Saturday, March 27, 2010

தண்............

தலைப்பைப் பற்றி கடைசியில் பார்க்கலாம்..

உக்கடத்தில் இருந்து சாய்பாபா காலனி வர்றதுக்கு உள்ளயே கிட்டத்தட்ட ஏழெட்டு சிக்னல்..ஒவ்வொரு சிக்னலிலும் கிட்டத்தட்ட மூணு நிமிஷம்.. நண்பகல் பன்னிரண்டு மணி.. கொளுத்துற வெயில்.. சிக்னல்ல நிக்கிற வண்டிங்க எல்லாம் மானாவாரிக்கு புகையடிக்க, என்ஜின் சூடேல்லாம் ஒண்ணாச் சேந்து ஒடம்புத்தோலை பதம் பார்க்க, கண்ணைக் கூட தொறக்க முடியாம தக தகன்னு இருக்க, தீக்குண்டத்துல நிக்க வெச்ச மாறி ஒரு பீல்..

உங்களால உணர முடியுதா...?

இந்த ரோட்டுல மருந்துக்கு கூட ஒரு மரம் இல்ல...எங்க பாத்தாலும், கட்டடங்கள், வானளாவப் பறக்கும் புழுதி மண்....

இனி மரங்கள நட்ட வெச்சு, வளர்த்து, குளிர்ச்சிய கொண்டு வந்து, அப்புறம் பூமிக்கு நல்லதெல்லாம் செஞ்சு மாத்துரதுக்குள்ள கொஞ்ச காலம் ஆகும்..

ஆனா அதுக்குள்ள நாம பல நல்ல விஷயங்கள இழந்தரலாம்.. அதனாலதான் அவசர அவசரமா இந்த பதிவு..

ஆ.. எங்க விட்டேன்.. ஆங்.. சிக்னல்ல விட்டேன்..

சாய்பாபா காலனிய தாண்டி மேட்டுப்பாளையம் வர்ற வழியெல்லாம் நூறடிக்கு ஒரு தருபூசணிக்கடை, இருநூறு அடிக்கு ஒரு இளநீர்க் கடை, பேக்கரி எல்லாம் குளிர் பானங்கள், அங்கங்கே பதநீர்... மனுஷன் எப்படியும் பொழச்சுக்குவான், தன்ன எப்படியாவது காப்பாத்திக்குவான்... இத்தன பிரச்சினைக்குக் காரணமே நாம தான்.. அதை உணராமல், தற்காலிகத் தீர்வுகளைத் தேடிக்கிறோம்.. ஆமா.. பின்ன இந்த இளநீர், தருபூசணி எல்லாம் நம்மள எத்தன நாளைக்கு காப்பாத்தும்....?

ஆனா இந்த பிரச்சினைக்கு எந்த விதத்திலும் காரணம் ஆகாமல், ஒரு பாவமும் அறியாமல், ஏன் இப்படி நடக்குதுன்னு கூட தெரியாமல் ஒரு சில ஜீவன்கள் செத்து மடிகின்றன..

அவைகளை காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்..கண்டிப்பா முடியும்.. முடியாத காரியங்களைப் பற்றி எப்போதுமே நான் சொன்னதில்லை...

ஒரு குவளை தண்ணீர்...




ஆம் ஒரு குவளை தண்ணீரை உங்கள் வீட்டு வெளிச் சுவற்றிலோ, அல்லது மொட்டை மாடியிலோ வையுங்கள்.. சூட்டில் அலைகின்றன பறவைகள் மற்றும் நம்மைச் சுற்றி வாழும் விலங்கினங்கள்..வாயைத் திறந்து வைத்துக் கொண்டு வேக வேகமாக உடல் உஷ்ணத்தை வெளியேற்றப் போராடுவதை நீங்கள் கண்கொண்டு பாருங்கள்.. தருபூசணி வாங்க அவைகளிடம் காசு இல்லை, இளநீரை உடைத்து கொடுக்க ஆளில்லை, எந்தக் குளம் குட்டைகளிலும் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை.. அவைகளின் நிலை யாருக்கும் புரிவதில்லை..

ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் அனைவரும் 'மனிதம்' உள்ளவர்கள் என்று நான் கருதுகிறேன்.. அப்படி இருக்கும் பட்சத்தில், நாளை குறைந்தது ஒரு ஐம்பது குவளை தண்ணீராவது இந்த சிறு குருவி காக்கைகளுக்கு கிடைக்கும்(ஐம்பது - சும்மா வழக்கமாக என் பதிவைப் படிப்பவர்களின் எண்ணிக்கை).

குவளைகளை யாராவது அபேஸ் பண்ணி விடுவாங்கன்னு நெனைச்சீங்கன்னா, ஒரு கையளவு மணல சுவர் மேல வெச்சு, அதுல தேங்காய் மூடிய நிக்க வெச்சு அதுல தண்ணி வெக்கலாம்...

எங்க வீட்டுல பாருங்க...



மனமூடி அடுத்த பதிவில், மனிதாபிமானம் இந்தப் பதிவில்..

அப்புறம் இந்தத் தலைப்பைப் பத்தி நீங்களே ஏதாவது சொல்லீட்டுப் போங்களேன்...

நன்றி...

Monday, March 15, 2010

மன மூடி


இந்த மாசம் உங்களோட ப்ரொடக்டிவிட்டி கொஞ்சம் கம்மியா இருக்கே... இஸ் தேர் எனி வால்யுபில் ரீசன்..?

அது வந்து இந்த மாசம் வந்த டாஸ்க் கொஞ்சம் கஷ்டம்.. ஸ்டடி பண்ண டைம் ஆயிடுச்சு... குய்க்கா பண்ணினா க்வாலிட்டி பாதிக்கப் படும் அதனாலதான்..

நோ நோ நோ.. க்வாலிட்டி தான் ரொம்ப முக்கியம்..கம்பெனி அதுக்குத் தான் உங்களுக்கும் எனக்கும் சம்பளம் தருது.. பட் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணுங்க.. எந்த எடத்துல ரொம்ப டைம் செலவாகுதுன்னு கவனிங்க... வேணும்னா நீங்க எங்கிட்ட எப்ப வேணும்னா வந்து டிஸ்கஸ் பண்ணலாம்.. நான் என்னோட யோசனைகளை உங்களுக்கு சொல்லுறேன்..

டோன் தின்க் தட் ஐ அம் கம்பாரிங்.. பட் உங்க கூட வொர்க் பண்ற கலீக்ஸ் என்ன செய்யிறாங்கன்னு நீங்க கவனிக்காட்டி, ராங்கிங்ல நீங்க கீழ போய்டுவீங்க.. கவனமா இருங்க.. உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்...

தான்க்யு.. ஐ வில் டேக் கேர்..

சமீப காலமா உங்க வளர்ச்சி நல்லா இருக்கு.. இந்த சின்ன விஷயம் உங்க பெர்பார்மான்ஸ் குறைஞ்சிடக் கூடாது.. டூ யு அண்டர்ஸ்டான்ட் மை பாயிண்ட்...?
ரொம்ப வொர்க் பண்ண வேண்டாம்.. ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க.. குட்லக்.. ஹாப்பி வீக் என்ட்...

-------------------------------------------------------------------------

என்னடா ரேங்க் வாங்கியிருக்க எரும மாடு...

அது இல்ல டாடி.. இந்த ஹால்ப் இயர்லி சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..

தண்டச் சோறு.. படிக்கிரதத் தவிர உனக்கு என்னடா வேல...?நீ கெட்ட எல்லா இழவையும் உனக்கு வாங்கிக் குடுத்துருக்கிறேன் இல்ல...? சாயங்காலம் வந்தா நல்லா திங்க வேண்டியது தூங்க வேண்டியது.. சோம்பேறி....

பக்கத்து வீட்டு சுரேஷ பாருடா.. அவனும் உன்ன மாறி தானே.. எப்படிப் படிக்கிறான்..? அவனப் பாத்தும் உனக்கு ஏண்டா புத்தி வரல...?

சாரி டாட்..

என்னடா சாரி... செய்யரதையும் செஞ்சுட்டு.. நானும் கொஞ்ச காலமா உன்ன வாட்ச் பண்ணீட்டு தாண்டா இருக்கேன்.. உனக்கெல்லாம், சொல்ற மாறி சொன்னாத்தாண்டா புத்தி வரும்..


