குச் சென்று நன்றாகக் கொதிக்கலாம்.

உங்கள் பங்குக்கு நீங்களும் கொதிக்க விடுங்கள் பின்னூட்டங்களில். வரலாறு என்றுமே சரியாகப் பதியப் படுவது இல்லை. ஒருவேளை மேற்கூறிய விஷயங்களில் தவறு இருந்தாலும் திருத்துங்கள். எல்லாம் செவி வழிக் கேட்டவையே.."

நன்றி
சாமக்கோடங்கி

Friday, February 25, 2011

கொதி நிலை - பாகம் 1

நண்பர்களே..

இந்தப் பதிவு குறைந்தது பத்து பாகங்களாவது போகும். பொறுமை உள்ளவர்கள் வரலாம்.

மனதில் கருத்துக்கள் சிதறல்களாகவே தோன்றுகின்றன. மறப்பதற்கு முன் எழுதுவதே உத்தமம். சரியாகக் கோர்த்துப் படித்துக் கொள்ளவும்.

நான் இப்போது இருப்பது ஜெர்மனியில். பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் தான் முதலில் வேடிக்கை பார்த்தேன். இப்போது கொஞ்சம் பண்பட்ட பார்வை. நான் எழுதும்போது சிலபேர் வெளியூரைப் பார்த்ததும் நம்மூரைக் குறை சொல்கிறான் என்று நினைத்தாலும் நினைக்கலாம். இது உள்மன ஆதங்கமல்லாமல் வேர்வரை அலசிப் பார்க்கப் போகும் பதிவு.

ஜெர்மனி ஏன் இப்படி உள்ளது?? 1800 களில் நடந்த நாடுபிடி விளையாட்டாகட்டும், அதற்கப்புறம் நடந்த உலகப் போர்களில் நடத்திய களேபரமாகட்டும், அமேரிக்கா போன்ற கொடுங்கோல் வல்லரசுகளுக்கே கெட்ட கனவாகத் திகழ்ந்துள்ள ஒரு குட்டி நாடு ஜெர்மனி. அது எப்படி இவ்வளவு பலத்துடன் திகழ்கிறது?? அதெல்லாம் நமக்கெதற்கு.. சும்மா வந்தோமா, வேலையைப் பார்த்தோமா, ஊரைச் சுற்றிப் புகைப்படம் எடுத்தோமா, பொருள் வாங்கினோமா, ஊர் திரும்பினோமா என்று 'னோமா', 'னோமா' வோடு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை இந்தப் பதிவிடச் செய்தது இரண்டு விஷயங்கள்.

ஒன்று: இந்த ஊர் எப்படி இவ்வளவு சுத்தமாக, நல்ல பராமரிப்புடன் அழகாக உள்ளது என்று எப்போதும் மனதுக்குள் தோன்றும்.காலையில் அவசர கதியில் பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் ஒரு எண்பது வயது முதியவர் பேருந்து நிலையத்தை நோக்கி மெல்ல நடை போட்டுக் கொண்டு இருந்தார். சட்டென்று நின்றவர், கீழே கிடந்த சிறு தாளைக் கையில் எடுத்தார். மெதுவாக நடந்து போய் அருகில் இருந்த குப்பைத் தொட்டிகளில் காகிதம் போடுவதற்கான தொட்டியில் போட்டு விட்டு அதே மெல்ல நடையோடு அங்கிருந்து போய் விட்டார். அதிகம் ஆட்கள் நடமாடும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இரண்டும் ஒன்று சேரும் ஒரு பரபரப்பான பகுதி, பளிங்கு போல் காட்சி தந்ததற்கான அர்த்தம் புரிந்தது.

இரண்டு: "ஷாங்காய் நகரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கியா பிரகாஷ்..? அந்த மாறி ஒரு நகரை இன்னும் பத்து வருஷம் மெனக்கேட்டாலும் இந்தியாவால் உருவாக்க முடியாது. அத்தன அருமையான வடிவமைப்பு". கூட வந்த நண்பரின் கூற்று.

ஏன்?

ஏன்??

ஏன்???

ஜெர்மனியின் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கே. ஆனாலும் ஜெர்மனியின் பொருளாதாரக் கட்டமைப்பை மொத்த இந்தியா சேர்ந்தாலும் தூர நின்று அண்ணாந்து பார்க்க மட்டுமே முடியும். அத்தனை நிறுவனங்கள், அத்தனை முதலீடுகள், அத்தனை கட்டுக்கோப்பு. (ஆனால் மொத்த உலகமும் இப்போது ஒரு விஷயத்துக்காக இந்தியாவைத் திரும்பிப் பார்க்கிறது.. எதற்கு என்று உங்களுக்கே தெரியும். உலகமே ஒரே அலைவரிசையில் தானே..)

எனக்குத் தெரிந்து ஜெர்மனி.. தெரியாமல் இன்னும் எத்தனையோ நாடுகள் இதை விட பலம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றன.

