Thursday, November 25, 2010

எளிது எளிது கடத்தல் எளிது..

வணக்கம் நண்பர்களே..!!!

இன்று வீட்டு வேலை காரணமாக அலுவலகத்திலிருந்து கொஞ்சம் நேரமாக வர வேண்டிய சூழ்நிலை. வண்டியை வீட்டுக்கு விரட்டினேன்.. வீரபாண்டிப் பிரிவைத் தாண்டும் போது நாலரை மணி இருக்கும். சாலையின் இருபுறங்களிலும் பள்ளிக் குழந்தைகள் கூட்டம். எல்லோரும் நகரப் பேருந்துக்காக காத்திருந்தனர். சைக்கிளைப் போட்டி போட்டுக்கொண்டு சாலையில் அலசிக்கொண்டே பள்ளிச் சிறுவர்கள் ஓட்டிக் கொண்டு இருந்ததால் கொஞ்சம் பதனமாகவே எனது வண்டியை ஓட்டினேன்.

சிறிது தொலைவில் இரண்டு பிஞ்சுக் கைகள் "லிப்ட்" கேட்டு வண்டியை நிறுத்தின. என்ன அவசரமாக இருந்தாலும் பொதுவாக சும்மா தானே போகிறோம் என்று ஏற்றிக் கொள்வது வழக்கம்.

"அண்ணா அண்ணா சாந்தி மேடு போகணும்"..

ஏறுப்பா.. டே டே ஒருத்தனுக்குத்தாண்டா எடமிருக்கு....

அண்ணா ரெண்டு பேரும் ஏறிக்கறோமே....???

(நண்பர்களை ஏன் பிரிப்பானேன்) ஏறுங்கப்பா...

ஏறியாச்சா... என்னங்கடா உங்கள விட உங்க பேக் எல்லாம் வெய்ட்டா இருக்கே...

சைடுல கெட்டியா பிடிச்சிட்டு உக்காருங்க போலாமா ...

புடிச்சாச்சு போகலாங்கண்ணா....

உங்க பேரென்னங்ண்ணா...?

பிரகாசு...யாருப்பா அது ரெண்டு தோளிலையும் கை போட்டு இருக்கறது..? நான் எப்படி வண்டி ஓட்ட..??

அண்ணா நான் சரியாத்தான் உக்காந்து இருக்கேன் இவன் தான்.. டேய், பின்னாடி இருக்குற கம்பிய புடிச்சுக்கடா.. அண்ணா வண்டி ஓட்டட்டும்..

வழி நெடுக சிறு பிள்ளைகள் தோளில் சில மலைகளைச் சுமந்து கொண்டு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தனர்..பாவம்.. ரெண்டு பேரை நான் கூட்டிக் கொண்டேன்.. மற்றவர்களை...

ஏம்ப்பா, வண்டி ஒண்ணும் வரலையா..?

ஆமாங்கண்ணா... ரொம்ப நேரமா நிக்கறோம் பஸ் வரவே இல்லைங்கண்ணா.. டியூஷனுக்கு நேரம் ஆச்சுங்கண்ணா...

எப்போதும் இந்த நேரம் இப்படித்தான் இருக்குமா...???

முக்கால் வாசி நாள் இப்படித்தாங்கண்ணா...

இங்கதாண்ணா.. எறங்கிக்கறோம்... டேங்க்சுங்ண்ணா...

சரிப்பா பாத்துப் போங்க.... டாடா காட்டிக் கொண்டே ஓடினர்..

கியரைப் போட முயல, அங்கிருந்து வேறு இரண்டு சிறுவர்கள் வந்தனர்.. அண்ணா பெட்ரோல் பங்கு போகணும்..

(அடப்பாவமே..)ஆட்டாம ஏறுங்கப்பா...

ஏம்ப்பா எப்பவுமே இப்படித்தானா..??

ஆமாங்கண்ணா.. யாராவது லிப்ட் குடுப்பாங்க...

எந்த ஸ்கூல்ப்பா நீங்க எல்லாம்...??

நாங்க தம்புங்கண்ணா..

ஆமா நான் எறக்கி விட்டனே.. அவுங்க ரெண்டு பெரும் எந்த ஸ்கூலுன்னு தெரியுமா..??