-------------------------------------------------------------------------

சாரியில யு லுக் சோ பியூட்டிபுல்..

தான்க்யு.. நீங்க இன்னைக்கு எத்தன மணிக்கு கிளம்புறீங்க..?

5 மணிக்கு.. ஏன் கேக்குறீங்க..?

உங்களுக்கு சிரமம் இல்லைன்னா.. எனக்காக ஒரு ஒருமணிநேரம் வெயிட் பண்ண முடியுமா..? நான் இன்னைக்கு வண்டி கொண்டு வரல.. என்ன எங்க அப்பார்ட்மென்ட்ல டிராப் பண்ண முடியுமா...?

நோ ப்ராப்ளம்.. இதுக்கு ஏன் சுத்தி வளைக்கிறீங்க..? ஐ அம் அட் யுவர் சர்வீஸ்...

இந்த பைல்ஸ் எல்லாம் பாத்து முடிச்ச உடனே கிளம்பிடலாம்...

ரொம்ப இருக்கா..? நான் வேணா உதவி செய்யட்டுமா...? என் வேல எல்லாம் முடிஞ்சிடிச்சு..

சோ நைஸ் ஆப் யு... இத மட்டும் கொஞ்சம் பார்த்துக் குடுங்க..

கண்டிப்பா...

--------------------------------------------------------------------------

ஏண்டி அங்க என்ன பேஷன் ஷோ'வா நடக்குது, எப்ப பாரு சாரிய கட்டிக்கிட்டு, ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு சிங்காரிச்சிக்கிட்டு.... வேலைக்குத் தானே போற...?

சரிங்க.. சாயங்காலம் ஒரு ஒருமணிநேரம் முன்னாடி வாங்களேன்.. துணிக் கடைக்குப் போகலாம்.. நல்ல சாரி எடுத்து ரொம்ப நாள் ஆச்சு..

ஏன்... பீரோ புல்லா உன் துணி தான் கெடக்குது.. அதை எல்லாம் எடுத்துப் போட வேண்டியது தானே...?எப்பவும் புதுசு புதுசாவே எடுத்துக்கிட்டு இருந்தா, பழச எல்லாம் யாரு போடறதாம்..? ஆபீஸ்ல நான் என்ன வேல இல்லாம இருக்கேன்'ன்னு நினைச்சியா..?மனுஷன் அங்க தல போற டென்சன்ல ஓடிக்கிட்டு இருக்கான், இவ என்னடான்னா... இன்னைக்கேல்லாம் வர முடியாது இன்னொரு நாள் பாக்கலாம்..

ஏங்க இந்த துணியையாவது டைலர் கடையில குடுத்துட்டு போங்களேன்..

வந்தேன்னா பாரு...

------------------------------------------------------------------
மேற்கண்ட உரையாடல்கள் நடக்கும் களம் எங்கே என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே விஷயம், வெவ்வேறு களங்கள். உள்ளூரப் பாசம் அனைவரிடமும் இருக்கிறது.. ஆனால் அது சில சமயம் வெளிப் படாமலேயே போய் விடுகிறது.. அந்த உறவில் ஒரு இழப்பு ஏற்படும்போது பின்னர் அது ஆறாத் தழும்பாகிக் கொல்லும்.
உள்ளூர இருக்கும் பாசத்தை வெளிக்காட்டப் பழக்கி அதையே ஒரு வழக்கமாக்கிக் கொள்ள முடியாதா என்ன..? வாழ்க்கையின் சாராம்சமே அன்பும் பாசமும் தான். பணம்,பொருள், ஆடம்பரம், வேலை எல்லாமே இந்த அன்பும் பாசமும் நீடித்திருக்க நமக்குத் தேவையான உபகரணங்கள். அவ்வளவே. ஆனால், இந்த உபகரணங்களே நம் வாழ்க்கையின் அடி நாதத்தை அழிக்க நாம் விடக் கூடாது..

தினமும் சில கனிவான வார்த்தைகள், நலம் விசாரித்தல், அக்கறை காட்டுதல், நேரம் செலவிடுதல் போன்றவை கட்டாயம் தேவை.அலுவலகத்தில் சாத்தியம் எனும்போது வீட்டில் சாத்தியம் இல்லையா என்ன..?