"ஐரோப்பாவில் பல நாடுகள் மற்றும் சீனா போன்றவை தொழிநுட்பத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளன. நமது நாட்டை எளிதில் வீழ்த்தி விட முடியும். நம்மிடம் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நல்ல அரசியலும் கை கோர்த்தால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். உள்சண்டை வெளிநாட்டானுக்குக் கொண்டாட்டம்." இதுவும் நண்பர் கூற்றே. சில்லென்று எங்கோ உறைத்தது.

திருத்தப் பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பலபேர்க்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருப்பதில் பயனுமில்லை.

"Don't be a part of the question. Be a part of the solution" என் அண்ணன் சொன்னது.

நம்ம ஊரில் எல்லோரும் அரசியலைக் குறை சொல்லுவோம்(அதை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.) ஆனால் ஏன் நீங்க அரசியலுக்கு வரலாமே என்று கேட்டால், நம்மில் அரசியலாளர்களைத் திட்டும் பலரும் யோசிப்பார்கள்.

உண்மையில் நாம் அரசியலை தூர நின்று கொண்டு தான் பார்க்கிறோம். அருகில் நண்பர்களிடம் பேசுபவர்கள், தெருவில் கூடிப் புலம்புபவர்கள், மெயில்களில் பதிலனுப்புபவர்கள், ப்ளாக் எழுதி அரசியலாளர்களைக் கலாய்ப்பவர்கள் என அனைவரையும் இதற்குள் அடைத்து விடலாம்..

ஆனால் மாற்றவே முடியாதா..? எதற்கும் தீர அலசலாமே.. எல்லாவற்றிற்கும் பதில் நம்மிடமே உள்ளது.

முதலில் இந்தக் காணொளியைப் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=8nDvbBn_0zM&feature=player_embedded

இபோது பின்வரும் ஒரு சூழ்நிலையை யோசித்துப் பார்த்தேன். முடிந்தால் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.

"மச்சான், நான் போக்குவரத்துத் துறை அமைச்சராகீட்டேன்.. அந்த இத்துப் போன தகர டப்பா வண்டியை எல்லாம் காயலாங்கடைக்குப் போட்டுட்டு, புதுசா பேருந்துகள் வாங்கச் சொல்லி ஒரு மெயில் தட்டினேன். நம்ம சீனியர் தான மத்தியில இருக்கார்.. உடனே ஒப்புதல் அளிச்சு நிதியும் ஒதுக்கீட்டாரு. கல்லூரி மேடைகள்ள பேசும்போது அவரை சும்மான்னு நெனச்சேன்.. சொன்னத செய்யராருப்பா. அவருக்கென்ன, பிரதமரா இருக்கறது அவரோட சீனியரு. அவங்களுக்கும் காலேஜு காலத்துல இருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங்.. அட நம்ம எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மென்ட் ரவி.. அமைச்சரானதுக்கு அப்புறம் அசத்தறாம்பா.. ஒரு மேகாவாட்டுக்கு மேல மின் உபயோகம் பண்றவன் எவனா இருந்தாலும் சோலார் பொருத்தனும்னு ஆடர்.. இல்லைன்னா லைசென்சு கட்டுன்னு போட்டானே ஒரு போடு.. அவனவன் துண்ட காணோம் துணியக் காணோம்னு ஓடிப் பொய் வாங்கி மாட்டீட்டாணுகளே.. இவனுக கிட்ட காசு இல்லாம இல்லப்பா.. எதுக்கு செலவு செய்யணும்னு மதப்பு. வெச்சாம்பாறு ஆப்பு. கரண்டு கட்டு இப்பத்தான் கம்மியாகுது.. விவசாயத்துக்கு இப்ப அதிக மின்சாரம் கெடைக்குதப்பா.. எங்க அப்பா கூட அவன மனசார வாழ்த்தனாரு. ஆமா நீயும் நெறைய கனவுகளோட இருந்தியேடா... இன்னுமா அரசியலுக்கு வரலை..?? சும்மா வாடா... நாங்க இருக்கோம்.. நெனச்ச சாதிக்க வெப்போம்.."

இப்படி ஒரு சூழல் அமைந்தால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா...??

நமது நாட்டின் சரித்திரத் தவறுகளில் இருந்து, உள்கட்டமைப்பு, அரசியல், இளைஞர்கள், கல்வி என்று அனைத்தையும் துல்லியமாக அலசலாம் அடுத்த பகுதியில் இருந்து.

அப்புறம் தலைப்பைப் பற்றி யாருக்கும் விளக்கம் தேவையில்லை என்று நம்புகிறேன்.

இது என்னுடைய பார்வை. பொதுவான கருத்துக்கள். அதனால் காரசாரமான எதிர்விவாதங்களை அன்புடன் ஆவலுடன் வரவேற்கிறேன்.

சாமக்கோடங்கி