Saturday, May 29, 2010

எலும்புத்துண்டுக்கு கிராக்கி...

வணக்கம் நண்பர்களே..

எங்க வீட்டைச் சுற்றிலும் எங்கம்மா வளர்க்கும் நாய்கள்.. நல்லது தான்.. வீட்டின் முன் பக்கம், பின் பக்கம் என எல்லாப் பக்கங்களிலும் நாய்கள் தான்.வீட்டுக்கு அருகில் ராத்திரியில ஒரு பய நெருங்க முடியாது. அட இவ்வளவு ஏன்.. ஒரு பதினொரு மணிக்கு மேல வீட்டுப் பக்கம் போகனுமுன்னா நானே தூரத்தில் நின்னுகிட்டே சத்தம் போட்டுகிட்டே தான் வரணும்.. அப்பத்தான் அடையாளம் கண்டு பிடிப்பார்கள் எங்கள் வீட்டு காவல்காரர்கள்.ஆனா அவங்களுக்கு உணவு கொடுப்பது ஒண்ணும் பெரிய செலவில்லை. விலைகுறைவான அரிசியில், சட்டி நிறைய ஆக்கி வைத்து விடுவார் என் அம்மா.. அப்புறம் ஞாயிற்றுக் கிழமையோ அல்லது எப்போது மாமிசம் சமைத்தாலும் அவர்களுக்குக் கொஞ்சம் எலும்புத்துண்டு.. அதுவே அவர்களுக்கு ஏதோ பெரிய விஷயம் கிடைத்த மாதிரி..

எங்க பாத்தாலும் பெரிய பெரிய நிறுவனங்கள், டிப் டாப்பாக ஆடை அணிந்து கார்களில் வந்திறங்கும் பெரிய புள்ளிகள், காஷுவலாக ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிந்து கொண்டு பைக்குகளில் பந்தாவாக வலம் வரும் இளசுகள், நாள் முழுதும் விடாமல் குளிர்விக்கப்படும் கட்டிடம், சிறிய வயதில் நிறைய சம்பளம்,அதனால் அவைகளை ஜாலியாக செலவு செய்யும் ஒரு கூட்டம் என்று எல்லோரையும் ஈர்க்கும் ஒரு வசீகரம்... நான் என்ன சொல்ல வருகிறேன் என்று இப்போது புரிந்திருக்கும்... ஆமாம் இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களைத் தான் குறிப்பிடுகிறேன்(MNC).

அழுக்கு பட வாய்ப்பே இல்லை, வியர்வைச் சுரப்பிகளுக்கு வேலை இல்லை, சனிக்கிழமைகளில் வேலையே இல்லை. பார்த்தால் யாருக்குத் தான் பொறாமை தோன்றாது..? கஷ்டப்பட்டு வெயிலில் இறங்கி உடல் உழைப்பைக் கொட்டி வேலை செய்பவர்களுக்கோ சொற்பக் கூலி. சாயங்காலம் வந்தால் உடல் வலி தான் மிச்சம். சாயங்கால வேளைகளில் ஷாப்பிங் மால், தியேட்டர், ரெஸ்டாரன்ட் என்று ஜாலியாகக் காலம் கழிப்பவர்களைக் கண்டால், கொஞ்சம் என்ன, ரொம்பவே வயிறு எரியத்தான் செய்யும்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் தொகை மிகவும் குறைவு(உலகப் போர்களில் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்து). வெகு சில மக்கள்,ஆனால் நிறைந்த வளங்கள்.. அதனால் நிறுவனங்களுக்கு ஆட்கள் நிறைய தேவை. அதனால், மனித வளத்திற்கு மதிப்பு கூடுகிறது(demand).அதுவும் அவர்களை மிக முக்கிய பணிகளில் அமர்த்த வேண்டிய நிலைமை. அவர்களுக்கும் சிறிய சிறிய எடுபிடி வேலைகள் செய்ய விருப்பம் இல்லை. நல்ல வேலைகளில் அமர்ந்து கொண்டு அளவான வேலை செய்து, நிறைய சம்பாதித்து, நிறைய செலவு செய்து, நிறைய நாட்கள் விடுப்பு எடுப்பதுடன், வருடத்திற்கு, மூன்று அல்லது நான்கு நீண்ட விடுப்புகள் எடுத்து, வேலை-வாழ்க்கை சமநிலையை சரியாக அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகள் இவர்கள்..(வெளிநாட்டு கஸ்டமர்களிடம் வேலை செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்). மக்கள் செறிவு குறைவாக உள்ள நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்குரிய வேலைகளில் இருந்தால் தான் அந்த நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.

