Sunday, September 26, 2010

மனமூடி - 3

மேட்டுப்பாளையம் காரமடை ரயில்வே கேட் மிகவும் பிரபலம். அந்த அளவுக்கு இடைஞ்சல் கொடுக்கும் ஒரு கேட். காலையில் மற்றும் மாலையில் வாகன நெரிசல் ஏற்படும் நேரங்களில் சரியாக கேட் போடப்பட்டு அனைவருக்கும் தொந்தரவு தரும் இடம்.கேட் போடப்பட்டால் லாரிகள் எல்லாம் ஓரமாக நிற்க,தனியார் பேருந்துகள்(ரோட்டின் ஏக போக உரிமையாளர்கள்) மற்றும் இரு சக்கர வாகனங்கள் வலது புற இடைவெளி தங்களுக்கே விடப்பட்டதாக நினைத்துக் கொண்டு முன்னே போய் கேட்டை முட்டிக் கொண்டு நிற்பர்.

கேட் திறந்து விட்டால் தான் இருக்கு களேபரமே.. ஒழுக்கமாக இடது புறத்தைப் பின்பற்றி நின்றால் இரண்டு நிமிடங்களில் கேட்டை கடந்து செல்லலாம் ஆனால் இவர்கள் அவசரப் பட்டு குறுகிய இடைவெளியில் இரண்டு பெரிய வாகனங்களை நுழைத்து விட்டு வண்டியை அனைத்து விட்டு நீ எடு நீ எடு என்று முட்டிக் கொண்டு நிற்பார்கள்.. நம் மக்களின் மனோ நிலையை ஆராயும்போது யாருக்கும் இங்கே பொறுமை இல்லை என்று முடிவுக்கு வரலாம் தானே...?

அன்று ஒரு காலை என் இருசக்கர வாகனத்துடன் கேட்டை நெருங்குகையில் சரியாக கேட் போடப்பட்டது.ஒரே நிமிடத்தில் எனக்குப் பின்னாலும் கேட்டுக்கு அப்பாலும் சரியான கூட்டம் சேர்ந்து விட்டது. (வழக்கம்போல் வலது பக்கம் வழிவிடாமல் நிறைய வண்டிகள் சேர்ந்து விட்டன. நொந்து கொண்டேன்.)கேட்டுக்கு அப்பால் ஒரு அம்பாசடர் முழுக்க ஆட்களை நிரப்பி நின்று கொண்டிருந்தது. வண்டிக்கு உள்ளே அனைவரும் சற்று கவலையுடன் காணப் பட்டனர்.அந்த வண்டி ட்ரைவர்,அருகில் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர் ஒருவரை அழைத்து ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து கேட்டின் இப்புறமிருந்த எங்களைப் பார்த்து சத்தமான குரலில் பேசினார். வண்டியில் இருப்பவர்களின் உறவுக்காரர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் இருப்பதாகவும் மிகவும் அவசரம், வண்டிகள் கொஞ்சம் அவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

