Sunday, December 12, 2010

நினைவுகள் - பகிர்வுகள்

வணக்கம் நண்பர்களே..

வாழ்க்கையில் நாம் கடந்து போகும் பல விஷயங்களில் நமக்குப் பிடிக்காதவை பல இருந்தாலும், ஒரு சில நல்ல விஷயங்கள் நம் மனதில் பதிந்து போகும். அது போன்ற சில விஷயங்களை இங்கே என் நினைவுகளாகப் பதிய நினைக்கிறேன். பதிந்தவற்றை உங்களோடு பகிரவும் நினைக்கிறேன்.

நான் பள்ளியில் படித்த காலங்களில் எங்களுக்கு ஏட்டுக்கல்வியைத் தவிர வேறேதும் அளிக்கப் படவில்லை. புத்தகச்சுமை, காலையில் இருந்து மாலை வரை அடுக்கடுக்காக பாடங்கள், இறுகிப் போன முகங்களுடன் வாத்தியார்கள்(பாவம் அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ..),உடற்பயிற்சி வகுப்பில் கூட விளையாட விடாமல் இரவல் வாங்கி பாடம் எடுக்கும் சின்சியர் சிகாமணிகள், சாயங்காலம் வீட்டுக்குப் போனால், விளையாடக் கூட முடியாத அளவுக்கு வீட்டுப் பாடங்கள், இவ்வளவு ஏன், கனவில் கூட அந்தக் குரூர முகங்கள், இது தான் என் பள்ளிக் கால நினைவுகள்.

வீட்டுப் பாடத்தை பாதி எழுதி விட்டு, தூக்கம் வந்தால், அம்மாவை அதிகாலையில் எழுப்புமாறு சொல்லி, அப்புறம் இது வொர்க் அவுட் ஆகாது என்று நடுராத்திரியே சாவி கொடுக்கப் பட்டவன் போல எழுந்திரித்து, அம்மாவையும் எழுப்பி உக்கார வைத்து, அழுகையும் கையுமாக வீட்டுப் பாடம் எழுதி முடித்த நாட்கள் மறக்க முடியாதவை. இவ்வளவு ஏன்.. காலாண்டு அரையாண்டு விடுமுறைகளில் கூட நண்பர்களுடன் கூடி விளையாட முடியாத அளவுக்கு, வினாத்தாளை விடையோடு எழுதிக் கொண்டு வர வேண்டும் என்று பணித்து விடுவர். முதல் ஐந்தாறு நாட்கள் நண்பர்களோடு விளையாடுவோம்.அப்புறம் எழுதிக் கொள்ளலாம் என்று.அப்போதும் கூட, நான்கு நாட்களுக்கு முன் எழுத ஆரம்பித்தால் சரியாக இருக்குமா, முடித்து விட முடியுமா.. கண்விழிக்க நேரிடுமா போன்ற கவலைகள் எங்களை ஆட்கொண்டு இருந்தன.

எதற்குச் சொல்கிறேன் என்றால், இப்படிக்கு இளங்கோ நடத்தும் விழுதுகள் நற்பண்புகள் கல்வி இயக்கத்தில் உள்ள மாணவர்கள் படிப்பைத் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றனர். நான் எப்போது அவர்களைச் சந்திக்கப் போகும் போதும் ஒவ்வொரு மாணவனும் வந்து "சார், அன்பே கடவுள் சார்" என்று சொல்லித் தான் வணக்கம் செய்வார்கள்.ஒவ்வொரு முறை அவர்கள் அதனை உச்ச்சரிக்கும்போதும் அவர்களுக்குள் அன்பு புகுத்தப் படுகிறது(அல்லது உள்ளிருக்கும் அன்பு பலப்படுத்தப் படுகிறது). ஆம்.. இன்றைய உலகுக்குத் தேவை.. அன்பு, அன்பு, அன்பு மட்டுமே.