என்னடா இவன்,. ஒவ்வொரு பத்தியிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளரீட்டு இருக்கான்னு நீங்க கேக்குறது புரியுது. ஆனா சம்பந்தம் இருக்கு. ஒரு நாட்டின் மிக முக்கிய பணிகளில் அனைத்திலும், அந்த நாட்டுக் குடிமக்கள் இருக்கிறார்கள். ஆனால் நிறுவனம் என்று ஒன்று இருந்தால், மிக முக்கிய பணிகளும் இருக்கும்,அப்புறம் அதை விட நிறைய எடுபிடி வேலைகளும் இருக்கும்.
அதாவது டாக்குமண்டேஷன்,அப்புறம், 24 x 7 வாடிக்கையாளர் சேவை,அப்புறம்,விற்பனைக்குப்பின் வரும் பிரச்சினைகளைச் சேகரித்தல், தொகுத்தல்,அப்புறம், முதல்தரப் பணியாளர்களுக்கு உதவுதல் இதுமாதிரி கண்ணுக்குத் தெரியாத நிறைய பணிகள் இருக்கு. இதையெல்லாம் யார் செய்யுறதாம்...? அதற்குத் தான் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் வந்திருக்கின்றன.. முதலில் நமது நாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தன.. இப்போது அந்நாட்டு நிறுவனங்களே நேரிடையாக இங்கே இறங்கி விட்டனர்.கோர் பிசினஸ் என்று சொல்லப்படும், முதல்தர பணிகள் (அராய்ச்சி,திட்டமிடுதல்,வடிவமைத்தல்(design),மற்றும் வளர்ச்சிப்பணிகள்)யாவும் அவரவர்கள் நாட்டில் தான் இயங்கும்(மக்கா வெவரமாத்தேன் இருக்காக பயபுள்ளைக..). அனால் இந்த மிச்ச மீதி விஷயங்க இத்யாதி இத்யாதி எல்லாத்தையும் இங்க கொண்டுவந்து இறக்கீடுறாங்க.. அட ISRO வே அதிகமா புதுமையா எதுவும் கண்டுபிடிப்பதில்லையாம்.. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைத் தான் இன்னும் தூசு தட்டிக்கிட்டு இருக்காங்களாம்..

படிக்கும்போதோ, அல்லது படிச்சு முடிச்ச உடனேயோ வலையைப் போட்டுடறானுக.. நேர்காணல்ல கேக்குற கேள்வியைப் பாத்தா எண்ணமோ அணு விஞ்ஞானத்துக்கு ஆள் எடுக்குற ரேஞ்சுக்கு இருக்கும்(ஆறேழு ரவுண்டுகள் வேற). குழு உரையாடலில்(குரூப் டிஸ்கஷன்) போட்டி போடும் அனைவரையும் பார்க்கும்போது அடேங்கப்பா.. இந்தியாவைக் காப்பாத்தப் போகும் தூண்கள் இவிங்கதான் போல ன்னு இருக்கும்.எதுக்குப்பா...? இந்த எடுபிடி வேலைகள் செய்யத்தான்..
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முதன்மைப் பணியை இந்தியாவுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று..? அப்போ இளிச்சவாயன் யார்..? இந்தியாவா..?அரசியல் வாதிகள் இதில் கெட்டிக் காரர்கள், ஒரு கம்பெனி இந்தியாவில் வந்திறங்குவதற்கு முன்னமே, இன்னார் இன்னாருக்கு இவ்வளவு சேர வேண்டுமென்று லஞ்சப் பட்டியல் அவர்களுக்குச் சென்று சேர்ந்து விடும். எங்கே தள்ளினால் எங்கே காரியம் நடக்கும் என்று பன்னாட்டு நிருவனர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