அவிங்க செய்ன்ட் ஜான்சன் ஸ்கூலுங்ண்ணா...

ஒரு நகரப் பேருந்து எதிரில் வர உள்ளே மூன்று வண்டிக்கான கூட்டம்.. வண்டியே ஒரு பக்கம் சாய்ந்து இருந்தது.. வெளியில் நான்கு வண்டிக்கான கூட்டம்.. அத்தனையும் சின்னப் பிஞ்சுகள்.. மேலே இருக்கும் கம்பி யாருக்கும் எட்டாது.. எப்படி உள்ளே நசுங்கி நிற்கப் போகிறார்களோ..?? இதில் முதுகில் மூட்டை வேறு..

ஆ அந்த மரத்துகிட்ட நிறுத்துங்கண்ணா...

பாத்துப் போங்கப்பா...

வழி நெடுக ஒரே சிந்தனை...

நானாக இருந்ததால் இறக்கி விட்டேன்.. இதுவே யாராவது கடத்தும் எண்ணத்துடன் வந்திருந்தால்...? பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொல்லித்தான் அரசுக்குத் தெரியுமா..? இரவு நேரமாகி விட்டால் இலவசப் பயண அட்டை செல்லாதோ என்னவோ பேருந்துக்குள் நசுங்கியாவது சென்று விட வேண்டுமென்று துடிக்கும் அந்தப் பிசுகளைப் பற்றி அரசுக்கு என்ன கவலை..? விடப்படும் கொஞ்ச நஞ்ச வண்டிகளாவது தரமாக உள்ளனவா..? தினமும் ஓரிரண்டு பேருந்துகள் பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிற்பதைக் காண்கிறேன். இந்தக் குழந்தைகளின் உயிருக்கு யார் உத்திரவாதம்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் வாடகை ஆட்டோ வைக்கிறார்கள்.. வாடகைக் கார் (?!?) வைக்கிறார்கள்.. இந்தக் குழந்தைகளுக்கு என்ன வழி..?

ஒரு வேளை ஏழைகள் என்பதால் யாரும் கடத்த மாட்டார்கள் என்ற இளக்காரமோ...??

நான் கேட்பது ஒன்றே ஒன்று தான்.. இரண்டு பேருந்துகள் அதிகமாக விட என்ன ஒபாமாவிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வேண்டுமா..??(ஓட்டு கேட்டு எவனாவது வீட்டுப் பக்கம் வரட்டும்.. சாணியைக் கரைச்சு மூஞ்சியில ஊத்தறேன்னு எங்கம்மா சொன்னது நினைவுக்கு வருது).

இனி கடத்த வேன் எல்லாம் தேவை இல்லை.. பைக் போதும். அரசு ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும்.. எவன் வேண்டுமானாலும் எந்தக் குழந்தையை வேண்டுமானாலும் கடத்திக் கொன்று குட்டைகளில் வீசிச் செல்வார்கள்.

(ஆள்பவர்களின் பசங்க எல்லாம் கூலா கான்வென்ட்ல படிச்சிக்கிட்டு இருப்பாங்க)

சாமக்கோடங்கி

Sunday, November 21, 2010

சுற்றுலா... பகுதி 2 - திருநெல்வேலி.

அனைத்து நல் உள்ளங்களுக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

சுற்றுலான்னு நெனச்சாலே, குளுகுளுன்னு, பச்சைப் பசேல்னு, மலைமேல.... இப்படி எல்லாம் தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, சும்மா ஒரு பயிற்சிக்காக திருநெல்வேலி போய் அது எனக்கு மிகச்சிறந்த சுற்றுலா அனுபவமாகியது.

அசோகா ட்ரஸ்ட் என்ற அமைப்பு, திருநெல்வேலியில், தன்னுடைய கிளையை அமைத்து, சுற்றுச் சூழல் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதன் விரிவான விவரங்களை "சமூக ஆர்வலர்களுக்கு என் அனுபவம்" என்ற பதிவில் பகிர்ந்திருந்தேன்.அந்த இரண்டு நாள் அனுபவம் மறக்க முடியாதது.