அலுவலகத்தில் நாவில் தேனூர பேசுபவர்கள் பலரின் முகங்கள் வீட்டில் இப்படித்தான்..

அலுவலகத்தில் நாம் கற்கும் ஸ்ட்ரெஸ் மெனஜ்மென்ட், இன்ப்லுயன்சிங் ஸ்கில்ஸ்,மற்றும் பலவிதமான பயிற்சிகள் அலுவலகத்திற்கு மட்டும்தானா..? குடும்பத்திற்குள் அவை உபயோகப் படாதா..?

நானும் பலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது...

முகத்திற்குப் போடலாம் முகமூடி.. மனத்திற்கு எதற்கு.....?

மேற்கண்ட விஷயத்தை ஆமோதித்தால் உங்கள் ஆதரவை பின்னூட்டங்கள் மூலமும் உங்கள் அன்பை ஓட்டுகளின் மூலமும் காட்டுங்கள்.

நன்றி..

Friday, March 5, 2010

எல்லாம் பழகிப் போச்சு....


"எப்படிங்க மேட்டுப்பாளையம் ரோட்டுல வண்டி ஓட்டிட்டு வர்றீங்க...?" எப்போதாவது நான் ஆபீஸ்க்கு வண்டி எடுத்திட்டு போனா அதிகமான பேரு கேக்குற கேள்வி.. கோயம்பத்தூர்ல இப்ப வண்டி ஓட்றதே கஷ்டம், அதுவும் மேட்டுப்பாளையம் ரோடுன்னா அவன் அவன் அரண்டு ஓடுறான்..ஆமாங்க ரொம்ப சின்ன ரோடு, அங்க அங்க ஆள விழுங்குற அளவுக்கு குண்டுங்குழி. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜான்னு பாடும்போது எம்.ஜி.ஆர் குலுங்குவாரே அந்த மாறி தான் வண்டி ஓட்டனும்..


மொதல்ல கஷ்டமா தான் இருந்துச்சு.. ஆனா "அப்புறம் பழகிப் போச்சு.." அட இந்த ப்ரைவேட் பஸ் காரனுக ஒருத்தன ஒருத்தன் ஓவர் டேக் பண்றதுக்கு காட்டுற சாகசங்கள் சொல்லி மாளாது.. விஜயகாந்த் மாறி ரெண்டு வீல்ல வண்டி ஓட்ரானுக....கம்பிய புடிச்சி நின்னுட்டு போறவனுக வீடு போய்ச் சேர்ரதுக்குள்ள பாட்டாப் பட்டி கிழிஞ்சு டார் டார் ஆய்டும்..அதுவும் கடைசி படிய விட்டு கால கீழ வெக்கரதுக்குள்ள விசில் அடிப்பான் பாருங்க.. தெறம இருந்தா பொழச்சுக்கலாம்..50 பேர் உயிரை விட, அஞ்சு நிமிஷம் முன்னாடி போறதுதான் அவனுக்கு முக்கியம்.. எப்படி இவனுகளால முடியுது...? "எல்லாம் பழகிப் போச்சு.."


கரண்டு போனா வெளக்கு வெக்க பழகிப் போச்சு..காசு குடுத்தா ஓட்டு போட பழகிப் போச்சு.. வெலையேருனா நொந்துக்கிட பழகிப் போச்சு.. எங்க கம்பெனில வேல பாக்குற ஒரு ஜெர்மன் காரர் தெனமும் நொந்துக்குவார்.. இந்தியா ஏன் இப்படி இருக்குன்னு.. "எல்லாம் பழகிப் போச்சு.." இது தான் பதில்.. முதலில் அவமானமாத் தான் இருந்துச்சு.. அவர் அடிக்கடி அவர் புலம்புறதால் "அதுவும் பழகிப் போச்சு..."