ரயில் வந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம்...!!! ஒரு முப்பது வினாடிகளில் வலது புறம் நின்று கொண்டிருந்த வண்டிக்காரகள் அனைவரும் பின்னாலேயே சென்று கிடைத்த இடப்புற சந்துகளில் சொருகி நின்று கொண்டனர். புதிதாக எதுவும் தெரியாமல் வலது புறம் காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது என்ற மதப்பில் முறுக்கிக் கொண்டு வந்த வாகனங்கள் அனைத்தையும் நின்று கொண்டிருந்த அனைவரும் ஒரே குரலில் மிரட்ட, அவர்கள் மிரண்டு ஒதுங்கிக் கொண்டனர். ரயில் போனதும் கேட்டைத் தூக்க முடியவில்லை. அதில் ஏதோ ஒரு இயந்திரக் கோளாறு. கேட் கண்காணிப்பாளர் என்ன செய்வதென்று திகைப்பில் நிற்க நின்று கொண்டிருந்த மக்கள் தாங்கள் செல்வதைப் பற்றிக் கூடக் கவலைப்பட வில்லை, அந்த அம்பாசடர் வண்டி எப்படியாவது முதலில் செல்ல வேண்டும் என்று ஒருமித்து யோசித்தனர். இரண்டு மூன்று பேர் உடனடியாக இறங்கி கேட்டைத் தூக்கப் பிடித்தனர். அந்த வண்டி தாண்டியதும் நமது ஆட்கள் பழையபடி முட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆக சில நேரங்களில் மனிதனின் மனமூடி கழன்று மனிதநேயம் எட்டிப் பார்க்கிறது.பத்துப் பதினைந்து நிமிடங்கலானாலும் ஒதுக்க முடியாத அந்த நெரிசல் முப்பதுக்கும் குறைவான நொடிகளில் ஒதுக்கப்பட்டது எப்படி..? மக்கள் ஒருமித்துச் செயல்படும்போது அதன் சத்தி அபாரமானது அல்லவா..?

இன்று ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிடாமல் முறுக்கிக் கொண்டு சென்ற ஒரு தனியார் பேருந்தைப் பார்த்து மறுபடியும் மனதில் இதே கேள்வி எழுந்தது. இளங்கோ ஒரு பதிவில் சொல்லி இருந்தது போல நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பின்னால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம். இதே போலத்தான் ஒரு அவசர ஊர்திக்கு வழிவிடுவதும். ஏன் அந்த தீயணைப்பு வண்டி உங்கள் வீட்டில் விழுந்த தீயை அணைக்கக் கூட சென்று கொண்டிருக்கலாம். அந்த அவசர ஊர்தியில் உங்கள் உறவினர் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். யார் கண்டார்...?

மனிதன் அவசர கதியில் உழைப்பதும் அவனும் அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லவா..? அதை இன்னொருவன் குடியைக் கெடுத்துப் பெறலாமா..? ஆகவே மனித நேயம் வெளிப்பட வேண்டிய இடங்களில் மனமூடிகளை கழற்றி எறிவோம்...

----------------------------------------------------------------

இருங்கப்பா.. இன்னும் முடியல.. நானாவது சின்ன பதிவு போடறதாவது..

இன்னொரு மனமூடியைப் பற்றியும் இப்போதே தெரிந்து கொள்ளலாம். இன்றைய கூட்ட நெரிசலில் நடத்துனரின் பாடு அதோ கதி தான். அவர் கத்துவதற்கு ஏற்றாற்போல் தான் நமது மக்களும்.காலையில் வண்டியில் ஏறியதில் இருந்து இறங்கும்வரை படியில் நிக்காதே உள்ளே வாங்க, சில்லறையை கையிலேயே வைங்க, வழிவிட்டு நில்லுங்க, டிக்கட்ட கேட்டு வாங்குங்க.. அப்படி இப்படின்னு கத்திகிட்டே இருக்க வேண்டிய நிலைமை. அவர் சுடுதண்ணி கொட்டினது மாதிரி கத்துறது இல்லாம பேருந்தில் பயனிப்பவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்.