நம்ம ஆளுகளும், சம்பளம் கெடைச்சா போதுமுன்னு படையெடுக்க ஆரம்பிச்சிடறோம். ஆமாம்ப்பா. அதுக்குதான் இந்தப் போராட்டமே.. விவசாயிகளும்,பொண்ணு விளைவிச்சுத் தந்த மண்ண வித்து,பயபுள்ளைகளைப் படிக்க வெச்சு,இந்த வேலைகளுக்கு அனுப்பி வெக்கிறாங்க.விவசாயம் அழிச்சிட்டு வருது.இது போனா எல்லாம் போச்சு.நமது இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான,இந்தியாவின் முதுகெலும்பைத் தாங்கிப் பிடிக்கும் பல தொழில்கள் தினந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன.

அப்படித்தான் சம்பளம் வாங்குறானே சும்மா இருக்குறானா...? புலியைப் பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதையா வெளிநாட்டுக் காரன் மாதிரியே தானும் தாம் தூமுன்னு செலவு செய்யுறான். அடுத்தவனுக்கும் ஆசையைக் கிளப்பி விடுறான். அவனால முடியும் அப்படீங்கறதுக்காக ரெண்டு லட்ச ரூவா நிலத்தை இருபது லட்சத்துக்கு வாங்கி நடுத்தர மக்கள் அடிவயித்துல அடிக்கிறான். பின்ன.. ஒரு எடம் அதிக வேல போச்சுன்னா போதுமே.அந்த ஏரியாவே அவுட். ஆக இந்தியா எங்க தான் போய்க்கிட்டு இருக்கு..?

சிறு சிறு நாடுகள் எல்லாம் அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்போது, நண்பர்களே, பன்னாட்டு நிறுவனங்களில் புரியும் யாரும், நான் பந்தாவாக சந்தோஷமாக வாழ்கிறேன் என்று பீற்றிக் கொள்ளாதீர்கள்.. நாமும் அன்றாடங்காட்சிகளே.. இந்தியா முன்னேறுகிறது என்று சொல்வது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. திட்டமிடுதலில் இந்தியா பின்தங்கியே உள்ளது. சுயமாக சிந்தித்து நாட்டை முன்னேற்றும் எண்ணம் இங்கு மக்களுக்கும் இல்லை, அரசியல்வாதிகளுக்கும் இல்லை. அவரவர்கள் கிடைத்தற்கேற்ப பதுக்கிக் கொள்கிறார்கள். நல்ல மூளை கல்லூரி வரை மட்டுமே உபயோகப்படுத்தப் படுகிறது.. அதற்கு மேல்..?

ஜெர்மனைச் சேர்ந்த சமூக சேவையாளர் கேட்டார், "இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நிறைய பொறியியல் கல்லூரிகள் உருவாகியிருக்கிறதே.." என்று. நான் பெருமையாகச் சொன்னேன்.. "ஆம் இந்தியா நிறைய பொறியாளர்களை உருவாக்குகிறது" என்று.. அவர் கேட்டார், "அனால் இந்தியாவில் புது வடிவமைப்புக்கான காப்புரிமை (new design patent)பெறுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதேன்..?" என்று.. அவருக்கு விடை தெரிந்ததால், உடனே சன்னமாக சிரித்தார்.. நம்ம ஆளுகளுக்கு இன்னும் தெரியல.. மூளையை சரியான வழியில் உபயோகித்தால் தானே நம் நாடு வளரும்..? மனித வளத்தை வெளிநாட்டுக்கு அடகுவைக்காமல், மக்களுக்கேற்றவாறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டிய தலையாய கடமை அரசுக்கு உள்ளது.