திருநெல்வேலி மாவட்டத்தை நெருங்கும்போதே சிவப்பான, வறண்ட மண்ணும், பாலைவனத்தில் முள் மரங்களை நட்ட வைத்ததைப் போன்ற காட்சிகளும், தெரிய ஆரம்பித்தன. பேருந்து நிலையத்தில் இருந்து அயன் சிங்கப்பட்டிக்கு, தனியாக ஒரு ஒருமணி நேரப் பயணம், அந்த நடத்துனர், அழகான திருநெல்வேலித் தமிழில் பேசி, பேருந்தையே கலகலப்பாக நடத்திய விதம் மறக்க முடியாதது. வடநாட்டைச் சேர்ந்த பாஷை தெரியாத சில செம்பட்டைத் தலை இளைஞர்கள், வழிமாறி இந்தப் பேருந்தில் ஏறியிருக்க, பயணச்சீட்டு கொடுக்கும் அந்த சமயத்திலும் கூட, அவர்களுக்கு சைகை மூலம் பரிவாக விளக்கி இறக்கி விட்டார். பழந்தமிழர்களின் பரிவும் விருந்தோம்பலும், உபசரிப்பும் எப்படி இருந்து இருக்கும் என்று என் கண் முன்னால் வந்து போயிற்று.

நாங்கள் தங்கியிருந்த இடம் அயன் சிங்கப்பட்டி, அதன் அருகே ஜமீன் சிங்கம்பட்டி, பின்னர் மணிமுத்தாறு ஆணை, அப்புறம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்று நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.

முதல் நாள் சனிக்கிழமை இரண்டு சைக்கிள்களை எடுத்துக் கொண்டு மணிமுத்தாறு அருவிக்குப் போகலாம் என்று புறப்பட்டோம், ஆனால், அணைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். காரணம், புலிகள் நடமாட்டம் உள்ள சாலைப் பகுதி. அதனால், பெரிய வாகனங்களில் வருபவர்களை மட்டுமே அனுமதித்தனர். அதனால் அருவிக்குச் செல்லாமல் அணையை மட்டுமே சுற்றி பார்த்தோம். மண்வாசனை கமழும் சாலையில், சைக்கிளை அமுத்திக் கொண்டு ஆணை வரை சென்றதை இன்னமும் மறக்க முடியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவ்வளவு அகண்டு விரிந்த அணைக்கட்டில், இருவர் மட்டுமே நின்று கொண்டு இருந்தோம். கார்த்தியும் நானும் ஒருவரை ஒருவர் மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அணைக்கட்டின் மேல் கட்டப் பட்டிருந்த ஒரு இரும்புப் பாலத்தில் இருந்து பார்க்கும்போது, நெல்வயல்கள் அழகாகக் காட்சி அளித்தன. சில அரிய இனப் பறவைகளும் காணக் கிடைத்தன.

இரண்டாம் நாள், ட்ரஸ்டில் இருக்கும் மதிவாணன் என்பவரிடம் கேட்டு ஒரு RX-100 வாங்கிக் கொண்டோம். இந்த முறை எப்படியேனும், அருவிக்குச் சென்று விடவேண்டும் என்று. அநேகமாக RX-100 ல் தயாரிக்கப் பட்ட முதல் வண்டி அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். எந்த கியரில் வண்டி ஓடியது என்று அதற்கும் தெரியவில்லை எனக்கும் தெரியவில்லை.

வழியில், ஒரு சிறிய கடையில் காலை உணவு எடுத்துக் கொண்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இரண்டு பேரும் ஆளுக்குக் குறைந்த பட்சம் பதினைந்து பதினாறு இட்லிகளை உள்ளே தள்ளி இருப்போம். இடையிடையே உளுந்து வடைகளையும் இடைச்செருகல்களாக அமுத்திக் கொண்டு இருப்போம். என்ன சுவை.. இப்பொழுது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊறுகிறது. நிறுத்த மனமில்லாமல் முடித்துக் கொண்டு பில்லைப் பார்த்து அதிர்ந்தே விட்டோம். வெறும் முப்பைந்து ரூபாய். என்னவென்று சொல்ல. வயிறை விட மனது நிறைந்தது என்பதே உண்மை.