அந்தக் குழந்தைகளின் பணிவு, பெரியோரிடம் காட்டும் மரியாதை, கலை நிகழ்ச்சிகளில் அவர்கள் காட்டும் ஆர்வம் எனப் பல விஷயங்கள் என்னை வியக்கச் செய்தன. நற்பண்புக் கல்வி என்பது எவ்வளவு தேவையான ஒன்று என்று அதை அனுபவிக்காத என்னைப் போன்றோருக்குத் தான் தெரியும். பள்ளிக் காலத்தை நினைவுக் கூறும்போது, அது பசுமையாகத் தெரிய வேண்டும். சாதனைகள் தெரியவேண்டும். எனக்குப் புத்தகங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.(ஆனாலும் ஆளாக்கி விட்டமைக்காக என்றும் என் மரியாதை மற்றும் நன்றிகள் அவர்களுக்கு உண்டு..)

அந்தக் குழந்தைகளுடன் பழகும்போது, என்னுடைய பள்ளிக் காலத்திற்குச் சென்று நான் அனுபவிக்காததை அனுபவிக்கும் உணர்வைப் பெறுகிறேன். அடிக்கடி செல்ல ஆசை, ஆனால் தொலைவும், நேரமும் தடையாக உள்ளன. சக்கரம் போல சுற்றிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில், அவர்களோடு இனைந்து நடத்தும் இது போன்ற நிகழ்வுகள் தான் என்னுடைய டைரியில் இடம்பிடிக்கும் தருணங்கள்.

இத்துடன் மரங்கள் நட்ட குழந்தைகளின் உற்சாக முகங்களை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் எதிர்காலத்தை இங்கே பாருங்கள்..

(செல்போனில் படம் பிடித்ததால் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கின்றன)












கடைசிப் படத்தில் இளங்கோ மற்றும் கமலக் கண்ணன்.

இந்த நற்பணியைச் செய்யும் கமலக் கண்ணன், இளங்கோ மற்றும் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

என்றென்றும் அன்புடன்,
சாமக்கோடங்கி

Thursday, December 9, 2010

சிம்ம சொப்பனம் - ஜூலியன் அசாங்கே

ரமணா படத்தில் விஜயகாந்த், தப்பு செய்தவர்களை கட்டம் கட்டிக் கொல்லுவார். பார்க்க நன்றாக இருந்தது. தப்பு செய்தவர்களைக் கண்ட போது ரத்தம் கொதித்தது. ரமணா சாகும் காட்சியில் இதயம் கனத்தது. அதுக்கப்புறம்..?

உண்மையாகவே ரமணாவைப் போலவோ, அன்னியனைப் போலவோ, இந்தியனைப் போலவோ ஒருவன் உருவானால் நாம் என்ன செய்வோம்..? யூகிக்கத் தேவை இல்லை. அதுதான் நடந்து கொண்டு இருக்கிறதே...

"ஜூலியன் அசாங்கே"


உலக நாடுகளுக்கே தான் தான் நாட்டாமை என்ற நினைப்பில் இருக்கும் அமெரிக்காவின் குடுமியையே பிடித்து ஆட்டியவர். காற்று கூட புக முடியாத இடங்களில் புகுந்து ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டவர். இவரின் தைரியம், திறமை என்னவென்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆனால் சினிமா நடிகர்களின் வீரத்தையே பார்த்துப் பழகிய நமக்கு, சாதாரண மனிதனை திடீரென ஹீரோவாக உருவகப் படுத்துவது கடினமே..

அலுவலகத்தில் காலை சிற்றுண்டியின் போது நான் நொந்து கொண்டு சொன்னேன்.. "உலகில் கடைசியாக ஒரு தைரியசாலி இருந்தான். அவனையும் கட்டம் கட்டிட்டாணுகடா.." என்றேன்.. யாருடா..? என்றார்கள் நண்பர்கள்.. விக்கி லீக்ஸ் ஜூலியன் தெரியாதாடா உங்களுக்கு என்று கேட்டேன்.. விழித்தார்களே.. என்ன செய்ய... தமிழ் உலகம் அப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது.