ஆக இப்போதைக்கு இந்தியாவைப் பாத்து வெளிநாட்டுக் காரர்கள் யாரும் கவலைப் படத்தேவை இல்லை.. அவர்கள் அவர்களது நாட்டைச் செம்மைப் படுத்தும் வேலையைத் தொடரலாம்.. அவர்களது மிச்ச மீதி வேலையைச் செய்யத்தான் இங்கு நிறைய பேர் இருக்கிறோம்.. அதாவது அவர்கள் போடும் .....(தலைப்பு )..... இந்தியாவில்..


இப்போது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்..

நன்றி....

Sunday, May 16, 2010

மனமூடி - 2


உலகத்திலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃப்ஃபெட் பற்றி சமீபத்தில் எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.. சற்று ஆச்சிரியமான மனிதர் தான். அந்த மின்னஞ்சலில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், அவர் இன்றுவரை தங்கியிருப்பது ஒரு சிறிய வீடாம்... அதுவும் அவருக்கு திருமணமாகும்போது வாங்கியதாம்.

நாமெல்லாம் கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கியதும், நம் மனதுக்கு முதலில் தோன்றுவது, நமக்கென்று ஓர் சொந்த வீடு. ஆனால் அந்த ஆசை அதே அளவில் இருப்பதில் தவறில்லை. சம்பாத்தியம் கொஞ்சம் அதிகமாகும்போது, அதே சிறிய வீடு நமக்கு போதுமா...? உண்மையில், தேவைக்கேற்ப நம் மனது ஆசைப்படுமானால் அந்த வீடு போதுமானதே. அனால் நம் மனது அதை ஒப்புக்கொள்ளாது.. நமது அந்தஸ்துக்கு(?!) ஏற்ப ஒரு வீட்டைத் தேடச் சொல்லும்.. இது தான் நண்பர்களே நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகும் மனமூடி.

இந்தச் சிறிய வீட்டில் அவர் இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது வாரன் பஃப்ஃபெட் கூறிய பதில் இதுதான். நான் இருக்கும் நான் இருக்கும் வீட்டிலேயே எனக்குத் தேவையான எல்லாம் இருக்கிறது... இந்த வரிகளைக் கொஞ்சம் கவனியுங்கள் நண்பர்களே... போதும் என்ற சொல் நம் உள்மனதைப் பொறுத்தது.. வேண்டும் வேண்டும் என்று சொல்வது நாமாக நம் மனதுக்கு போட்டுக் கொண்ட மூடி... அதற்குச் சொல்லப் படும் சில காரணங்கள் நியாயமானவை. ஆனால் பல காரணங்கள் சப்பைக் கட்டே...

சமீபத்தில் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார், நாம் சில இடங்களில் கவுரவத்திற்காகவாவது சில விஷயங்களைக் கடை பிடிக்க வேண்டும் என்று... அதாவது திருமணங்களுக்குச் செல்லும்போது தங்க நகை அணிந்து செல்ல வசதி இல்லை என்றால் கவரிங் நகை வாங்கி அணிந்து செல்லலாம் என்று.. இதை ஒத்துக் கொள்ளலாம். பல இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றால் மரியாதை இருப்பதில்லை.. வாடகைக்காவது கார் வைத்து அங்கே செல்லலாம் என்றும் சொல்லி இருந்தார்கள்.

விஷயத்தைச் சற்று உற்றுப் பார்ப்போமானால், அங்கே வருபவர்களில் பெரும்பாலானோர் கவரிங் நகை அணிந்தவர்களாக இருப்பார்கள். பெரும்பாலானோர் வாடகைக் காரில் வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஏனென்றால் நம் சமூகமே ஒரு பெரிய வீண்கவுரவத்தில் கட்டுண்டிருக்கிறது. நம்மிடம் இருப்பதை பெருமையாக நினைக்கும் பட்சத்தில் (வாரன் பஃப்ஃபெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்) இந்த பிரச்சினையே இல்லையே.. நமக்காக எப்போது வாழப் போகிறோம்..?