லஞ்சம் கேட்ட செக் போஸ்ட் அதிகாரியிடம் காசையும் கொடுத்து விட்டு, கூடவே, நாங்கள் அராய்ச்சி செய்ய வந்திருக்கிறோம் என்பதையும் சொல்ல அவர் உள்ளே போய் யோசித்து விட்டு ஏதோ அதிகாரிகள் என்று நினைத்தாரோ என்னவோ, காசைத் திருப்பி எங்கள் கையிலேயே கொடுத்து அனுப்பி வைத்தார். அதற்குப் பின் தான் த்ரில்லிங் மலைப்பயணம் ஆரம்பமானது.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால், எப்படி உருண்டை உருண்டையான கற்களோடு காட்சி அளிக்குமோ, அது போன்றதொரு சாலை. குலுங்கிக் குலுங்கி மிகவும் அபாயகரமான, வளைவுகளில் வளைத்து ஓட்டும்போது தான் புரிந்தது, ஏன் எங்களை சைக்கிளில் அனுமதிக்கவில்லை என்று. "டே மாப்ள, எதுக்கால ரோடே தெரிய மாட்டேங்குதே, இந்த வண்டி வேற எப்ப பார்ட் பார்ட்டா கழண்டி விழும்னே தெரியல, இப்ப திடீர்னு ஒரு புலி துரத்துனா என்னடா பண்றது..?" என்று என் நண்பன் கேட்க, உடம்பு நடுங்கினாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அருவியை அடைந்து விட்டோம். சும்மா சொல்லக் கூடாது, அந்த RX-100ஐ மெச்சியாக வேண்டும்.

சிறிய அழகான அருவி, கூட்டம் குறைவாக இருந்ததினால் வெகு நேரம் இருந்தோம். எனக்கு இப்பவும் தோன்றும் ஒரு விஷயம் இதுதான். கிராமங்களில் தான் எவ்வளவு அழகுகள் ஒளிந்து கிடக்கின்றன.?! இதுபோன்ற தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை அழகு ததும்பும் கிராமப் பகுதிகள் உள்ளனவோ. கிராமங்களை அனுபவிப்போம், சுவாசிப்போம்.

அங்கே செய்ததிலேயே அதிக செலவு என்பது திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டும் தான். மற்றபடி, இரண்டு நாள் சாப்பாடு, அப்புறம் சூப், சாப்பிட சின்ன சுத்து முறுக்கு என்று அத்தனையும் சேர்ந்து நூறு ரூபாயைத் தாண்டவில்லை.

சாமக்கோடங்கி

Sunday, November 14, 2010

கோயம்புத்தூர் - பகுதி 1

நண்பர்களே,

கோயம்புத்தூர் பற்றி எழுத வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம். நிறைய எழுதலாம். தமிழமுதத்தில் வேந்தர் அவர்கள் பதிவிற்கு என்னுடைய கருத்தை இணைத்திருந்தேன். அதுவும் முக்கியமான விஷயம் என்பதால் அதை இங்கே கொடுக்கிறேன்.

இது சற்று மேலோட்டமான பதிவு. இன்னும் ஆழமான விஷயங்களை அடுத்த பதிவில் பகிரலாம்.
************************************************************************
வேந்தர் :சரவணம்பட்டியில் என் நண்பர் 18 அறைகள் கட்டி வாடகைக்குனு அறிவித்தார், 15 நாளில் அத்தனையும் ஆக்கப்பை ஆகிவிட்டன.
ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.

சென்னையில் ஆப்பக்கடைனு ஒரு கடைக்கு போனோம். சேவை செய்பவர்கள் நேபாளிகள். காஞ்சிபுரத்திலும் இது போல் கண்டேன்.

கோவையில் கீழ்நிலை தொட்டிக்கு ஒரு மூடி வாங்க கருங்கல் பலகை வாங்க போனோம். பெரிய பலகையை அளவுக்கு அறுக்க வேண்டும். மேலாளர் மேஸ்திரியை அழைத்து தமிழில் சொன்னார். அவ்ர் த்ன கீழ் பணியாட்களுக்கு இந்தியில் விளக்கினார். பலகை அறிக்கப்பட்டு என் காருக்கு வந்தது


தமிழ் நாட்டில் வடவர்கள் எண்ணிக்கை பல்கி வருது.
இந்தி மாநிலங்களில் தமிழ் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

பூனைக்கு இது காலம்.
**************************************************************************

சாமக்கோடங்கி:

//ராபர்ட் பாஸ்ச், கேஜி நிறுவனங்களின் ஊழியர்கள். பெரும்பாலோனோர் வடவர்கள்.//

கேஜி பற்றி எனக்குத் தெரியாது..