ஒரு முறை ஒரு அரசுப் பேருந்தில் ஏறும்போது நடத்துனர், "உள்ளே வர்ற தம்பி, தங்கக் கம்பி.. வழிவிடுங்க ராசாக்களா..." என்று ஏற்ற இறக்கமான குரலில் அழகாகப் பேசினார். எனக்கும் சிரிப்பு சுற்றி இருந்தவர்களுக்கும் சிரிப்பு.."பெரியம்மா உங்க ஸ்டாப்பு வந்துருச்சு.. பாத்து இறங்குங்க தாயி.. அப்பா மக்கா அம்மாவ கொஞ்சம் இறக்கி விடுங்க.. யப்பா டிரைவரு, விசிலடிக்கற வரைக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா...", "சில்லறை இல்லையின்னா கவலைய விடுப்பா.. அதுக்குதான நானிருக்கேன்.. இந்தா பிடி டிக்கட்டு, இந்தா காச வெச்சு சந்தோஷமா இரு ரை ரைட்..." இப்படி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தார். அவரின் கோமாளித்தனமான(?!!?!)செய்கை அனைவரையும் கவர்ந்தது.. நெரிசலையும் மறந்து சந்தோஷமாகப் பயணித்தோம். நாலு பேர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் கோமாளியாக இருப்பதில் தவறில்லை தானே..இவர் கொஞ்சம் வித்தியாசமான நடத்துனர் தான்.அவருக்கும் ரத்தக்கொதிப்பு ஏறாது. இன்னொரு அதிசயம்(!?!) அந்தப் பேருந்தின் படிகளில் நின்று ஒருவர் கூட பயணிக்கவில்லை.!!
ஆக எவ்விதத் தருணத்தையும் சந்தோஷமாக மாற்றும் வித்தை அவரவர்கள் கையிலேயே உள்ளது. கொஞ்சம் நமது மனமூடிகளைக் கழற்றி வைத்தால் போதும்.

நன்றி..
பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி

Saturday, September 18, 2010

தகடு வைத்தால் தான் உயிர் பிழைக்கலாம்....

அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கங்கள்.. சந்தித்து கொஞ்ச நாள் ஆகி விட்டது.. என்னடா இவன் கேப்புல மந்திரம் தந்திரம்னு போய்ட்டானா..? தகடு கிகடுன்னு ஆரம்பிசிட்டானே'ன்னு நினைக்கிறீங்களா...? தலைப்பில் பொடி வெச்சு எழுதணும்னு ஆசை.. இப்பத்திக்கு பிரபலம் எந்திரன் தான்.. அதை வெக்கலாம்னு பாத்தா இன்ட்லி புல்லா இப்ப அதுதான் ட்ரெண்டு.. அது தான் இப்படி ஒரு தலைப்பு.. வேற என்னத்த பேசப் போறேன்..? வாங்க நம் உயிரை மட்டும் அல்ல, நம் உலகத்தைக் காப்பாற்றப் போகும் ஒரு தகடைப் பற்றிப் பார்ப்போம்..

சோலார் தகடுகளை உபயோகியுங்கள், சுற்றுச் சூழலைக் காப்பாற்றுங்கள் என்கின்ற பிரச்சாரங்கள் தொடங்கி ரொம்ப நாட்களாகி விட்டது.. எத்தனை பேர் செவி மடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதில் உள்ள சில விஷயங்களைப் பற்றி அலச நினைக்கிறேன்.

சூரியன் என்கின்ற ஒன்று தான் நமது வாழ்வின் ஆதாரமாக உள்ளது. நமது பூமியை மட்டும் இல்லாமல் பல கோள்களையும் தூசு துகள்களையும் மற்றும் பல்வேறு ஜீவராசிகளையும் (சூரியக் குடும்பத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், நம்மால் உணர முடியாத உருவத்தில், பரிமாணத்தில் இருக்கலாம்)தன்னோடு பிணைத்துக் கொண்டு சுழலும் ஒரு அதிசயம். அப்படிப்பட்ட சூரிய ஒளியைக் கொண்டே நாம் உயிர் வாழ்கிறோம். ஆம், புவிப்பரப்பின் மேல் பட்டு தெறித்தது போக (சராசரியாக 30%)மீதி கிடைக்கும் 70% ஒளியைக் கொண்டே நமது புவியின் தட்பவெப்பநிலை உயிர்கள் வாழ ஏதுவாக உருவாகி உள்ளது. அது மட்டுமா, தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சையத்தைத் தயாரிக்கின்றன. கடல் நீரை ஆவியாக்கி மழையாகத் தருவிப்பதும் நமது சூரியத் தந்தை தான்.(பூமியைத் தாய் என்று சொல்லி விட்டோம் அதனால் தான்)