நான் என்னுடைய பைக்கில் செல்வதையே பெருமையாக நினைக்கிறேன்.. பல இடங்களில் ஹெல்மெட்டுடன் செல்வதை சிலர் கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள்... எனக்கு அப்படித் தோன்றவில்லை... நம்மிடம் உள்ள பொருளை மிகவும் நேசிக்கும்போது அது மற்றவர்களின் பொருட்களை விட நமக்குத் தரம் கூடியதாகவே தோன்றும்.உங்கள் தேவைக்காக வாங்குங்கள்.. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாங்காதீர்கள்.. உண்மையைச் சொல்லப் போனால் நம் அனைவரிடமும் ஒருவகை மனமூடி இருக்கவே செய்கிறது..

உதாரணத்திற்கு வெயிலில் செல்கிறோம்.. சூடு மண்டையைப் பிளக்கிறது.. கையில் இருக்கும் கைக் குட்டியைத் தலையில் போட்டுக் கொள்ளலாம்.. அனால் நம்மில் சிலர் அதைச் செய்ய மாட்டோம்.. காரணம் தலை கலைந்து விடும் அல்லது ரோட்டில் போகிறவர்கள் நகைப்பார்கள். கடைசியில் அவர்கள் எல்லாரும் சிரித்து விட்டு போய் விடுவார்கள். அவர்களா வந்து நம் மண்டை சூட்டை தணிக்கப் போகிறார்கள்...? இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

இன்னும் நமக்குள் இருந்து கிழித்து ஏறிய வேண்டிய நிறைய மனமூடிகள் உள்ளன. ஆடம்பரம் தவிர்த்து தேவைக்கேற்ப வாழ்வதே உண்மையான கவுரவம் என்பதை வாரன் பஃப்ஃபெட் பற்றிய மின்னஞ்சல் எனக்கு உணர்த்தியது. ஒரு குடும்பத்துக்கு எது தேவையோ அதை வைத்துக் கொண்டு வாழும்போது நல்ல மனிதனாகலாம். கையில் இருக்கும் சிறு பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போது அவர்கள் தானாக மாமனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.

என் நண்பன் அந்த மின்னஞ்சலைப் படித்து விட்டு சிரித்தான். நம்மை எங்கே இது போல வாழ விடுகிறார்கள்.. அண்ணன், தம்பி, மனைவி, சமூகம் என்று எல்லா காரணிகளும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை வேகமாக ஓட வைக்கிறார்கள். சம்பளம் ஏற ஏற செலவுகளையும் பெருக்கிக் கொண்டே போகிறார்கள்.. எப்போதும் தேவை குறையப் போவதில்லை என்றான். ஆம் நண்பர்களே.. ஒருவர் மனமூடியை மட்டும் கழற்றிப் பெரிய பயன் இல்லை. குடும்பத்தலைவன் இதை மற்றவர்களுக்கும் உணர்த்தி மற்றவர்களை ஒப்பிட்டு வாழ்தலை முடிந்தவரை தவிர்க்கலாம்.

மனமூடி இருக்கும்வரை தேவைகள் என்றுமே நிற்கப் போவதில்லை. நிம்மதி என்பது மூடி அணியாத மனத்திடமே உள்ளது என்பது என் கருத்து. உங்கள் கருத்து...?

Friday, May 7, 2010

முதுகெலும்பு....


அனைவருக்கு வணக்கம்..

சுற்றுச்சூழல் பற்றிய விஷயங்களை மட்டும் தான் பொதுவாகப் பதிந்து வந்தேன்...அதன் மூலம் கிடைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..(எனக்குத் தெரியாமலேயே என்னைப் பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டி விட்டது..)

இந்தப் பரந்து விரிந்த பதிவுலகில் பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி என்பவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எனக்கான முகவரியைத் தந்த என் வலை நண்பர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகளை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்..