ஆனால் ராபர்ட் பாஷில் அப்படி இல்லை... எங்கள் அலுவலகத்தில் இருபது
சதவிகிதம் வெளி மாநிலத்தவர்கள் தான்...முக்கியமாக கர்நாடகம், ஆந்திர
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. அதுவும் கர்நாடகாவில் இருந்து கிளை
கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டதால் வந்தவர்கள்.. அதற்குப் பிறகு
பணியமர்த்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர்க்காரர்களே.. ஒரு
வகையில் LMW, Pricol, Shanthi Gears, Roots , CRI போன்ற கோவையை மையமாக
வைத்து வெகு காலமாக கோலோச்சி வந்த நிறுவனங்களுக்கு BOSCH ன் வருகை ஒரு சிம்ம சொப்பனமே... வேலைப்பளுவுக்கு, குறைவாக சம்பளம் கொடுத்தல், அதிக வேலை வாங்குதல், மேலதிகாரியின் அரசியல், ஆதிக்கம் போன்றவற்றால் ஆட்டம் கண்டு வந்த மக்களுக்கு BOSCH ன் வருகை மற்றும் அதன் கலாச்சாரம் ஆகியவை மிகப்பெரிய மாறுதலாக உள்ளது... இதை நான் சொல்லவில்லை... என்னுடைய இரண்டரை வருட அனுபவத்தில், எத்தனையோ பேர் மேற்கூறிய கம்பெனிகளில் இருந்து விலகி இங்கே வந்துள்ளனர்...

கொடுமை என்னவென்றால், கோயம்புத்தூரின் உள்கட்டமைப்பு, புதிய பன்னாட்டு
நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லை.. "விலைவாசி ஏற்றம் உள்ள
அளவுக்கு இங்கே வசதிகள் இல்லை" என்பது ஒரு பொதுவான குற்றச் சாட்டாக
உள்ளது... சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற ஒன்றைக் காட்டி பன்னாட்டு
நிறுவங்களை கவரும் அரசு அதற்கேற்ற வசதிகளைச் செய்யா விட்டால்,
கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்டு வாழும் அப்பாவி மக்கள் பாதிக்கப்
படுவார்கள்.. இப்போதே பாருங்கள்.. அதே ரோடுகள்.. ஆனால் ஏகப்பட்ட BOSCH,
CTS, DELL மற்றும் பல புதிய கம்பெனிகளின் பணியாளர் பேருந்துகள் நிதம்
நிதம் உலவி போக்குவரத்தை அதிகப் படுத்தி விட்டிருக்கின்றன... அவர்களைக்
குறை கூற முடியாது.. பணியாளர்களுக்குப் பேருந்து வசதி ஒன்றும்
செய்யவில்லை என்றால் அவர்கள் தனியாக வண்டி வைத்தோ, அல்லது நகர(நரக)
பேருந்துகளில் தான் கம்பெனிக்கு வர வேண்டும்.. கிட்டத்தட்ட 6000
ஊழியர்கள்(BOSCH, CTS,DELL, KGISL) சரவணம்பட்டிக்கு தனித்தனியாக வந்தால்
எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை..

சரி விஷயத்துக்கு வருவோம்..

ஆனால் கேஜி நிறுவனத்தின் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சிறப்புப்
பொருளாதார மண்டலத்தில் கட்டப் படுகின்றன... விவசாய நிலங்கள்
அழிக்கப்பட்டு இந்த SEZ வந்துள்ளது.. இப்போது உள்ளே அடுக்கு மாடிக்
குடியிருப்புகளை கேஜி நிறுவனம் கட்டி வருவதோடு விளம்பரமும் ஓஹோ.. 35
லட்சத்திலிருந்து ஆரம்பித்து கொடிகளைத் தாண்டி விற்கப்படுகின்றன
அபார்ட்மன்டுகள்... கொள்ளை லாபம் ஈட்டுகிறது இந்த நிறுவனம்.. சிறு சிறு
ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ஏற்கனவே சுற்று வட்டாரப் பகுதிகளை ஒன்றும்
அறியாத அப்பாவி விவசாயிகளிடம் பேரம் பேசி ஒரு நல்ல விலைக்கு வாங்கி
பிளாட் போட்டுக் கடை விரித்து வைத்து உள்ளனர்.. இவர்களின் முக்கிய இலக்கு
இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் தான்... வசதிகள் இருந்தால்
போதும் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுகின்றனர்.. இந்தப் போட்டியால்
விலையை அமோகமாக வைத்து லாபம் பார்க்கின்றனர் இந்த ரியல் எஸ்டேட் சுரண்டல் வியாபாரிகள்..
இவர்களின் லாபத்திற்கு முக்கியக் காரணம் இந்த வடமாநில ஊழியர்கள்..