பூமி உருவாகி குளிரத் தொடங்கிய பிறகு சூரிய ஒளியின் உதவி கொண்டே உலகின் முதல் உயிரின வகை(ஆல்கே) உருவாகியதாக அறிவியல் கூறுகிறது.அது மட்டும் அல்லாமல் நமது உடலும் அது இயங்கத் தேவையான பல்வேறு சக்திகளை சூரிய ஒளியில் இருந்து நேரடியாகப் பெறுகிறது. அதனை உணர்ந்ததால் தான் பெரியோர் சூரிய வணக்கம், காலையில் மற்றும் மாலையில் உலவுதல் போன்ற பல்வேறு விதமான நடைமுறைகளை உருவாக்கி வைத்து உள்ளனர். சூரியனைக் கடவுளாக வணங்கும் பழக்கம் பல்வேறு மதங்களில் காணப்படுகிறது.

சரி சரி ரொம்ப நீளுது.. சீக்கிரம் பதிவுக்குள்ள போகலாம்(என்னது..? இன்னும் பதிவுக்குள்ளயே போகலையா...)இப்படி சூரிய ஒளியைத் தேக்கி வைத்த தாவர வகைகள் பின்னாளில் மண்ணோடு மண்ணாகி சிதைந்து மக்கி உருவாகியது தான் எரிபொருட்கள். இது சும்மா இரண்டு மூன்று நாட்களில் நடக்கும் விஷயம் இல்லை. பல லட்சக் கணக்கான வருடங்கள் மண்ணுக்கடியில் அதிகப் படியான அழுத்தத்திலும், வெப்பத்திலும் உருவாகியவை தான் இன்றைய நிலக்கரியும், பெட்ரோலியமும். ஆனால் மனிதன் தான் சிறு தேவைகளுடன் திருப்தி அடையாதவன் ஆயிற்றே..

பூமிக் கருப்பைக்குள் இருப்பதைச் சுரண்டி எடுத்துத் தின்னும் நமது அசுரப் பசிக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல லட்ச வருட செல்வங்கள் நொடிக்கு நொடி அழிக்கப் படுகின்றன. அதுவும் பெட்ரோல் உபயோகிக்க ஆரம்பித்து இந்த சில வருடங்களிலேயே இந்த நிலைமையை நாம் எட்டி உள்ளோம்(புள்ளிக் கணக்குகள் தருவதைத் தவிர்க்க நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்தப் பதிவை முடிக்க முடியாது).. இனி சுரண்ட ஒன்றும் இல்லை மக்களே.. இருந்ததை எல்லாம் கொடுத்து விட்டு அம்போ என்று நிற்கிறாள் நமது தாய்..

சரி.. இனி.. தந்தை தான்.(ஏன்னா அவர் மட்டும் தான் பாக்கி). அதனால் மக்களே எல்லோரும் சூரிய ஒளித் தகடுகளை உபயோகிப்போமாக......... என்று மேம்போக்காக முடித்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இங்கே என் முன் வைக்கப் பட்டுள்ள கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

கேள்வி: நான் மாதா மாதம் ஐந்நூறு ருபாய் மின் கட்டணம் செலுத்துகிறேன். மின்சாரம் வருகிறது.அப்புறம் எதற்கு லட்சக் கணக்கில் செலவு செய்து சோலார் இணைப்பைப் பெற வேண்டும்..?