அரசியலுக்குள் நுழையாமலேயே எழுதுகிறேன் என்ற நினைப்பில் இருந்து விட்டேன். சுற்றுச் சூழல் என்கிற விஷயம் மனிதர்களையும் உள்ளடக்கியது.. மனிதன் என்று வந்தாலே அங்கு அரசியலும் வந்து விடுகிறதல்லவா...இப்போது தான் உணர்கிறேன்...

நேற்று முடி வெட்ட சவரக் கடைக்குச் சென்றிருந்தேன். போதையில் இருந்த இரண்டு பேர் அங்கே பேசிக்(உளறிக்)கொண்டிருந்தார்கள்..

"ரொம்ப நாளா கட்சிக்காகப் பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்.. தலைவர் கண்டுக்கவே மாட்டேங்கறார்... தமிழ் மாநாடு முடியட்டும்.. செயலாளர் பதவி கேட்டிருக்கேன்.. நாமளும் கொஞ்சம் காசு பாக்கணுமில்ல...."

"என்னப்பா நீயும் ரொம்ப காலமா இதத்தான் சொல்லிக்கிட்டு இருக்கே...இன்னும் கீழே தான் இருக்கே...."

அதற்கு மேற்கொண்டு அவர்கள் எங்கெங்கோ போய், அவர்கள் வைத்திருக்கும் கீப்புகளின் எண்ணிக்கை வரை பேச ஆரம்பித்து விட்டார்கள்... வாடிக்கையாளர்கள் என்பதால் முடி வெட்டுபவருக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.. சிலர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தனர்..

முடியோடு சேர்த்து அவர்கள் பேசியதையும் அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன்..

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்பவை.. கட்சி என்பது எப்படி உருவாகிறது,அதில் அங்கத்தினர்கள் யார், அவர்களின் சிந்தனைகள் என்ன.. என்பதுதான்..

இன்றைய சூழ்நிலையில் கட்சியில் சேருபவன் கண்டிப்பாக அந்தக் கட்சியின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவனாக இருக்க மாட்டான்.. ஒன்று அவனுக்குத் தனிப்பட்ட முறையில் பயன் தரும் வகையில் அந்தக் கட்சி ஏதேனும் செய்திருக்க வேண்டும் அல்லது கூடியிருப்பவர்களால் கொண்டு சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்.


ஒருவனைத் தலைவன் என ஏற்றுக் கொண்டால் பின்னர் அவன் செய்வது அனைத்தும் நல்லதாகவே தோன்றும். அவன் எதிரிகள் யாவரும் தனக்கும் எதிரிகள் ஆவர்.இது தொன்று தொட்டு நடப்பது தான்.(நடிகர்கள்- ரசிகர்கள் விஷயத்திலும் இதையே நாம் பார்க்கிறோம்) பின்னர் கட்சிக்காக மாங்குமாங்கென்று உழைக்க ஆரம்பிக்கிறான்.. தான் செய்யும் தொழிலை விடுத்து கட்சி, பொதுக்கூட்டம் என் அலைகிறான். கட்சி இதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஏனெனில் ஆறாம் அறிவைப் பயன்படுத்துபவன் கட்சிக்கு உபயோகப் படமாட்டான்..(கவனிக்கவும் நான் படித்தவன் என்று சொல்லவில்லை). அவனுக்கு மேலும் மேலும் பிரியாணி, தண்ணி, போகும் இடம் எல்லாம் கைச்செலவு என்று வாரி இரைக்கிறார்கள்.(நா##$@க்கு எலும்புத்துண்டு ஒண்ணும் பெரிய செலவில்லையே..)

அப்படி தன்னை முழுமையாக இந்தத் தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன் பின்னர் எதிர்பார்ப்பது என்ன..? கட்சியில் தான் உழைத்ததற்கான பலன்.. கோஷம் போட்டதற்கான கூலி.. கட்சிக் கொடி கட்டியதற்கான கைமாறு.. எத்தனை நாள் தான் கோஷம் போட்டுக் கொண்டே இருப்பது.. அடுத்தடுத்த பதவி வேண்டாமா..(எல்லாத் தொழிலிலும் நாம் எதிர்பார்ப்பது தானே...?)தனக்கு மேல் உள்ளவர்கள் சம்பாரித்து கொழுத்ததைப் பார்த்து தான் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன...?