எப்படி என்றால், இவர்கள் கட்டிடங்கள் கட்ட உள்ளூர் கட்டிடத் தொழிலார்களை
அழைப்பதில்லை..(புத்தி சாலிகள்.).. ஏனெனில், உள்ளூரிலேயே, மேசன்,
கான்ட்ராக்டர்கள், சிற்றாள் மற்றும் பல்வேறு வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு
நிலவுகிறது.. அவர்களும் கூலியை சராமாரியாக ஏற்றி விட்டனர்...(எங்கள்
வீட்டு மதில் சுவரில் ஒரு சிறிய அலங்காரத்தை மூன்று நாட்களாக
செய்கின்றனர் இரண்டு பேர்.. மூவாயிரம் ரூபாய்க்கான உகந்த வேலை இல்லை
அது.. என்ன செய்ய.. ஆட்கள் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்.. பகைத்துக்
கொள்ளவும் முடியாது..)

எனவே, இந்தப் பெரிய பண முதலைகள், மொத்தமாக வடமாநிலத்தில் பஞ்சத்தில்
அடிபட்ட மக்களை, அலேக்காக லாரியில் அள்ளிப் போட்டு நம்ம ஊருக்குக்
கட்டிடத் தொழிலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர்.. நாட்கூலி அவர்களுக்கு
நூறைத் தாண்டாது(வட மாநிலத்தில் அவ்வளவு பஞ்சமோ..??). கட்டிட வேலை
நடக்கும் இடத்திற்கு அருகேயே, இவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள்
ஏற்படுத்தப் படுகின்றன.. முக்கியமாக வாரத்திற்கு இரண்டு நாள், உடம்பு
சரியில்லை, சொந்தக்காரன் இறந்து விட்டான் என்று இவர்கள் வேலைக்கு வராமல்
இருக்க முடியாது..(சொந்த வீடு கட்டியவர்களுக்கு இந்த உள்ளூர்
வேலைக்காரர்கள் செய்யும் இந்த அலம்பல்கள் தெரியும்...). அப்புறம் இன்னொரு
விஷயம், அவர்கள் சொந்த செலவுக்காக முன்பணமும் கேட்பதில்லை...

இது தான் கோயம்புத்தூரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் உலாவுவதற்கான காரணம்..

அப்புறம் இன்னொன்று, இந்த கிரானைட், மார்பில், மற்றும் கடப்பா கல்
வியாபாரிகள்.. இவர்கள் மொத்தமாக கற்களை வடக்கில் இருந்து அள்ளிப் போட்டு
இங்கே வந்து வியாபாரம் செய்து கொள்ளை லாபம் சம்பாரிக்கின்றனர்.. கோவை
மாவட்டம் தடாகம் பகுதியில் வந்து பாருங்கள்.. இவர்கள் எப்படி ஓஹோ என்று
இருக்கிறார்கள்.. இவர்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்று..
இவர்களும் கற்களை அள்ளிப் போட்டு வரும்போது, அங்கே பஞ்சத்தில் அடிபட்ட
மக்களையும் அப்படியே தூக்கிப் போட்டு வந்து விடுகின்றனர்...
****************************************************************************

அனைவரும் பயனடையும் பட்சத்தில் நான் மிகவும் சந்தோஷப் படுவேன். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அரசு உடனே விழித்துக் கொள்ள வேண்டும்.

திடீரென உருவாகும் வளர்ச்சி பல சமயங்களில் ஆபத்தானது.. அது எப்படி இருக்கும் என அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சாமக்கோடங்கி