பதில்: விஷயங்களை மேலோட்டமாகப் பார்ப்பது தவறு. இன்று வேண்டுமானால் நமக்கு ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கலாம்,ஏனென்றால் நிலக்கரி கிடைக்கிறது, யுரேனியம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு..?
தினம் தினம் வெட்டப் படும் நிலக்கரியையும், அவை வெட்ட உபயோகப்படுத்தப் படும் இயந்திரங்களையும், பயன்படுத்தப் படும் மனித வளங்களையும், கொண்டு செல்ல உபயோகப் படுத்தப் படும் பிரம்மாண்ட வாகனங்களையும், அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உலைகளையும் பார்த்தால் சத்தியமாக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டீர்கள்.. மொத்தமாக உற்பத்தி செய்வதால் இந்த விலைக்குக் கொடுப்பதில் அரசுக்கு லாபம் உள்ளது. மூலப் பொருட்கள் தீரத் தீர அரசு என்ன செய்யும்..?வேற என்ன அந்தச் சுமை நம்ம மேல தான்..இப்போதே இரண்டு மூன்று மணி நேர மிந்தடையச் சமாளிக்க தனியார்க் கம்பெனிகள் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்கின்றனர்.இது திரும்பப் பெற முடியாத செல்வம்... அதனால் நாளைக்கும் இதே செலவில் இது நமக்குக் கிடைக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

மேலும் அந்த ஐநூறு ருபாய் மின்சாரம் காற்றில் வந்து நமது வீட்டில் விழவில்லை.. அதற்குக் கம்பம் நட வேண்டும், கம்பி இழுக்க வேண்டும், அளவிட்டுக் கருவி பொறுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும், இன்னும் நிறைய இருக்கின்றன.. ஓடி ஆடிப் பணம் சம்பாதிக்கிறோம்.எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் மின்சாரத்திற்குச் செலுத்தத் தயாராகி இருப்போம்.. ஆனால் தருவதற்கு மின்சாரம் தான் இருக்காது. ஆக இதற்கு முன் சோலார் கருவிக்கு இன்று செய்யும் ஓரிரு லட்சம் ஒன்றும் பெரிய செலவில்லை.இன்னும் என்னால் புள்ளிக் கணக்காக பதில் சொல்ல முடியும்.. ஆனால் ஒரே ஒரு கோரிக்கை..நம் தாய்க்காக இதைச் செய்வோமே..பதிவு நீளமாகிக் கொண்டே போகிறது.. மன்னித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை ஒரே பதிவில் முடித்துக் கொள்ள முயல்கிறேன்.

கேள்வி: இவ்வளவு நல்லது என்றால் அரசே இதைச் செய்யலாமே.. மானிய விலைக்கு கொடுக்கலாமே ..?

பதில்: அரசு இதைச் செய்யத் தொடங்கி விட்டது. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சோலார் தகடுகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் ஆய்வுகளும் தொடங்கி விட்டன. பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சூரிய ஒளியில் இயங்கும் உபகரணங்களை உபயோகித்தல் கட்டாயமாக்கப் பட்டு வருகின்றன. ஆனால் என்னுடைய பயம் என்னவென்றால் தனியார்த் துறைப் பண முதலைகள் மற்றும் அரசாங்க லஞ்சப் பெருச்சாளிகள் இந்த வகை மின் உற்பத்தியை வருங்காலத்தில் லாபம் தரும் தொழிலாகவே பார்க்கின்றனர்.(சன் குழுமம் விரைவில் இந்தத் துறையில் குதித்தாலும் குதிக்கலாம்..). இது ஆபத்து. உதாரணத்திற்கு வாகனம் தயாரிக்க அரசு மானியம் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்(மக்களுக்குப் பயன் தர வேண்டி).. தயாரிக்கப் படும் வாகனம் சைக்கிளாக இருக்கும் பட்சத்தில் அது சரி.. ஆனால் அதுவே காராக இருந்து விட்டால்..? அதன் தயாரிப்பு செலவுக்கான ஞாயமான காசை நாம் கொடுக்க வேண்டுமே.ஆக அந்த உதவி மேல் தட்டு மக்களுக்குத் திருப்பி விடப்பட்டு விடும் வாய்ப்பு உள்ளது. அது தான் எனது கவலை. தனியார்த்துறை இதில் காட்டும் முனைப்பைப் பார்க்கையில் எனக்கு அவர்களின் பொது நல நோக்கு தெரியவில்லை.. அவர்களின் லாப நோக்கே தெரிகிறது. அவர்கள் அதனை ஒரு காரைப் போல உருவாக்கி அழகு படுத்தி லேபில் குத்திக் காசு பார்க்க நினைக்கின்றனர். மூலப் பொருட்களின் விலை உயர்வும் விற்கப் படும் பொருட்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். 2012ல் மட்டும் பல நூறு மில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் தொழிலாக சோலார் மின் உற்பத்தி இருக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது..