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் தமிழக அரசியலில், ஏன் இந்திய அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளின் மொத்தத் தொண்டர்களில் 98 சதவிகிதம் இப்படிப் பட்டவர்களாகத் தான் இருப்பர்.உண்மையான தொண்டர்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்றால் "இனிமேல் நம் கட்சிக் கூட்டத்திற்காகப் பணியாற்றும் எந்தத் தொண்டருக்கும் கைச் செலவுக்குக்குக் காசோ, குடிக்க சாராயமோ,பிரியாணியோ தரப்பட மாட்டாது..."என்று அறிவித்தால் போதும்.

இப்படி உருவாகும் கட்சியில் "மக்கள்" என்பவர்கள் எங்கே வருகிறார்கள்.. "கட்சி", "கூட்டம்","பிரியாணி","பதவி", "பணம்"... இவைகள் தான் வருகின்றன..

அடிபட்டு உதைபட்டு மேலே வருகின்ற ஒருவன் அந்தப் பகுதி மக்களுக்கு நல்லது செய்வானா..?இல்லை அவன் மேலே வரப் பாடுபட்ட அவனுடைய கட்சித் தொண்டர்களுக்கு நல்லது செய்வானா..? இதில் ஜாதி சொந்தங்கள், சிபாரிசு என பல வேலைகள் வேறு..அவன் சொந்த பந்தங்கள் அனைவரும் அவன் பதவியை உபயோகப் படுத்திக் கொள்வர்..

படித்தவன், ஆறாம் அறிவு வேலை செய்பவன் எவன் கொளுத்தும் வெயிலில் இறங்கி வேலை பார்ப்பான்..?கை கட்டிக் கொண்டு போய் விடுவான்.. அவனைப் போன்றவர்களால் கட்சி எப்படி வளரும்..? முதுகெலும்பு இருப்பவன் கட்சிக்கு எதற்கு....?

சரியாகப் படிக்காமல், கெட்ட வழிகளில் சென்று, சம்பாரிக்க வக்கில்லாமல், சக நண்பர்களால் கட்சியில் சேர்க்கப் பட்டு, மாநாடு நடக்கும் ஊர்களுக்கெல்லாம் கூட்டி செல்லப்பட்டு, பதவி கிடைத்து, காசு பார்த்து, இன்று நம் முன்னேயே பந்தாவாக ஏ சி கார்களில் பயணிக்கிறார்கள்.. என்ன ஒரு அருமையான தொழில்..

இப்படிப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் தான்.. தமிழை வளர்க்கிறோம், நாட்டு நலனுக்காகப் பாடுபடுகிறோம்.. இலவசங்கள் தருகிறோம், உங்கள் தொகுதிக்கு நல்லது செய்கிறோம், உங்களுக்காக அல்லும் பகலும் போராடுகிறோம் என்று தங்கள் தந்திரங்களை நம்மிடம் அவிழ்த்து விடுகிறார்கள்.. அவன் சம்பாரிக்கும் காசை அவனுக்குக் கீழ் இருப்பவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலைமை. அடுத்த தேர்தல் செலவுகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டிய நிலைமை. அவனாக மனமுவந்து நல்லது செய்ய நினைத்தாலும், அவனாக அவனைச் சுற்றி கட்டிக் கொண்ட இந்த வளையம் அவனை விடாது.. கட்சியில் இருப்பவன் மக்கள் நலனை நினைப்பது உண்மையில் சாத்தியமா என்று இப்போது சொல்லுங்கள்..

இல்லுமி தன்னுடைய பதிவில் கேட்டிருந்தார்.. "என்ன இழவுயா நடக்குது தமிழ்நாட்டுல?"

இதுதானுங்க நடக்குது..

தமிழ்நாட்டோட எதிர்காலமே இந்தத் தொண்டர்களை நம்பித்தான்..

நன்றி..
பிரகாஷ்(எ)சாமக்கோடங்கி