ஏன் இதெல்லாம் பழகிப் போச்சு...? வெளிப்படையாக உள்ள நம்மோட சோம்பேறித் தனத்தினால தான்.. ஒரு தனி மனுஷனா ஒரே பாட்டுல இந்த ஊரத் திருத்தறது நம்ம ஊரு ஹீரோகளால தான் முடியும்(அதையும் பாத்து நமக்கு பழகிப் போச்சு..) நான் எப்போதும் சொல்றது நம்மளோட தனி மனித ஒழுக்கத்தைப் பத்தி தான்.. மாற்றங்கள் என்னைக்குமே கொஞ்சம் கொஞ்சமாத் தான் வரும்..


நாம் ஏமாளியாக இருக்க ஒத்துக் கொள்வதினால் தான் நம்மை ஏமாற்றத் துணிகிறார்கள்.. சில விஷயங்களைக் கூர்ந்து கவனித்த போது கிடைத்தவை இங்கே..

ஒரு கார் விளம்பரம்.. ஒரு அம்மா தன் கைக்குழந்தையுடன் ஒரு காரில் தூங்குகிறாள்.. அந்த வண்டி ஒரு குண்டுங்குழி உள்ள சாலையைக் கடந்து செல்கிறது.. உள்ளுக்குள் ஒரு ஆட்டமும் இல்லை.."இத்தாலியன் இன்ஜினியரிங்.. மேட் பார் இந்தியன் ரோட்ஸ்.." என்னைக்காவது யோசித்திருப்போமா...அவனுடைய பொருளை இங்கே விற்பதற்கு நம்முடைய நிலைமைய கிண்டல் பண்றான்.. உண்மையைத்தான் சொல்றான்.. ஆனால் அவனுக்கு என்ன தைரியம்..? ஏன்னா, நம்மளோட மனச நல்லா படிச்சு வெச்சிருக்கான்..நம்ம ஆளுக காரையும் அதன் தரத்தையும் பார்த்து வியக்க மட்டுமே செய்வாங்க, ரோடு ஏன் இப்டி இருக்குன்னு வருத்தப் பட மாட்டாங்க'ன்னு அவனுக்கு நல்லாத் தெரியும்..

அருமையான ஒரு தொழில்நுட்பத்தை நம்ம ஆளுகளுக்காக மாற்றி அமைக்கிறாங்க.. ஏன்னா நாம மாற மாட்டோம்..

இந்தியாவில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களும், நம் தரத்திற்காக மாற்றப் படுகின்றன... உண்மையைச் சொல்லப் போனால் தரம் குறைக்கப் படுகின்றன.

நான் கார்மென்ட்சுல வேல செஞ்சப்போ, அங்க துணிகள தரம் பிரிப்பாங்க. முதல் தரம் இரண்டாம் தரம் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடும். மூன்றாம் தரப் பொருட்கள்
(அதாவது தரம் குறைந்த)நம் உள்ளூரில் விற்பனைக்கு விடப் படுகின்றன.. அநேகமாக நாம் அணியும் பிராண்டட் ஷர்ட் பேண்ட் எல்லாம் இந்த ரகமாகத்தான் இருக்கும்..ஒரு தாய் தன் தூய தாய்ப்பாலை விற்பனை செய்து விட்டு குழந்தைக்கு மிச்ச மீதியைக் கொடுத்தால் நாம் ஒத்துக் கொள்வோமா நண்பர்களே..?


மற்றவர்களுக்கு நல்ல தரத்தைக் கொடுப்பதை நான் தப்புன்னு சொல்ல வரல.. ஆனால் நமக்கு ஏன் அந்த தரம் தேவை இல்லைன்னு தோணுது. நமக்கு இது போதும் என்று நாம் எப்படி முடிவு செய்தோம்..?

இனி மேற்குறிய என்னுடைய சிந்தனையோடு இந்த விளம்பரங்களைப் பாருங்கள்...

"இதோ வந்து விட்டது சேர்வோ என்ஜின் ஆயில்.. இனி கடினமான சாலைகளிலும் உங்கள் எஞ்சினைப் பாதுகாக்கும்.."

"உங்க ஆபீசுக்கு நடந்து நடந்து செருப்பு தேஞ்சு போச்சு.. அட நீங்க பாரகன் ஆபீஸ் சப்பல் போடலையா..?'

இவை வெறும் சாம்பிள் தான்.. இன்னும் எவ்வளவோ உள்ளன..