அதனால் அரசு தரும் என்று எதிர்பாராமல், இன்றே ஒரு சோலார் தகடு,ஒரு பேட்டரி மற்றும் மின் மாற்றித் தரும் சாதனங்கள் ஆகியவற்றை அழகாகப் பொருத்தி அமைதியாக இருக்கலாம்..

கேள்வி: இன்னும் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்காவது பெட்ரோல் வகை எரிபொருட்கள் கிடைக்குமாமே...?

பதில்: அதற்காக நமது தலைமுறைக்கு மட்டும் ஜாலியாக வாழ்ந்து அனுபவித்து விட்டுப் போகலாம் என்று நினைக்கலாமா..? அப்படி நினைக்கவில்லை என்று சொல்லும் மக்களுக்கு : ஒரு இடத்திற்குச் செலவதற்கு அதிக பட்ச சொகுசாக ஒரு காரில் செல்லலாம். அது லிட்டருக்கு பனிரண்டு கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.. ஆனாலும் ஐந்து கிலோமீட்டர் மைலேஜ் தரும் பென்ஸ் சொகுசுக் காரில் தான் செல்வேன் என்று பந்தா காட்டித் திரியும் மக்கள் நம்மில் எத்துனை பேர்..? நமக்குக் கிடைக்கும் ஆற்றல்களில்(எனர்ஜி) உபயோகப் படுத்தும் பங்கை விட வீணாக்கும் பங்கு தான் அதிகம் என்பதை நான் புள்ளி விவரத்துடன் சொன்னால் தான் நீங்கள் நம்புவீர்களா..? நாம் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உபயோகப் படுத்த நமக்கு உரிமை உள்ளது(அவ்வாறே உலகம் படைக்கப் பட்டு உள்ளது).. அனால் விரயம் செய்ய எவனுக்கும் இங்கே உரிமை இல்லை.!!

கேள்வி: பணம், பகட்டு, ஆடம்பரம், சொகுசு இவை எல்லாவற்றையும் பெரும் பண முதலைகள் அனுபவிக்க, இது போன்ற நல்ல செயல்களை மட்டும் மக்களிடம் நேரடியாகச் செய்யச் சொல்லித் திணிப்பது ஞாயமா..? எப்படி இருந்தாலும் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லையே..?

பதில்: இந்தக் கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.. ஏனென்றால் இந்தக் கேள்வியை உங்களோடு சேர்ந்து அரசை நோக்கிக் கேட்கும் பிரஜையாகவே நானும் இருக்கிறேன்.. ஆம். எரிபொருளை மிச்சப் படுத்துங்கள் என்கின்ற பிரச்சாரம் மக்களை நோக்கி.., அனால் அவர்கள் போவது வருவது எல்லாத்துக்கும் ஆடம்பரக் கார்கள். அதுவும் சொகுசுக்காக மைலேஜ் குறைவாகத் தருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள குளிர்விக்கப் பட்ட கார்கள்..

குடும்ப விழாக்கள், பொதுக் கூட்டங்கள், என்ற ஆடம்பரச் செலவுகளை அவர்கள் செய்து விட்டு எங்கள் வீட்டுக் குழல் விளக்கை ஒன்பது மணிக்கே அணைக்கச் சொல்வது எவ்வித ஞாயம்..?