உலகின் பல பத்திரிக்கைகளும் ஜூலியனைப் பற்றியும், பத்திரிக்கை சுதந்திரம் பற்றியும், அமெரிக்காவின் அட்டூழியங்கள் பற்றியும் எழுதி வருகின்றன.. நம்ம ஊர்ப் பத்திரிக்கைகள் தான் முழுமையாக அரசியல் வாதிகளின் வசம் இருக்கின்றனவே.. முதல் பக்கத்தில், ஒரு பிரபலமான கல்லூரியின் விளம்பரம், இரண்டாவது பக்கம் நகை விளம்பரம்.. மூன்றாவது பக்கம் ஆளுங்கட்சியின் சாதனைகள், அப்புறம் முக்கியமாக புதிய திரைப் படங்களின் முழு வண்ணப் புகைப் படங்கள், மற்றும் அவை வெளியிடப் படும் திரையரங்குகள், கடைசியாக விளையாட்டு இப்படி முன்னமே தீர்மானிக்கப் பட்ட கட்டங்களுக்கு இடையே, தகவல்கள் இணைக்கப் படுகின்றன நமது பத்திரிக்கைகளில்..

ஒரு விஷயத்தை பூதாகரமாக்கி மக்களை அதற்கு எதிராக திசை திருப்பவும் இவர்களால் முடிகிறது.. முக்கியமான விஷயத்தைப் போடாமல் நீர்த்துப் போக வைக்கும் வித்தைகளும் இங்கே நடக்கின்றன.

ஜூலியனைப் பற்றி அறிந்த ஊடகங்களும் மக்களும் தங்கள் எதிர்ப்புகளை அமெரிக்காவுக்கு எதிராக எழுப்புகின்றனர். ஆனால் இது போதாது.அவர் எதற்காக இதைச் செய்ய வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்.. எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கவே செய்கிறான். அவன் தான் இது போன்ற தேசப் பற்றுப்படங்களை எல்லாம் பார்க்கும் போது நம்மைக் கை தட்டச் செய்கிறான்.

ஜூலியன் நினைத்து இருந்தால், அமெரிக்காவுடன் பேரம் பேசி இருக்க முடியும்.. ஏன் செய்யவில்லை..? நமக்குள் ஒளிந்திருக்கும் நல்லவன் அவருக்குள் ஓடி ஒளிந்திருக்கவில்லை. அவன் சாமானியப் பட்டவன் இல்லை. ஒரு வல்லரசையே கிடு கிடுவென நடுங்க வைத்துத் துவைத்துக் காயப் போடும் அளவு மாவீரன். அது தான் தூக்கி வாரிப் போட்டாற்போல ஓடிப் போய் அமுக்கி விட்டார்கள்.

நம்ம ஊரில் ஒருவன் நல்லது செய்தால் தான் போய் துணை நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உலகின் எந்த ஒரு மூலையில் ஒருவன் நல்லதுக்காகப் போராடினாலும், அவனுக்கு நமது தார்மீக ஆதரவை தர வேண்டும் என்று நினைக்கிறேன். மீடியா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார். அவர் பாதையில் சென்றால் ஒரே வருடத்தில், நமது அரசியல்வாதிகளின் அனைத்து விஷயங்களும் புட்டு புட்டு வைக்கப் படும்..

உமாஷங்கருக்காகக் குரல் எழுப்பிய போது எல்லோரும் துணை நின்றோம். என்னுடைய குரல் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா வராதா என்றெல்லாம் அப்போது யோசிக்க வில்லை. அதேபோல இப்போது ஜூலியனுக்காக குரல் எழுப்புகிறேன். குறைந்தது என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களுக்கவது இவரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன். அது தான் இவருக்கு நாம் கொடுக்கும் கை என்று நான் நினைக்கிறேன்.

ஜூலியன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சுடுதண்ணியின் இந்தத் தொடரைப் படியுங்கள்..

http://suduthanni.blogspot.com/2010/11/1.html

சாமக் கோடங்கி