உடம்பில் போடும் சோப்புக்கு என்ன தேவை..? நல்ல சுத்தம் செய்யும் சொப்பாக இருக்கணும்.. கிரகப் பிரவேசத்திற்கும் சோப்பிற்கும் என்ன சம்பந்தம்..? விளம்பரங்கள், மட்டுமல்ல, நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் நம்முடைய இன்றைய மன நிலைமையை படம் போட்டுக் காட்டி கொண்டு தான் இருக்கின்றன..ஆனா நமக்குத் தெரியறதில்ல.. ஏன்னா.."நமக்கு எல்லாமே பழகிப் போச்சு.."

சவுதியில இருக்கும் ரோடுல சாப்பாடு போட்டு கொழம்ப ஊத்தி பெசஞ்சு அடிக்கலாமாம்..அவ்வளவு பளபளன்னு இருக்குமாம்.. ஆட்ட அனக்கமே இல்லாம ரொம்ப தூரம் ஒட்டுனவுங்க தூங்கிடக் கூடாதுங்கரக்காக அங்கங்க வேணுமுன்னே சிறு சிறு மேடு பள்ளங்களை வச்சிருக்காங்களாம். நம்ம தரம்....?

ஜெர்மனியில பெரிய பெரிய நகரங்களிலேயே கூட்டமே கிடையாது. அப்ப கிராமங்கள்ள எப்படி இருக்குமுன்னு யோசியுங்க.. இருந்தாலும் நாலு ரோடு சந்திப்புகள்ள, டிரைவர் வண்டிய நிறுத்தி, ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பொறுமையாப் பாத்துதான் வண்டிய எடுப்பாங்களாம்..நம்ம பொறுப்புணர்ச்சி..?

ஜெர்மனியிலிருந்து என்னோட பிரெண்ட் கெளம்பும்போது மிச்சம் மீதி இருந்த சமையல் பொருட்கள் அத்தனையையும் வீணாக்காமல் வாங்கி வைத்துக் கொண்டார்களாம் அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையாளர்.. இதனால் அவர்கள் ஒன்றும் பிச்சைக் காரர்கள் என்று அர்த்தம் இல்லை.. பொருட்கள் வீணாகக் கூடாது என்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை நம் கண்ணுக்கு எப்போதும் போல் வித்தியாசமாகத் தான் தெரியும்.

அவர்கள் கண்ணோட்டங்கள் சற்று மாறுபட்டவை.. நமக்கு கண்ணோட்டம் உள்ளதா இல்லையா என்பதிலேயே எனக்கு சந்தேகம் உள்ளது..


வெளிநாடுகள்ல தடை செய்யப் பட்ட பல மாத்திரை மருந்துகள் நம்ம ஊர்ல விற்பனை ஆவது ஏன்..?

ஒண்ணும் இல்லை நண்பர்களே.. நம்முடைய நிலைமையை நாமே தாழ்த்திக்கொள்வதை நாம முதலில் நிறுத்திக்கணும்...அப்புறம் வெட்டி பந்தாவையும் கொஞ்சம் ஓரம் தள்ளி வைக்கணும்.. தரமான பொருட்கள சரியான விலையில் வாங்கணும்.. யாருக்காகவும் நமது தரத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது...

அதுக்கு முதல்ல நம்மள நாம உயர்வா நினைக்கணும்.. நாம எந்த விதத்திலும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லைங்கற உணர்வு எங்க போனாலும் இருக்கணும். இப்பத்திக்கு இந்த பயிற்சி ஒண்ணு போதும்னு நான் நெனைக்கிறேன்..இதே பெருமித உணர்வோட எல்லா விஷயங்களையும் அணுகினா வித்தியாசம் தெரியும். நமது இந்த நிலைமை மாறும்..

"இத்தாலியன் தொழில்நுட்பம் இப்போது இன்னும் மெருகேறி இந்தியர்களுக்காக...!"
என்றொரு விளம்பரம் நம் காதில் ஒலிக்கும் நாள் வருமா..? அது நம் கையில்தான் உள்ளது..

பி.கு:உங்கள் பின்னூட்டங்களும் ஓட்டுக்களும் நான் செல்வது சரியான பாதையா என்பதைத் தீர்மானிக்கும்... நன்றிகள் பல..