நீங்கள் விமானத்தில் தேவையில்லாமல் சுற்றுப் பயணம் செய்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் செல்லும் என்னை நடக்கச் சொல்வது என்ன நீதி..?

இன்று கிடைக்கும் பீசாவை மிச்சம் வைக்காமல் தின்று கொழுத்து விட்டு நாளை நான் எனக்காகச் சேமித்து வைத்துள்ள பழைய சோற்றிலும் கைவைப்பாயோ...?

ஆனால் மக்களே இதற்கும் நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது. சாதாரண மக்கள் பார்வையில் ஞாயமான கேள்விகள் இவை. அதற்கும் மேலாக ஒரு சமுதாய நோக்குடன் பார்க்கும் போது, அரசை மறந்து, தனியார் கம்பெனிகளை மறந்து என் கண் முன் தெரிவது இந்த பூமி தான். அவர்கள் சாக்கடை தான், அதற்குள் உழன்று புரண்டு ஞாயம் தேடாமல்(கிடைக்கப் போவது இல்லை), நமக்கு இப்போது சோறும் போடும் நமது பூமித் தாய்க்கு நம்மால் முடிந்த சிறு காயக் களிம்பு, அதனைப் போடலாமே என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடுகிறது.. இதனைச் செய்து நாம் ஒரு முன்னோடியாக இருக்கலாம், நம்மைப் பார்த்து நம் அருகில் உள்ளவர்கள் செய்வார்கள், ஒரு ஊர் செய்யும், பின் இந்த நாடே செய்யும்..

ஆக இதனை முயற்சித்துப் பார்க்க முற்படுவோர் தயவு செய்து உடனே செய்யுங்கள். பணம் இல்லாதோர், இந்த எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்து இருங்கள், பணம் கிடைக்கும்போது கட்டாயம் செய்யுங்கள். இந்த சக்தி பூமி உள்ளவரை கிடைக்கும் அழியாச் சக்தி, நமது தேவைக்கான ஒரே பதில், மற்ற வகை எரிபொருளை விட பக்க விளைவுகள் மிகக் குறைவாக உள்ள ஒரு சக்தி.. அப்புறம் மீதி மக்கள் கையில்.

சரி சொன்னபடி ஒரு பதிவுல முடிக்க முடியல, சூரிய ஒளி மின்சாரத்தை எப்படித் தயாரிக்கலாம், இதிலும் உள்ள குறைபாடுகள்(!?!?) என்னென்ன, அதனை எப்படிக் களையலாம், இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் போன்றவற்றை அடுத்த பாகத்தில் வெளியிடுகிறேன். நான் தெரிந்து கொள்ள விருப்பப்பட்ட பாடம் இது. இப்போது இந்தத் துறையிலே ஆராய்ச்சி செய்யும் பணி எனக்குக் கிடைத்து உள்ளது. எனவே இன்னும் துருவி நல்ல தகவல்களைப் பெறலாம்.. அக்டோபர் மாதம் முழுவதும் ஜெர்மனி செல்ல இருக்கிறேன். பதிவுக்கு வரமுடியுமா என்று பார்க்கிறேன்.. மற்றபடி இந்தப் பதிவில் இருப்பவை என்னுடைய பார்வை. தவறு இருக்கலாம் மாற்றுக் கருத்துகளை நெத்தியடியாக அடிக்க அனைவரையும் வரவேற்கிறேன். நிறைய தெரிந்து கொள்ளலாம்..

பி.கு:இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.மற்றவர்களுக்குக் கொண்டு சேர்க்க இது உதவும். பொழுதுபோக்குப் பதிவு என்றால் கண்டிப்பாக நான் இதைக் கேட்க மாட்டேன்.

நன்றி..

பிரகாஷ் (எ)சாமக் கோடங்கி